>

Archives

"டைடானிக்" கப்பல் !!!

>> Saturday, August 29, 2009


"டைடானிக்" - தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம்.
முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. டைடானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகளை 2012 ம் ஆண்டு கடக்கவுள்ளது.

டைடானிக் விபத்தின் பதிவுகள் இன்றுவரை பசுமையுடன் நினைவு கொள்ளப்படுகின்றது , இதனால் இது தொடர்பாக வெளியான புத்தகங்கள் , திரைப்படங்கள் எண்ணிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. இந்தவகையில் டைடானிக் கப்பல் விபத்தினை வெகு நேர்த்தியுடன் நிஜமாக மக்கள் கண்முன் 1997ம் வருடத்தில் வெளிவந்த "டைடானிக்" திரைப்படம் கொண்டுவந்தது.

திரைப்படம் சொல்லிய காதல் கதை தவிர அனைத்து காட்சிகளும் சம்பவ தின நிகழ்வின் சாட்சியங்களின் அடிப்படையில் படமாக்கப்பட்டதாகும். பல நூறு பக்கங்களில் சொல்லமுடியாத சோக சம்பவத்தினை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து 11 ஆஸ்கார் விருதுகளை 1997 இல் மிகப்பெரிய சாதனை திரைப்படம் டைடானிக் பெற்றது .

200 மில்லியன் டாலர் செலவில் தயாரான டைடானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற சாதனை மட்டுமல்ல வசூலிலும் 1.85 பில்லியன் (1850 மில்லியன்) டாலர் மேலாக இதுவரை குவித்துள்ளது . மேலும் டைடானிக் கப்பல் விபத்து பற்றியதான 14 திரைப்படங்களும் , சின்ன திரைகளும் இதுவரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் சோகம் நிறைந்த டைடானிக் கப்பல் விபத்து தொடர்பான முக்கிய தகவல்கள் கீழ்வருமாறு.

டைடானிக்கின் முழு பெயர் RMS Titanic (Royal Mail Steamer Titanic).
அயர்லாந்து (Ireland) நாட்டின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் கட்டப்பட்டது.

டைடானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31 ம் திகதி தொடங்கி 1911 மே 31ம் திகதி முடிவுற்றது.

3,000 வேலையாட்கள் 3 மில்லியன் தறையாணி (கடாவி) களை பாவித்து கப்பலை கட்டிமுடித்தனர்.


அன்றய காலத்தில் டைடானிக்கை கட்டிமுடிக்க 7.5 மில்லியன் டொலர் பணம் செலவிட்டனர், அதன் இன்றய பெறுமதி 4,000 மில்லியன் டொலர் என கணக்கிடப்படுகின்றது.


முதலாவது பயணம் (கன்னி) 1912 ஏப்பிரல் 10 ம் திகதி தொடங்கப்பட்டது.

கப்பலின் நீளம் 882 அடி (269.1 மீற்றர்) , உயரம் 175 அடி (53.3 மீற்றர்) , மொத்த எடை 46,328 தொன் , வேகம் 21 நொட் (39 கிலோமீற்றர்/மணி) இதன் அதிகவேகம் 23 நொட் (43 கிலோமீற்றர்/மணி).
டைடானிக் கப்பல் அதிகபட்சம் 3,547 பயணியளையும் சிப்பந்திகளையும் கொள்ளக்கூடியது.


டைடானிக் கப்பல் கட்டுமானத்தில் அன்று இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்பமும் அதிகபட்சம் பாவித்து கட்டப்பட்டது.
ஒருநாளைக்கு 825 தொன் நிலக்கரியை டைடானிக் இயந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.


டைடானிகில் மொத்தம் 9 தட்டுக்கள் (மாடிகள்) , அத்துடன் ஆழம் 59.5 அடி எனவும் உயரம் 60.5 அடி எனவும் சொல்லப்படுகின்றது.
மொத்தமாக 4 புகை போக்கிகள் , இவற்றின் மொத்த உயரம் 175 அடி , இதில் 3 புகை போக்கவும் 1 காற்று போக்கியாகவும் பயன்பட்டது.
ஒருநாளைக்கு கப்பலுக்கு தேவைப்படும் சுத்தமான தண்ணீர் 14,000 கலன் கொள் அளவு.


டைடானிக்11 மாடி உயரமான கட்டிடதிற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது , இந்த கப்பலை வர்ணமூட்ட பெருமளவில் கறுப்பு மையுடன் வெண் வர்ணமும் பாவிக்கப்பட்டது.


முதலாவது நீச்சல் தடாகம் உள்ள கப்பலாக டைடானிக் வடிவமைக்கப்பட்டது.

விபத்து நடந்த தினம் .....1912 ஏப்ரல் 10 ம் திகதி அயர்லாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக 2,228 பேருடன் (1,343 பயணிகள் , 885 மாலுமிகள்) மறுநாள் (1912 ஏப்பிரல் 13 ம் நாள்) நியூயோர்க் நோக்கி டைடானிக் புறப்பட்டது.


அமைதியான கடலில் கரும் இருட்டில் (அமாவாசை) 5 நொட்டுக்கள் வேகத்தில் டைடானிக் பயணித்துக் கொண்டிருந்தது.


அன்றய தினம் (1912 ஏப்பிரல் 14 ம் நாள்) பயணிகள் தகவல் பரிமாறும் வானொலி தொடர்பில் பனிப்பாறை பற்றிய முன் எச்சரிக்கை இரு முறை ஒலிக்கப்படுகின்றது.


220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறையுடன் இரவு 11.40 மணிக்கு டைடானிக் மோதல் நடைபெற்றது.


டைடானிக் கப்பலின் கீழ் பகுதியில் உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது.


அன்றிரவு 12 மணி இலிருந்து மூழ்க ஆரம்பித்த கப்பல் காலை 2.20 மணி (15ம் ஏப்பிரல்) முழுமையாக மூழ்கியது.


அன்றய பனிப்பாறை விபத்தில் மாட்டிய டைடானிக் கப்பலில் இருந்த 20 உயிர்காப்பு படகுகளில் 705 சிறுவர்கள் , பெண்கள் மட்டும் உயிர் தப்பியதுடன் மிகுதி 1,523 பேர் கடலில் மாண்டனர்.


டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால் அவதானிக்கப்பட்டது.


அன்று கடல் விபத்தில் பலியான 1,523 பேரில் (பயணிகள், மாலுமிகள்) 300 பேரின் உடல்கள் மட்டும் பின்னர் மீட்கப்பட்டது.74 வருடங்களின் பின்................


அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடியில் (12,600 அடி அல்லது 3,925 மீற்றர் அல்லது இரண்டரை மைல் ஆழத்தில் ) இயந்திர நீர்மூழ்கி (Alvin,robot) உதவியுடன் டைடானிக் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.


டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பகுதிகளாக உடைந்த பாகங்கள் சமுத்திர அடியில் 1,970 அடி தூரத்தில் இருக்க காணப்பட்டது.சில தகவல்...


அன்றய பயணத்தில் முதல் வகுப்பில் மட்டும் 870 பயணிகள் பயணம் செய்தனர். முதல் வகுப்பிற்கு ஒவ்வொருவரும் 4,350 டொலர்களை அன்று செலுத்தினர் எனவும் இது இன்றய பெறுமதியில் 80,000 டொலருக்கு சமமானது எனவும் சொல்லப்படுகின்றது.

டைடானிக் தொடர்பாக காலத்திற்கு காலம் வெளியான 14 திரைப்படங்களும் , சின்ன திரைகளும் வருமாறு.

Saved from the Titanic (1912) , Titanic (1915), Atlantik (1929) , Titanic (1943) , Titanic (1953) , Night to Remember, A (1958) , S.O.S. Titanic (1979) , Raise the Titanic (1980) , Titanic (1984) , Titanic (1993) , Titanic (1996) , No Greater Love (1996) , Titanic (1997) , Titanic: Birth of a Legend (2005).

