உங்களில் ஒருவனாக !!!
>> Monday, August 10, 2009
பாதை முழுவதும் நிரப்பியிருக்கிறீர்கள்....
முட்களுடன் கூடிய ரோஜா பூக்களை.
முட்களை மிதித்தால்.. கவனம் என்கிறீர்கள்..
பூக்களை மிதித்தாலோ.. பாவம் என்கிறீர்கள்..
பாதைகளை அடைத்து விட்டீர்கள்...
சிறகுகளையும் மறுத்து விட்டீர்கள்...
சிலுவை மட்டும் சுமக்க சொல்கிறீர்கள்...
மறக்காமல்..இரத்தம் ஒழுக நிற்கும் என்னை...
பார்த்தபடி தாண்டி செல்கிறீர்கள்.
என் உடலின் காயங்கள் பற்றி கவலையில்லை
ஆடைகள் கறைபட கூடாது என்பதில் தான்கவனம் உங்களுக்கு....
எனது தூக்கத்தை பறித்து கொண்டு...
என்னையே காவல் வைக்கிறீர்கள்..
உங்கள் கனவுகளுக்கு...எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்.
முகமூடிகள் அணிந்து அணிந்து... மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...கழற்றி எறியவே விருப்பமென்றாலும்...
நீங்கள் எறியும் கற்களை எதிர்கொள்ள துணிவின்றி...
முகமூடி கொண்டே முகம் மறைக்கிறேன்...
புனித மிச்சமும் மனித எச்சமுமாய் கழிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை...ஏனென்று தெரியாமல்... எதற்கென்று புரியாமல்...
நானும் கூட வாழ்கிறேன்...
உங்களில் ஒருவனாக.
0 comments:
Post a Comment