பசுமை மாறாத கல்லூரி காதலெனும் நினைவுகள்..இரண்டாம் பகுதி.. !!!
>> Thursday, September 3, 2009
“மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது, மூங்கில் காடென்று ஆயினள் மாது...
வைரமுத்து,வைரமுத்து தாண்டா. என்னமா எழுதி இருக்காரு பாத்தியா?”
“செரி.. என்ன இப்ப அதுக்கு”
“ஒரு பொண்ணோட ஃபீலிங் உங்களுக்கு எங்கடா தெரிய போகுது. மூங்கில்தான் ரொம்ப வேகமா தீப்பிடிக்கும் தெரியுமா..ச்சே என்னா வரிகள்”
“அய்யா ஆள விடு.. ராஜபாண்டிப்பயலுக்கு இன்னிக்கி பிறந்த நாள்.. சரக்கு பார்ட்டி வர்றியா?”
“அப்பா காச இப்பிடி செலவழிக்கிறது நல்லாவா இருக்கு மச்சி?”
“அந்தப் பிள்ள சொல்லிச்சா? வர்றோம் மாப்ள..உடம்ப பார்த்துக்க”
ஒன்னுமண்ணா இருந்தவர்களை இப்படி மாற்றி விடும் காதல். அவர்கள் கிளம்பியதும்..
“உயிர்ர்ரேரேரே.. உ..யி..ரே.. வந்ந்ந்ந்ந்துது என்ன்னோடுடு கலழந்து விடுடு..”
என அச்சு அசல் ஹரிஹரன் போலவே பாடுவதாக நினைத்து கர்ணகொடுரமாக கத்திக்கொண்டிருக்க வைத்துவிடும் காதல்.திடீரென்று நன்றாக படிக்கும் முதல் பெஞ்ச் கோஷ்டியுடன் (குறிப்பாக வாட்சை உள்புறமாக திருப்பிக்கட்டும் பசங்களுடன்) சேர்ந்து சுற்றுவார்கள். பொறுப்பாம்.
மதிய வகுப்பே பார்த்திராதவர்கள், சாயந்திரம் கல்லூரி முடிந்து,குப்பையை கூட்டி சுத்தப்படுத்தும் நேரம் வந்தாலும் லேசில் கிளம்ப மாட்டார்கள்.. பக்கத்துக் கல்லூரியில் படிக்கும் காதலி ஸ்பெஷல் கிளாஸ் முடித்து கிளம்பும் வரை இங்கே காத்திருப்பார்கள்.. ஒரே பஸ்ஸில் போகணுமா இல்லையா?
இப்படி ஓரிருவர் செட்டை விட்டு காதல் வயப்பட்டு அகல, செட்டில் கலகலப்பு குறைந்து விடும். ஒரு முக்கா லிட்டர் விளக்கெண்ணெயை குடித்தது மாதிரியே நடந்து கொண்டிருந்த காதலிஸ்டு ஒரு சுபவேளையில் எப்பொழுதும் அமரும் டீக்கடைக்கு வருவான்.
“மாப்ள சரக்கடிப்பமா?”
“என்னடா ஆச்சு அந்த பிள்ளைக்கு நீ பண்ணிக்கொடுத்த சத்தியம்?”
“வெறுப்பேத்தாத மாப்ள, அவங்க அப்பனுக்கு மேட்டர் தெரிஞ்சு, நெஞ்ச பிடிச்சுட்டானாம்.. இவ பயந்து போய் “இது சரிப்பட்டு வராது”னு அசால்ட்டா சொல்றா”
“காசு வச்சுருக்கியா?”
“ம்”
“அப்ப வா.. இத விடக்கூடாது.. தண்ணியடிச்சாத்தான் மனசு தாங்கும்.. வாங்கடா வாங்கடா..”
என பழைய ஜமா சேர்ந்து விடும்.. மீண்டும் செட் மீண்டுவிடும்..(சில துரதிருஷ்டசாலிகள் கடைசி வரி தொங்கி,ரிஜிஸ்டரில் சிக்கிக்கொள்வார்கள்..அலைபாயுதே போல் அலை பாயாது..அடிக்கும்)
கல்லூரி ஆண்டுவிழாவில் இரண்டாம் வருட மாணவர்கள் பங்கு நன்றாக இருக்கும்.. சீனியர்கள் சோக கீதம் பாடுவார்கள்.. இரண்டாம் வருட செட் அனைத்து மேட்டர்களிலும் பெயரைக் கொடுத்து விட்டு விழா நடக்கும் நாள் முழுதும் ஒரு கெத்தாகவே நடப்பார்கள்.. கவிதைகள் பறக்கும்..
“உனக்காகவே என் இதய ரோஜா..முட்கள் இல்லாமல்” போன்றவைகள் நிச்சயம்.. ஒன்றிரண்டு மாணவர்கள்.. “புரட்சி வெடிக்க வேண்டும்..குமரிமுனையின் குருதியும் இமயத்தின் இதயமும்..” என்ற ரேஞ்சில் வைரமுத்துத்தனங்களை அள்ளி விடுவார்கள்..
“அரியர் இல்லா மனிதன் அரை மனிதன்” என்ற தத்துவம் சொல்லும் சாக்ரடீஸ்கள் கொஞ்சம் பம்மி,
“ஏன் மாப்ள அடுத்த வருஷத்துல எல்லா அரியரையும் கிளியர் பண்ணிரலாம்ல?”
“ஈஸி பூசி மாப்ள.. அடுத்த வருஷம் ஒழுங்கா பட்டறையப் போட்டு படிப்போம்டா.. ஆமா உனக்கு எத்தன?”
“10”
சொல்லும் பொழுதே அடி வயிறைப் பிடிக்கும் அரியர்களோடும் அதை வென்று விடும் நம்பிக்கையோடும் மூன்றாம் வருட ஆரம்பம் மனதை வருடும்..
இறுதிப்பகுதி.. அடுத்து..
0 comments:
Post a Comment