Read more...

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் !!!

எங்கிருந்து வருகிறது என்பது எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த எதிரி நாட்டில் உள்ள இலக்குகளைத் தாக்கி நிர்மூலம் செய்யக்கூடிய சக்திமிக்க ஆயுதம் இருக்க முடியுமா? அதுதான் உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுஆயுத ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இதை பிரும்மாஸ்திரம் என்றும் வர்ணிக்கலாம். இந்தியா இப்போது இவ்விதமான நீர்மூழ்கிக் கப்பலை (சப்மரீன்) உருவாக்கியுள்ளது. அது அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.


உலகில் இப்போது அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் இவ்வகை சப்மரீனைத் தயாரித்துள்ளது. இதை உருவாக்க இந்தியா பெரும்பாடுபட்டது என்று சொல்லலாம்.


டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் சாதாரண சப்மரீன்களைக் கட்டுவது என்பது எளிது. ஆனால் அணுசக்தியால் இயங்கும் சப்மரீனைக் கட்டுவது என்பது எளிதல்ல. இந்தியா டீசலினால் இயங்கும் சப்மரீன்களை ஏற்கெனவே தயாரித்து வருகிறது. டீசல் சப்மரீன்களை வெளிநாடுகளிடமிருந்து விலைக்கு வாங்க இயலும். ஆனால், அணுசக்தி சப்மரீன்களை எந்த நாடும் விற்பது கிடையாது. அதைத் தயாரிப்பதற்கு உதவி அளிப்பதும் கிடையாது. ஆகவே இந்தியா சொந்தமாக அணுசக்தி சப்மரீனை வடிவமைத்துத் தயாரிக்க வேண்டியதாயிற்று.


டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சப்மரீன்களால் தொடர்ந்து பல நாள்கள் நீருக்குள் மூழ்கியபடி செல்ல இயலாது. ஏனெனில் அடிக்கடி டீசலை நிரப்பியாக வேண்டும். நீருக்குள் இருக்கும்போது டீசல் எஞ்சின் இயக்கப்படுவதில்லை. அது சத்தம் எழுப்பும். அதன் காரணமாக அது இருக்கின்ற இடத்தை எதிரி சப்மரீனால் கண்டுபிடித்து எளிதில் தாக்க இயலும்.


இரண்டாவதாக டீசல் எஞ்சின் இயங்குவதற்கு காற்று அதாவது ஆக்சிஜன் தேவை. ஆகவே, மேலே வந்து நீரில் மிதந்த நிலையில் டீசல் எஞ்சின்கள் இயக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் நீருக்குள் மூழ்கிய நிலையில் பாட்டரி மூலம் - மின்சாரம் மூலம் சப்மரீன் செயல்படும். இக் காரணத்தால் இந்த வகை சப்மரீன்கள் டீசல் - எலக்ட்ரிக் சப்மரீன் என்று அழைக்கப்படுகின்றன. எதிரியால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அதனால் இயங்க இயலாது.


அணுசக்தி சப்மரீன் இந்த வகையில் மேலானது. இந்த சப்மரீனில் அணுசக்திப் பொருள் அடங்கிய அணு உலை ஒன்றைப் பொருத்திவிட்டால் போதும். மறுபடி 10 அல்லது 30 ஆண்டுகளுக்கு எரிபொருள் பிரச்னையே இராது. அணுசக்தி சப்மரீன் ஒன்றினுள் போதுமான உணவுப் பொருள் இருக்குமானால் அது தாய்த் துறைமுகத்துக்கு வராமல் நீருக்குள் இருந்தபடி உலகைப் பலமுறை சுற்றி வரலாம். அணுசக்தி சப்மரீன் நீருக்குள் இயங்கும்போது ஒலி எழுப்பாது.


அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலை இயங்குவதற்கு காற்று தேவையில்லை. எனவே நீருக்கு அடியிலிருந்து வெளியே தலைதூக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீருக்குள் கடலுக்குள் எங்கிருக்கிறது என்பதை அனேகமாகக் கண்டுபிடிக்க இயலாது.


அணுசக்தி சப்மரீனில் 12 நீண்ட தூர ஏவுகணைகள் இடம்பெறும். இவை ஒவ்வொன்றின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்த முடியும். இந்த சப்மரீன் அட்லாண்டிக் கடல், பசிபிக் கடல், இந்துமாக் கடல் என உலகின் எந்த ஓர் இடமாக இருந்தாலும் அங்கே இருந்தபடி எதிரி நாட்டை நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.
அமெரிக்கா, ரஷியா முதலான நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்கள் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவுகணைகளைப் பெற்றுள்ளன.



இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீனில் இப்போதைக்கு 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளே இடம் பெறும். எதிர்காலத்தில் மேலும் அதிக தொலைவு செல்லும் ஏவுகணைகள் இடம்பெறலாம்.



இந்தியா அணுசக்தி சப்மரீனை உருவாக்க சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகின. பல பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததே இதற்குக் காரணம். மின்சார உற்பத்திக்கான அணுஉலைகளை உருவாக்குவதில் இந்தியாவுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால் மின்சார நிலையங்களுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. சப்மரீனுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. மின்சார நிலையங்களுக்கான அணு உலைகள் வடிவில் பெரியவை. பொதுவில் அணு உலைகள் கடும் கதிர்வீச்சை வெளிப்படுத்துபவை.


இக் கதிர்வீச்சு ஆபத்தானவை. பெரிய அணுமின் நிலையங்களில் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படாதபடி தடுக்க கனத்த சுவர்கள் இருக்கும்.



இவற்றுடன் ஒப்பிட்டால் அணுசக்தி சப்மரீனில் இடம்பெறுகின்ற அணு உலையானது வடிவில் சிறியதாகவும் சக்திமிக்கதாகவும் உள்ளது. சப்மரீனில் பணியாற்றுகின்ற ஊழியர்களை கதிர்வீச்சு தாக்காதபடி சிறப்பான பாதுகாப்பு உள்ளது.



சப்மரீனில் இடம்பெறும் அணு உலையில் பயன்படுத்தப்படுகிற அணுசக்திப் பொருள் வேறானது. பொதுவில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் சப்மரீனின் அணு உலையில் இடம்பெறும். இந்தியா இதையும் தயாரிக்க வேண்டி வந்தது.
அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலையில் செறிவேற்றப்பட்ட யுரேனியப் பொருள் கடும் வெப்பத்தை வெளியிடும்.



இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீராவி ஒரு டர்பைனை இயக்கும். இதன் பலனாக சப்மரீனில் சுழலி இயங்க சப்மரீன் நீருக்குள் இயங்கும். அத்துடன் இந்த டர்பைன் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் கடல் நீரைக் குடிநீராக்க முடியும். சப்மரீனுக்குள் இருக்கும் காற்றைச் சுத்திகரிக்க இயலும்.



சப்மரீனுக்கான அணு உலை எடை மிக்கது. ஆகவே சப்மரீனில் ஸ்திர நிலை பாதிக்கப்படாத வகையில் அணு உலை சப்மரீனில் நடுப்பகுதியில் இடம்பெறும். அந்தவகையில் சப்மரீன் வடிவமைக்கப்படுகிறது. இந்தியா இது தொடர்பான பிரச்னையை வெற்றிகரமாகச் சமாளித்தது. இப்போது இந்திய அணுசக்தி சப்மரீனில் இடம்பெறும் அணு உலை கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சப்மரீனைக் கட்டுவதற்கான விசேஷ வகை உருக்கைப் பெறுவதிலும் இந்தியாவுக்குப் பிரச்னை ஏற்பட்டது.



எல்லா வகை சப்மரீன்களிலும் ஒருவகை சோனார் கருவிகள் உண்டு. இவை ஒலி அலைகளை வெளிப்படுத்தும். இந்த ஒலி அலைகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள சப்மரீன்கள் மீது பட்டு எதிரொலித்துத் திரும்புவதை வைத்து அந்த சப்மரீன்களைக் கண்டுபிடித்து விட முடியும்.


எதிரி சப்மரீனின் சோனார் கருவிகளை ஏமாற்றும் வகையில் இந்திய சப்மரீனின் வெளிப்புறத்தில் நுண்ணிய துளைகள் கொண்ட ரப்பர் பொருள் ஒரு பூச்சாக அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே இந்திய அணுசக்தி சப்மரீனை எதிரி சப்மரீன்களால் எளிதில் அடையாளம் காண முடியாது.



இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரிக்கும் திட்டம் நீண்ட காலம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் இந்த சப்மரீன் பற்றிய தகவல்கள் வெளியே தெரிய வந்துள்ளன.



இந்தியாவின் டீசல் - எலக்ட்ரிக் சப்மரீன்களால் அதிக தொலைவு செல்ல இயலாது என்ற காரணத்தால் அவை இந்தியக் கடலோரப் பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. இப்போது இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீன் உலகின் எந்த மூலைக்கும் செல்லக்கூடியது.


இதுபோன்று மேலும் பல அணுசக்தி சப்மரீன்களைக் கட்டுவதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது. இவையும் கடலில் இயங்க ஆரம்பித்ததும் எந்த நாடும் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயங்கும்.



எந்த ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் சரி, எந்தவிதத் தொழில் நுட்பமாக இருந்தாலும் சரி, அது அணுசக்தி தொடர்பான பணிக்குப் பயன்படுத்தப்படலாம் என்றால் அதை யாரும் இந்தியாவுக்கு வழங்கக்கூடாது என அமெரிக்கா விதித்த தடை (இந்தியா - அமெரிக்கா அணுசக்தி உடன்பாடு கடந்த ஆண்டில் கையெழுத்தானது வரையில்) அமலில் இருந்த காரணத்தால் அணுசக்தி சப்மரீன் தொடர்பாக வெளிநாடுகளிலிருந்து பல பொருள்களை காசு கொடுத்தாலும் வாங்க முடியாது என்ற நிலை இருந்தது.


இப்படியான பல பிரச்னைகளைச் சமாளித்துத்தான் இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரித்துள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.


Read more...

உங்களுக்கு தெரியுமா ?

(வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)



நீங்கள் சீனாவில் ஒரு மில்லியனில் ஒருவராக இருந்தால் உங்கள் மாதிரி 1,300 மக்கள் இருப்பார்கள்.



இந்தியாவின் மொத்த சனத் தொகையின் 25% மக்கள் மிக்க அறிவுத்தகமை (IQ) உடையவராவர். இந்த தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையிலும் அதிகமாகும்.



அமெரிக்க சிறுவர்களை விடவும் இந்திய சிறுவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.



2010இல் அதிக முதலிடத்தில் (demand) என பேசப்பட இருக்கும் 10 தொழில்கள் 2004 ம் வருடத்தின் முன்னய கலங்களில் மனிதனால் செய்து பாத்திருக்காத அல்லது என்றுமே கேள்வி பட்டிருக்காத வேலைகளாக இருக்கும்.



மேலும் , வேலை செய்பவர்கள் தமது வேலையில் உபயோகிக்க இருக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. எதிகால வேலைகளில் அமுல்படுத்தவுள்ள தீர்வுகளுக்கான பிச்சினைகள் இன்னும் தோன்றவும் இல்லை.





அமெரிக்க தொழிலாளர் திணைக்களத்தின் கருத்துப்படி எதிர்காலத்தில் ஒருவர் 38 வயதை அடையும் முன்பதாக 10 தொடக்கம் 14 வேலைகளை செய்தவராக இருப்பர்.



இதே திணைக்களத்தின் தகவல் படி நிறுவனங்களில் வேலை செய்வோரில் 4 இல் ஒருவர் 1 வருடத்திலும் குறைவான கலத்திலேயே வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பர். மேலும் இதே தரவில் 2 க்கு ஒருவர் 5 வருடத்திலும் குறைவான கலத்தில் நிறுவனங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டும் இருப்பார்களாம்.





கடந்த வருடம் அமெரிக்காவில் திருமணம் செய்யும் தம்பதிகளில் 8 இல் ஒருவர் இணையம் மூலமாக இணைந்தவராவர்.

மைஸ்பேஸ் (
My Space) இணையத்தில் பதிவுசெய்த அங்கத்தவர்கள் எண்ணிக்கை 200 மில்லியன்.

மைஸ்பேஸ (My Space) ஒரு நாடாக கருதுமிடத்தில் இது உலகின் 5வது அதிகம் சனத்தொகை கொண்ட இடத்தை தக்கவைக்கும். ( இது பட்டியலில் இந்தோனேசியா, பிரேசில் நாடுகளின் இடையில் இடம்பிடிக்கும்.)



இணைய தொடர்பில் அதிவேக (broadband) இணைப்புக்களை கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் ............

பெஃர்முடா (
Bermuda) முதலாம் இடத்திலும்

அமெரிக்கா 19 வது இடத்தை வகிக்கின்றது.

யப்பான் 22 வது இடம்.

( (நாங்கள் அதீத வேகமுள்ள விஞ்ஞான உலகில் வழ்கின்றோம்))



ஒவ்வொரு மாதமும் கூகிள் (Google) மூலமாக 31 பில்லியன் மேற்ப்பட்ட தேடுதல்கள் நடாத்தப்படுகின்றது. அத்துடன் கூகிளில் 2006ம் ஆண்டில் 2.7 பில்லியனாக மாதாந்த தேடுதல் இருந்தது.



குறும் எழுத்து தகவல் (
text messages) 1992 ம் டிசம்பர் மாதத்தில் இருந்து வர்த்தக நோக்குடன் அறிமுகமானது. தினமும் குறும் எழுத்து தகவல் (text messages) பரிமாற்றங்களின் மொத்த எண்ணிக்கை உலக சனத் தொகையை விட அதிகமாகும்.



உலகின் பல பாகங்களிலுமுள்ள 50 மில்லியன் மக்களை சென்று அடைவதற்கு பின்வரும் சாதனங்கள் எடுத்துக்கொண்ட காலங்கள்.



வானொலி (Radio) 38 வருடங்கள்.



தொலைக்காட்சி (TV) 13 வருடங்கள்.

இணையம் (internet) 4 வருடங்கள்.



பேஸ்புக் (
facebook) 3 வருடங்கள்.

ஐபொட் (iPod) 2 வருடங்கள்.



ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.

இணையதளம் 1984 இல் இருந்து மக்கள் பாவனைக்கு வந்ததன் பின்பான காலத்தில் அதன் பாவனையாளர் எண்ணிகை கீழ்வருமாறு.



1984 இல் 1,000 இணைய பாவனையாளர்



1992 இல் 1,000,000 இணைய பாவனையாளர்



2008 இல் 1,000,000,000 இணைய பாவனையாளர்



ஒருவாரத்தில் நியூயொர்க் டைம்ஸ் வெளியிடும் தகவல்கள் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் வாழ்நாளில் அறிந்திருக்கக் கூடிய தகவல்களுக்கு சமம்.



உலகம் முழுவதும் இந்த வருடம் மட்டும் உருவாக்கப் படக்கூடிய புதிய தகவல்களின் தொகை 4 எக்ஸாபைற் (4
exabyte=4 உடன் பெருக்கமாக 10 இன் 18ம் அடுக்குகள் ) என கணகிடப்படுகின்றது.

இது கடந்த 5,000 வருடகாலத்தில் உருவாக்கப்பட்ட மொத்த தகவல்களையும் விட அதிகமாகும்.



தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு 2 வருடம் ஒருமுறை புதியவடிவம் பெற்று இரட்டித்து செல்கின்றது. இவ்வாறு புதிய வடிவம் பெற்றுவருவதால் 4 வருடம் முன்பதாக கற்ற ஒருவிடையம் இன்று பலனற்று விடுகின்றது.



3வது தலைமுறை (
3rd generation) கண்ணாடி இழைகள் (fiber optics) பரீட்சிக்கப் பட்டுவிட்ட 3வது தலைமுறை கண்ணாடி இழை (fiber obtics) யப்பானின் NTTஇனால் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டு விட்டது.ன.

இதில் தகவல் ஒரு செக்கனுக்கு 10 ரில்லியன்(10,000 பில்லியன்) பிற் எனும் வேகத்தில் பயணிக்கும். இது 1,900 குறும் தட்டு(CDs) அல்லது 150 மில்லியன் தொலை பேசி தொடர்புகளை ஒரேநேரத்தில் தொடுப்பதற்கு சமானமாகும். மேலும் இந்த வேகமானது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு மூன்று மடங்காகி வருவதாகவும் இது அடுத்த 20 வருடங்களுக்கு தொடருமென சொல்லப்படுகின்றது.



2013 ம் ஆண்டில் மனித மூளையை மிஞ்சிய செய்திறனுள்ள அதிசக்திவாய்ந்த (
Supercomputer) தயாராகிவிடும்.



2049 ம் ஆண்டில் 1000 டொலருக்கு கொள்முதல் செய்யக்கூடிய அதிசக்திவாய்ந்த (Super Computer) கணனிகள் முழு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த செய்திறனுக்கு சமமாக இருக்கும்.குறித்த வீடியோ பார்க்கும் கால அளவுக்குள்................



அமெரிக்காவில் 67 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.



சீனாவில் 274 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.



இந்தியாவில் 395 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.



அத்துடன் இணையத்தில் 694,000 பாடல்கள் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப் பட்டுவிடும்.ஆகவே இவை எல்லாம் தரும் அர்த்தம் என்ன ?



Read more...

எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!!

ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின்புலத்தில் உருவாகியிருந்த பி.எல்.ஓ. பாலஸ்தீனில் மட்டுமல்லாமல் ஏனைய அரபு தேசங்கள் அனைத்திலும் பயிற்சிப் பாசறைகளை உருவாக்கி, தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.


அதுவரை பி.எல்.ஓ.வில் சேராத யாசர் அராஃபத்தின் அல் ஃபத்தா மட்டும் குவைத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தது.எல்லோருமே பெரியதொரு யுத்தத்தைத்தான் எதிர்நோக்கியிருந்தார்கள். எப்போது அது வெடிக்கும், யார் காரணமாக இருப்பார்கள் என்பதுதான் தெரியாமல் இருந்தது.ஜோர்டன் காரணமாயிருக்குமோ? எல்லைப் பிரச்னையில் இப்படி முட்டிக்கொள்கிறார்களே என்று பார்த்தால், வடக்கே சிரியாவின் எல்லையிலும் சிண்டுபிடிச் சண்டைதான் நடந்துகொண்டிருந்தது.


தெற்கே எகிப்துடன் எத்தனை முறை அமைதிப்பேச்சு நடத்த இஸ்ரேல் முயற்சி செய்துகொண்டிருந்தாலும் இஸ்ரேலை ஒரு பொருட்டாக மதித்துப் பேச அங்கும் யாரும் தயாராக இல்லை.இஸ்ரேலுக்கும் மிக நன்றாகத் தெரிந்துதான் இருந்தது. ஆயிரம் இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்கள். லட்சமே இருந்தாலும் தாங்கள் யூதர்கள். இது ஒட்டாது.


ஒருபோதும் ஒட்டவே ஒட்டாது.ஆகவே, இரு தரப்பிலுமே அமைதியை உதட்டில் தேக்கி வைத்துக்கொண்டு, உள்ளுக்குள் ஆயுதப்பயிர்தான் செய்துகொண்டிருந்தார்கள்.1952-ம் ஆண்டு எகிப்தில் ஒரு சம்பவம் நடந்தது. பின்னால் நடக்கப்போகிற மாபெரும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் போன்றதொரு சம்பவம் அது.பிரிட்டன் அரசின் கைக்கூலிபோலச் செயல்பட்டு, அதுவரை எகிப்தில் உப்புப் பெறாத ஆட்சி நடத்திக்கொண்டிருந்த மன்னர் ஃபாரூக் என்பவரை, ராணுவம் தூக்கியடித்தது.


பலகாலமாக உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த பிரச்னைதான். அந்த வருஷம் வெடிக்க வேண்டுமென்றிருந்திருக்கிறது. அவ்வளவுதான்.அந்த வருடம் ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற அந்த ராணுவப் புரட்சியின் சூத்திரதாரி, எகிப்து ராணுவத்தின் முக்கியத் தளபதிகளுள் ஒருவராக அப்போதிருந்த கமால் அப்துல் நாசர் (Gamal Abdel Nasser). கவனிக்கவும்.நாசர் அப்போது தலைமைத் தளபதி கூட இல்லை. அவர் ஒரு லெப்டினண்ட் ஜெனரல். அவ்வளவுதான். எகிப்து ராணுவத்தின் மூத்த தளபதியாக இருந்தவர் பெயர் முகம்மது நஜிப் (Muhammad Naguib). அவருக்குக் கீழேதான் நாசர் பதவி வகித்து வந்தார்.மூத்த தளபதிகள் அனைவரும் கலந்து பேசி, மன்னரை ஒழித்துவிடலாம் என்று முடிவு செய்து பொறுப்பை நாசரிடம் விட்டார்கள்.


நாசரும் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைச் சரியாகச் செய்து முடித்து, எந்த வஞ்சகமும் செய்யாமல் முகம்மது நஜிப்பை நாட்டின் சர்வாதிகாரியாக அமர வைத்தார்.இந்தச் சம்பவம் பல மேலை நாடுகளை, குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை மிகவும் கவலையுறச் செய்தது.மன்னர் ஃபாரூக் இருந்தவரை, இங்கிலாந்தின் அறிவிக்கப்படாததொரு காலனி போலவேதான் இருந்தது எகிப்து. என்ன செய்வதென்றாலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தைக் கேட்காமல் அவர் செய்யமாட்டார்.




முக்கியமாக, கடல் வாணிபத்தில் இங்கிலாந்து கொள்ளை லாபம் சம்பாதிக்க ஃபாரூக் ஏகப்பட்ட உதவிகள் செய்து வந்திருக்கிறார்.ஆனால், திடீரென்று ஏற்பட்ட புரட்சியும் ஆட்சி மாற்றமும் எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாராலும் உடனே கணித்துக் கூற முடியவில்லை.ஏனெனில், புரட்சி செய்தது நாசர் என்றாலும், பதவி ஏற்றது நஜிப். ஒரு கட்சி என்றால் அதன் சரித்திரத்தை, சமகாலத்தைப் பார்த்து எப்படி இருக்கும், என்ன செய்யும் என்று கணிக்கலாம்.


ஒரு தனிநபரை என்ன செய்து கணிக்க முடியும்? அவரது பின்னணியும் சரித்திரமும் தெரிந்தால் தானே சாத்தியம்?உலக நாடுகளுக்கு அப்போது நாசரையும் தெரியாது, நஜிப்பையும் தெரியாது. நஜிப் பிரசிடெண்ட் ஆனார் என்றால், நாசர் அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உட்கார்ந்தார்.இங்கேதான் பிரச்னை ஆரம்பித்தது.


நாசர், நிறையப் படித்தவர். அரசியலில் பெரிய ஞானி. சுய சிந்தனையாளரும் கூட. பதவி ஏற்ற உடனே எகிப்தின் நலனுக்கு என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்தால் யார் யார் அதனால் பாதிக்கப்படக்கூடும், யார் சண்டைக்கு வரக்கூடும், என்ன செய்து சமாளிக்கலாம் என்று ஒரு பட்டியல் தயார் செய்தார் நாசர்.


இதனுடன்கூட ஒட்டுமொத்த மத்தியக்கிழக்குப் பிரச்னைகளையும் சேர்த்து வைத்து ஆராய்ந்து, அவற்றில் எகிப்தின் பங்களிப்பு மற்றும் ஈடுபாடு என்னவாக இருக்கலாம் என்றும் யோசித்து ஒரு பட்டியல் தயாரித்தார்.நாசரின் மூன்றாவது பட்டியல், ஐரோப்பிய தேசங்களால் தமக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள் பற்றியது.ஒரு சக்திமிக்க தலைவனாக, தான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால், எகிப்தை ஒரு சர்வவல்லமை பொருந்திய தேசமாக மாற்றுவதோடு, மத்தியக்கிழக்கின் ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாக நிறுவிவிடமுடியும் என்பதே அவரது எண்ணம்.பகிர்ந்துகொள்ளவில்லை.


மாறாக, சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து, முகூர்த்தம் கூடி வந்த ஒரு வேளையில், தானே பதவியில் அமர்த்திய அதிபர் முகம்மது நஜிப்பை வீட்டுக்கு அனுப்பினார்.ஒருவரைப் பதவி நீக்க, ராணுவத்தினர் முடிவு செய்தால் அதற்காகப் பெரிய காரணங்களையெல்லாம் தேடவேண்டியதில்லை. ஊழல் ஒரு எளிய காரணம். அதைக்காட்டிலும் உத்தமமான எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.நஜிப்பைப் பதவியிலிருந்து தூக்க நாசர் சொன்ன காரணம், அவர் எகிப்தின் நலனுக்காகச் சிந்திப்பதை விடுத்து முஸ்லிம் சகோதரத்துவத்தைத் தூக்கிப்பிடித்து ஆதரித்து பொழுதை வீணடித்துக்கொண்டிருக்கிறார் என்பது.


1954-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நஜிப் தூக்கியடிக்கப்பட்டார். நாசர், எகிப்தின் பிரசிடெண்டாகத் தன்னை அறிவித்துக்கொண்டு பதவியில் அமர்ந்தார். கொஞ்சம் கலவரம், அடிதடி, தீவைத்தல், கைகலப்பு, மோதல் எல்லாம் இருந்தது. ஆனாலும் நாசர் வெற்றியடைவதில் பெரிய பிரச்னை இருக்கவில்லை.


பதவிக்கு வந்ததுமே நாசர், தான் முன்னர் தீட்டிவைத்திருந்த திட்டங்களை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துக்கொண்டு முழு வேகத்தில் வேலையைத் தொடங்கினார். மூன்று விஷயங்களில் அவர் தம் முதல் கவனத்தைச் செலுத்தினார்.முதலாவது, தொழில்துறையைத் தேசியமயமாக்குவது. இரண்டாவது நிலச்சீர்திருத்தம்.


மூன்றாவது, நீர்த்தேக்கங்கள் கட்டி விவசாயத்தைப் பெருக்குவது மற்றும் கடல் வர்த்தகத்தில் தீவிர கவனம் செலுத்துவது.இதன் அடிப்படையில்தான் அவர் தமது தேசத்தின் எல்லைக்குட்பட்ட அகபா வளைகுடா (Gulf of Aquaba) மற்றும் சூயஸ் கால்வாய் பகுதிகளை இழுத்து மூடினார்.வளைகுடாப் பிராந்தியத்தையும் கால்வாயையும் இழுத்து மூடுவதென்றால்?பிற நாட்டுக் கப்பல்கள் அந்த வழியே போவதைத் தடைசெய்வது என்று அர்த்தம்.நாசர் சூயஸ் கால்வாய்க்கு சீல் வைத்த சம்பவம் உலக சரித்திரத்தில் இடம்பெற்ற மிகப் பரபரப்பானதொரு சம்பவம்.


இத்தனை தைரியம், இத்தனை நெஞ்சுரம், இத்தனை துணிச்சல் கொண்ட எந்த ஒரு அரபுத் தலைவரையும் அதற்கு முன் உலகம் சந்தித்ததில்லை.அமெரிக்கா அரண்டு போனது. பிரிட்டன் பதறிக்கொண்டு எழுந்தது. பிரான்ஸ் மூக்குமேல் விரல் வைத்தது. உலகமே நாசரை வியந்து பார்த்தது.ஆனால், இதனால் உடனடிப் பாதிப்பு யாருக்கென்றால் இஸ்ரேலுக்குத்தான்.


இஸ்ரேலின் கப்பல்கள்தான் சூயஸ் கால்வாயை அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்தன. வர்த்தகக் கப்பல்கள். எண்ணெய்க் கப்பல்கள். அவ்வப்போது போர்க்கப்பல்கள்.நாசர் என்ன சொன்னார்?'சூயஸ் கால்வாய் நமது தேசிய சொத்து. இதை நான் நாட்டுடைமை ஆக்குகிறேன். இதனைப் பயன்படுத்தி வேறு பல நாடுகள் கடல் வர்த்தகத்தில் கொழித்துக்கொண்டிருக்கின்றன. அதை அனுமதிக்க முடியாது.இதை நாட்டுடைமை ஆக்கி நமது வர்த்தகத்தைப் பெருக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயில், 'நான் நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை (கிsஷ்ணீஸீ பிவீரீலீ ஞிணீனீ) கட்டுவேன்.


விவசாயத்தைப் பெருக்குவேன்.' ''இந்த அறிக்கைதான் இஸ்ரேலைச் சீண்டியது. பிரிட்டனுக்குக் கோபம் வரவழைத்தது. ஒட்டுமொத்த உலகையும் வியப்படையச் செய்தது.நாசரின் அஸ்வான் அணைத்திட்டம் மிகப்பெரியதொரு திட்டம். சொல்லப்போனால் அமெரிக்காவும் பிரிட்டனும் ஆளுக்குச் சரிபாதி நிதி உதவி செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் ஒட்டுமொத்த எகிப்துக்கும் மாபெரும் பலன் கிடைக்கும் என்று பேசி ஒப்பந்தமெல்லாம் செய்திருந்தார்கள்.


ஆனால் நாசர் திடீரென்று சூயஸ் கால்வாய் விஷயத்தில் தடாலடி அறிக்கை விடுத்து, கப்பல் போக்குவரத்தைத் தடை செய்ததோடல்லாமல், கம்யூனிஸ்ட் செக்கோஸ்லாவாக்கியாவிடமிருந்து ஆயுதங்களை வேறு வாங்கிச் சேர்த்தபடியால், அமெரிக்காவும் பிரிட்டனும் அந்தக் கணமே தமது ஒத்துழைப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டன.இதோடாவது நாசர் நிறுத்திக்கொண்டாரா என்றால், அதுதான் இல்லை!


முதலாளித்துவ தேசங்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இப்பட்டியலில் இஸ்ரேலையும் சேர்த்தார்.அந்த தேசங்களுக்கு எதெல்லாம் பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து, அதை மட்டும் செய்ய ஆரம்பித்தார்.உதாரணமாக கம்யூனிஸ்ட் தேசமான சீனாவுடன் நல்லுறவுக்கு வேலை செய்தார், சோவியத் யூனியனை நட்பாக்கிக்கொண்டார்.இதையெல்லாம் பார்த்து அப்போதைய பிரிட்டன் பிரதம மந்திரி சர் ஆண்டனி ஈடனுக்கு (Sir Anthony Eden) ரத்தக்கொதிப்பே வந்துவிட்டது.



'ஒரு யுத்தம் நெருங்கிக்கொண்டிருக்கிறது' என்று பகிரங்கமாகவே அவர் தம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியொன்றில் குறிப்பிட்டார்.'நாசரின் தேசியவாதம் நல்லதுக்கே இல்லை. இது இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் பேசிய தேசியவாதம் போன்றதுதான். அவர்களுக்கு நேர்ந்த கதிதான் நாசருக்கும் நேரும்' என்றே குறிப்பிட்டார் அவர்.எல்லாவற்றுக்கும் மூலகாரணம் சூயஸ்!



இவற்றுக்கு மட்டுமல்ல; இதற்கெல்லாம் பின்னால் சில வருடங்கள் கழித்து, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நடைபெற உள்ள ஆறு நாள் யுத்தம் என்று அழைக்கப்பட்டதொரு பெரிய போருக்குமேகூட அந்தக் கால்வாய்தான் மூலகாரணம் என்பதால் மிகவும் கொஞ்சமாகவாவது சூயஸ் கால்வாய் பிரச்னையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது இங்கே இன்றியமையாததாகிறது.இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னையின் இரண்டாம் பாகமும் இந்த சூயஸ் கால்வாயில்தான் பிறக்கிறது.



மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் பிரிக்கும் எகிப்தின் வடக்குப் பகுதியில் இந்தக் கால்வாயை வெட்டியதனால்தான் ஐரோப்பாவும் ஆசியாவும் கடல் வழியே மிக நெருக்கமாக இணைய முடிந்தது.விமானப் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்தெல்லாம் சரிப்படாத காரியங்களுக்கு முன்பெல்லாம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டுதான் கடல் மார்க்கமாக ஆசியாவை அடைய முடியும்.இந்த ஒரு கால்வாய் ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தையே திசைமாற்றி வழி நடத்தச் செய்திருக்கிறது என்றால் நம்புவது சற்று சிரமமாகத்தான் இருக்கும்.


ஆனால் அதுதான் உண்மை.நீர் ததும்பும் இந்தப் பிராந்தியத்தில் தீப்பிழம்புகளும் அந்தச் சமயத்தில் எழவே செய்தன.காரணம், நாசர். சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி, சர்வதேசக் கப்பல் வர்த்தகத்துக்குக் குண்டுவைத்த அவரது அந்த அறிவிப்பு.


கால்வாய்க்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிட முடியும்?ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சூயஸின் பெயர்தான் கால்வாயே தவிர, உண்மையில் அது ஒரு சிறிய கடல் என்றுதான் சொல்லவேண்டும்.அத்தனை நீளம். அத்தனை ஆழம். பிரும்மாண்டமான கப்பல்களெல்லாம் மிக அநாயாசமாக வரும். யுத்த தளவாடங்களை, போர் விமானங்களை ஏற்றிக்கொண்டு ராணுவக் கப்பல்கள் அங்கே அணிவகுக்கும். வெள்ளம் வரும். எல்லாம் வரும்.


மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட கால்வாய் இது.இன்று நேற்றல்ல. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இப்படியொரு கால்வாய்க்கான சாத்தியத்தையும் அவசியத்தையும் அந்நாளைய எகிப்து மன்னர்கள் யோசித்திருக்கிறார்கள்.


முதலில் நேரடியாக இரு கடல்களை ஒரு கால்வாய் வெட்டி இணைக்கலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை. மாறாக, ஒரு கால்வாயை வெட்டி எகிப்தின் அங்கவஸ்திரம் மாதிரி தேசமெங்கும் ஓடும் நைல் நதியில் எங்காவது இணைத்துவிட்டால், நைல் நதி கடலுக்குப் போகும் பாதை வழியே கப்பல்கள் செல்லலாம் என்றுதான் யோசித்தார்கள்.


இந்த யோசனை, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர்கள் துத்மோசிஸ் 3 (Thuthmosis III), பராநெகோ (Pharaoh Necho) ஆகியோருக்கு இருந்திருக்கிறது. சில சில்லறை முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.


அதற்குச் சில காலம் கழித்து (எத்தனை காலம் என்று துல்லியமாகத் தெரியவில்லை) ஈரானியர்கள் (அப்போது பெர்சியர்கள்) எகிப்தின் மீது ஒரு சமயம் படையெடுத்து வென்றிருக்கிறார்கள். அப்போது எகிப்தின் ஆட்சிப்பீடத்தில் ஏறிய மன்னர் டேரியஸ் 1 (Darius I) இந்தக் கால்வாய்த்திட்டத்தை உடனே செய்துமுடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.



அப்போது ஒரே கால்வாயாக அல்லாமல் இரண்டு தனித்தனி கால்வாய்களை வெட்டி, இரு எல்லைகளில் இணைத்து, நடுவே ஒரு பொதுச் சரடாக நைல் நதியை இணைத்திருக்கிறார்கள். சிலகாலம் இந்தக் கால்வாய் ஒழுங்காக இருந்திருக்கிறது.இடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்களால் நாசமாகி, மீண்டும் கால்வாய் சரி செய்யப்பட்டு, மீண்டும் நாசமாகி, ஒரு கட்டத்தில் கால்வாய்த் திட்டத்தையே கைவிட்டுவிட்டார்கள்.


சூயஸ் கால்வாய் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்கிற முடிவுக்கு அப்போதைய எகிப்து மன்னர்கள் வந்துவிட்டார்கள்.சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு மறுபிறப்பு அளித்தவர் நெப்போலியன். அவர் பிரான்சின் சக்கரவர்த்தியாக இருந்தபோதுதான் (கி.பி. 1800 காலகட்டம்) ஐரோப்பாவையும் இந்தியாவையும் கடல் மூலமாக இணைப்பதற்கு இந்தக் கால்வாய்த்திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் முடியும் என்று சொன்னார்.


சொன்னதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பொறியாளர்களையும் அங்கே அனுப்பி வேலையை உடனே ஆரம்பிக்கச் செய்தார். (நெப்போலியன் அப்போது எகிப்து மீது படையெடுத்து வெற்றி கண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சு பொறியாளர்கள், எகிப்துக்கு வந்து பார்த்து முதலில் சர்வே எடுத்தார்கள்.


நிலப்பரப்பின் மீதான ஆய்வைத் தொடர்ந்து நடத்தி முடித்தவர்களுக்கு, அப்படியொரு கால்வாய் கட்ட சாத்தியமே இல்லை என்றுதான் முதலில் தோன்றியது.ஏனெனில், அவர்கள் கணக்குப்படி மத்திய தரைக்கடலுக்கும் செங்கடலுக்கும் பத்து மீட்டர் உயர இடைவெளி இருந்தது.அதை மீறி கால்வாய் வெட்டுவதென்றால் ஏகப்பட்ட நிலப்பரப்பு நீரில் மூழ்கி நாசமாகிவிடும். பரவாயில்லை என்றால் கால்வாய் வெட்டலாம் என்று சொன்னார்கள்.


நெப்போலியன் யோசித்தார். இறுதியில் அவரும் பின்வாங்கிவிட்டார்.ஆனால், அந்தப் பொறியாளர்களின் கணக்கு தவறு என்று சிறிதுகாலம் கழித்து வேறொரு பிரெஞ்சு பொறியியல் வல்லுநர் நிரூபித்தார். அவர் பெயர் ஃபெர்டினாண்ட் (Ferdinond de Lesseps). இவர் வெறும் பொறியாளர் மட்டுமல்ல. கெய்ரோவுக்கான பிரெஞ்சு தூதரும் கூட.ஃபெர்டினாண்ட் வகுத்தளித்த வரைபடம் மிகவும் சுத்தமாக இருந்தது. கால்வாய் கட்டுவதில் பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்றே ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.


ஆகவே 1859-ம் ஆண்டு எகிப்து அரசு கால்வாய் வெட்டத் தொடங்கிவிட்டது.ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் தருவிக்கப்பட்டார்கள். இரவு பகலாக வேலை பார்க்க உத்தரவிடப்பட்டது. உண்மையிலேயே ஒரு வேள்வி போலத்தான் அந்த வேலையை எடுத்துக்கொண்டார்கள்.இறுதியில் 1867-ல் சூயஸ் கால்வாய் கட்டிமுடிக்கப்பட்டது.


எட்டு வருடங்கள்! மிகப்பெரிய விழாவெல்லாம் எடுத்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய மன்னர்களையெல்லாம் அழைத்து, ஊரைக்கூட்டிக் கொண்டாடினார்கள்.அன்றுமுதல் சர்வதேசக் கடல் வாணிபம் சூடுபிடிக்கத் தொடங்கியது.ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கெல்லாம் மாநகரப் பேருந்துகள் மாதிரி கப்பல்கள் அடிக்கடி வந்துபோகத் தொடங்கின. ஆப்பிரிக்காவை அணுகுவது சுலபமானது.


மத்தியக்கிழக்கின் வர்த்தகமே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது.இருபதாம் நூற்றாண்டில் இந்த வர்த்தகப் பாதைக்கு இன்னும் கணிசமான மவுசு உண்டானது. சூயஸ் கால்வாய் இல்லாத ஒரு சூழலை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்கிற நிலை ஏற்பட்டது. குறிப்பாக இஸ்ரேலுக்கு.புதிதாகத் தோன்றிய தேசமான இஸ்ரேல், தன்னுடைய உள்கட்டுமானத்தை வலுப்படுத்திக்கொள்ள வர்த்தக வருமானத்தையே பெரிதும் நம்பியிருந்த காலம் அது.இயந்திரங்கள், பேரீச்சம்பழங்கள், ஆயுத உதிரிபாகங்கள் ஆகியவைதான் அப்போது இஸ்ரேலின் பிரதானமான ஏற்றுமதிச் சரக்குகள். சூயஸ் கால்வாய் பக்கத்திலேயே இருந்தபடியால் இஸ்ரேலின் இவ்வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சூடுபிடித்தன. நல்ல வருமானமும் இருந்தது.


ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் வலுவான வர்த்தகத் தளங்களை நிறுவும் முயற்சியில் அவர்களுக்குக் கணிசமான பலன் கிடைக்கத் தொடங்கியிருந்தது.வர்த்தக ரீதியில் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் இந்தக் கால்வாய், மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது.


முதல் உலகப்போரின் போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் சூயஸ் கால்வாயை மூடி, எதிரிக்கப்பல்கள் நகர முடியாதபடி செய்து திக்குமுக்காட வைத்தது சரித்திரத்தில் மிகப்பெரியதொரு சம்பவம். இரண்டாம் உலகப்போரிலும் சூயஸ் கால்வாயின் பங்கு இதே போல குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகவே விளங்கியிருக்கிறது. முசோலினியின் படைகள் (ஹிட்லரின் கூட்டணி நாடான இத்தாலியினுடைய படைகள்) ஆப்பிரிக்காவுக்குப் போவதைத் தடுக்கிற விஷயத்தில் இந்தக் கால்வாய்தான் ஒரு கதாநாயகன் போலச் செயல்பட்டிருக்கிறது!


இந்தப் பின்னணியில்தான் நாம் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்க முடிவு செய்ததை அணுக வேண்டும்.புவியியல் படி நாசர் முடிவெடுத்தது சரிதான். சூயஸ் கால்வாய் என்பது முழுக்க முழுக்க எகிப்து நாட்டுக்குள் ஓடும் ஒரு கால்வாய்.இரண்டு கடல்களை இணைக்கிற படியால் அது பொதுச்சொத்தாக இருந்ததே தவிர, எகிப்து அதைத் தன் தனிச்சொத்து என்று சொன்னால் சட்டப்படி யாரும் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் உண்மையும் கூட.


ஆனால், இந்தக் கால்வாயை எகிப்து மட்டுமே தன் கைக்காசைப் போட்டு வெட்டவில்லை அல்லது கட்டவில்லை. நிறைய வெளியார் உதவிகள் அதில் இருக்கிறது.குறிப்பாக சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு பிரான்ஸ் அளித்த உதவிகள் சாதாரணமானதல்ல. பின்னால் பிரிட்டனும் ஏகப்பட்ட நிதியுதவிகள் செய்திருக்கிறது.வேறு பல நாடுகளும் தம்மாலான உதவிகளைச் செய்திருக்கின்றன. கால்வாய்க் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தபோது எழுந்த பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள், அரசியல் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்தான் முன்வந்து தீர்த்து வைத்திருக்கின்றன.


இப்படி சூயஸ் கால்வாய்த் திட்டத்தில் பல தேசங்கள் சம்பந்தப்பட்டதால், பங்குபெற்ற ஒவ்வொரு தேசத்துக்கும் அந்தக் கால்வாயைப் பயன்படுத்துவதில் பங்கு உண்டு என்று ஒப்பந்தம் ஆனது.'பங்கு' என்றால் நிஜமாகவே பங்கு. Share என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அந்தப் பங்கு. பத்திர வடிவில் எழுதிக் கொடுக்கப்பட்ட பங்கு. சூயஸ் கால்வாயில் எப்படிப் பிற தேசங்களுக்குப் பங்கு உண்டோ, அதே போல எகிப்துக்கும் ஒரு பங்கு மட்டும்தான் முதலில் இருந்தது. தனது தேசத்தின் வழியே அந்தக் கால்வாய் செல்ல அனுமதியும் இடமும் அளித்ததற்கான பங்கு.


என்ன பிரச்னை ஆனது என்றால், 1875-ம் ஆண்டில் எகிப்தை ஆண்டுகொண்டிருந்த மன்னர் இஸ்மாயில் பாஷா என்பவர் தாங்கமுடியாத பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, தனது தேசத்துக்கான பங்குகளை பிரிட்டனிடம் விற்றுவிட்டார்.சூயஸ் கால்வாயில் தனக்கிருந்த பங்கை விற்று அவர்கள் கடனை அடைத்தார்களா, அல்லது புதிய நிதி உதவிகள் ஏதும் அப்போது பெறப்பட்டதா என்பது பற்றிய தெளிவான விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. (கிடைக்கும் தகவல்கள் எதுவும் முழுவதுமாக நம்பக்கூடியவையாகவும் இல்லை.)ஆகவே, எகிப்திலேயே ஓடும் சூயஸ் கால்வாயைச் சொந்தம் கொண்டாட எகிப்துக்கு உரிமை கிடையாது என்று ஆகிவிட்டது.


இதெல்லாம் பத்திர அளவில் நிகழ்ந்த விஷயங்கள். அதற்காக எகிப்து கப்பல்கள் எதுவும் சூயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமலெல்லாம் இல்லை!ஆனால், கால்வாயின் கட்டுப்பாடு முழுவதுமாக அப்போது பிரிட்டன் வசம் போய்விட்டது. எப்படி ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரு நபரிடம் அதிகமாக இருந்தால், அந்நிறுவனம் அவரது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் வருமோ அப்படி!உடனே பிரிட்டன் சூயஸ் கால்வாயைப் பாதுகாக்கவென்று ஒரு தனி படைப்பிரிவு ஏற்படுத்தி, எகிப்துக்கு அனுப்பிவிட்டது.


இதெல்லாம் மன்னர்கள் காலத்தில் நடந்தது! அவர்கள் காலமெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து, நாசரின் சர்வாதிகார ஆட்சி வந்தபோது இந்தப் பழைய ஏற்பாடுகளையெல்லாம் முதலில் தூக்கி அதே சூயஸ் கால்வாயில் விட்டெறிந்துவிட்டார்.சூயஸை நாட்டுடைமை ஆக்குவதாகவும் அறிவித்தார்.அதனால்தான் உடனே அனைத்து நாடுகளும் வெகுண்டெழுந்து எகிப்துக்கு எதிராகப் போர் முரசு கொட்டின.இஸ்ரேல் ஏற்கெனவே கடும் கோபத்தில் இருந்தது.என்னதான் உதட்டளவில் அமைதி, அமைதி என்று பேசினாலும் எகிப்து எல்லையில் இஸ்ரேலுக்கு எப்போதும் பிரச்னைதான். இவர்கள் அந்தப் பக்கம் ஊடுருவுவது, அவர்கள் இந்தப் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்று ஒரு நாள் தவறாமல் ஏதாவது சம்பவம் நடந்தபடிதான் இருந்தது.


தவிரவும் 1948 யுத்தத்தின் இறுதியில் காஸா பகுதி எகிப்து வசம் போனதிலும் இஸ்ரேலுக்கு மிகவும் வருத்தம்.வாகான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எகிப்தின் மீது போர் தொடுத்து, இழந்த பகுதியை மீட்டுவிடமாட்டோமா என்றுதான் அவர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில்தான் நாசர் சூயஸ் கால்வாயை நாட்டுடைமை ஆக்கி, யுத்தத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கத் தயாரானார்.ஒரு பக்கம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டுப் படைகள் இஸ்ரேலுடன் கைகோத்துப் போரிடத் தயாராக இருந்தன. எதிர்ப்பக்கம் எகிப்து.


இதில் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் சூயஸ் கால்வாய்ப் பிரச்னை மட்டும்தான் போரிடக் காரணம்.இஸ்ரேலுக்கு நில ஆக்கிரமிப்பு ஆசையும் உடன் சேர்ந்து இருந்தது.இரண்டு பெரிய தேசங்களின் துணை இருப்பதால் எப்படியும் எகிப்தை யுத்தத்தில் வீழ்த்தி, ஓரளவுக்காவது நிலங்களைப் பிடிக்கலாம் என்பது இஸ்ரேலின் கனவு.பிரிட்டனுக்கு இஸ்ரேலின் இந்த எண்ணம் தெரியாமல் இல்லை. ஆனால் அரபு மண்ணில் பிரிட்டன் போன்ற முதலாளித்துவ தேசம் கூட்டணி வைக்க இஸ்ரேலை விட்டால் வேறு நாதி கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.


1956-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அது நடந்தது. இஸ்ரேல் ராணுவம் எகிப்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியான சினாய்க்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த எகிப்து ராணுவத்தினரை சூயஸ் கால்வாய் வரை ஓடஓட விரட்டிக்கொண்டே போகத் தொடங்கியது.


Read more...

உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் !!!

உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி 2009 ஆகஸ்ட் 6ம் தேதியுடன் 64 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் நாள் காலை வழக்கம்போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது.

எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே (Enola Gay) என்ற B-29 ரக விமானத்தில் அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை நெருங்கிக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியைத் தாண்டிவிட்டிருந்தது.


சரியாக காலை 8.15ற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரை நோக்கி முதலாவது அணுகுண்டு (பெயர் லிட்டில் பாய்) மனித குலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது.அணு குண்டு அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெறும் வெடிப்பாயுதமாகும். ஏனைய வெடிமருந்துளை ஒப்பிடும்போது அணுகுண்டின் ஆற்றல் பல ஆயிரம் மடங்கு பெரிது. அணுக்கரு பிளவு (Nuclear fission) எனப்படுவது அணு ஒன்றின் கருவானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட லேசான அணுக்கருக்களாக பிளவுறும் நிகழ்வு ஆகும்.


இவ்வணுக்கருப் பிளவின் போது நியூத்திரன்களும் 'காமா' வடிவத்தில் கதிரியக்க ஆற்றலும் வெளிப்படுகின்றன. பாரமான தனிமங்களின் பிளவின் போது பிகப் பெரிய அளவில் ஆற்றல் மின்காந்த அலைகள் ஆகவும் இயக்க ஆற்றலாகவும் வெளிப்படுகின்றன.

1939ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹான் மெயிட்னர் மற்றும் ஸ்ட்ராஸ்மன் ஆகியோர் அணுக்கரு வினைகளை ஆராயும்போது யுரேனியம் நியூட்ரான்களால் தாக்கப்படும்போது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுக்கருக்களாகப் பிளவுறுவதை உணர்ந்தனர்.


200 MeV அளவு ஆற்றல் வெளிவிடப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.முதன்முறையாக அணு ஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியளாலர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டு முயற்சியாலும், இரண்டாம் உலகபோரின்போது "Manhattan Project" என்ற பெயரில் நடந்த ரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது.


முதல் அணு ஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் எற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது பயன்படுத்தபட்டது. சின்னப்பையன் (Little Boy) தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற செய்தியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார்.


ஹிரோஷிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் வீரியத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது. ஒற்றைக் குண்டு, சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீற்றர் உயரத்தில் அக்குண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான் வெளியில் பரவியது. காற்றின் வெப்பநிலை 4,000 சதம் உயர்ந்தது. மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 விநாடிகளில் 12 ஆயிரம் மீற்றர் உயரத்துக்கு ராட்சதக் கதிர்வீச்சுப் புகை மண்டலம் எழுந்து நின்றது.


மரங்கள் தீப்பந்தங்களாகின. இரும்புத் தூண்கள் உருகி ஓடின. குண்டு வெடித்த ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. ரோஷிமாவில் இருந்த சுமார் 75 ஆயிரம் கட்டிடங்களில் 70 சதவீதமானவை சாம்பலாகின.மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9 முற்பகல் 11.02 மணிக்கு "குண்டு மனிதன்' (Fat Man) என்று பெயரிடப்பட்ட மற்றொரு அணுகுண்டை நாகசாகி நகரின் மீது அமெரிக்கப் போர் விமானம் வீசியது. நகரின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் வெடித்த அக்குண்டினால் அந்நகரில் வாழ்ந்த 280,000 மக்களில் 40 ஆயிரம் பேர் உடனடியாகவே இறந்தனர்.


இரு அணுகுண்டுத் தாக்குதல்களின் விளைவான காயங்களினாலும் கதிர்வீச்சுத் தாக்கங்களினாலும் அடுத்த ஒரு வருடத்திற்குள் இரு நகரங்களிலும் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாகினர்.ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவும் நாகசாகியில் 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின. உயிர் தப்பியவர்கள் பல ஆண்டுகள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்று நோயினாலும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணமேயிருக்கிறார்கள்.


இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே உலகைத் தரிசிக்கிறார்கள்.எப்படியோ இரண்டாவது உலக மகாயுத்தத்துக்கு பின்னரான காலகட்டத்திலே கெடுபிடியுத்தம் தீவிரமடைந்த போது 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி போன்ற சில சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்தின் விளிம்புக்கு உலகம் சென்றபோதிலும் கூட கடந்த 64 வருடங்களாக அணு ஆயுத உபயோகம் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் சோதனைகளுககாக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கபட்டுள்ளது.


1949ம் ஆண்டு சோவியத் யூனியனும் தனது முதல் அணு ஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஹைட்ரஜன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது.


1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்ய நாடுகள் முறையே (காலமுறைபடி) அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை.


உதாரணமாக, இஸ்ரேல் அணு ஆயுத வான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக் கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணு ஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாற்றுகிறது.ஜப்பானில் நேற்று 64 ஆவது ஹிரோஷிமா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஹிரோஷிமா மேயர், அடுத்த பத்தாண்டுகளில் உலகம் எங்கும் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க அழைப்பு விடுத்தார்.


இந்நிகழ்ச்சியில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். ஜப்பான் பிரதமர் டாரோ அசோவும் இந்நிகழ்வில் பங்கேற்றார். அணு ஆயுதமற்ற உலகம் வேண்டும் என்று குறிப்பிட்ட ஹிரோஷிமா மேயர், வரும் 2020ம் ஆண்டிற்குள் இது கைகூட உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதனை ஒரு நினைவு நாள் சொற் பொழிவு என சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.


அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோஷம் உலக நாடுகளில் சமாதனத்திற்கு விடுக்கப்படும் அழைப்பாகும். ஆனால் ஹிரோஷுமா, நாகசாகியின் கொடுமைகளைக் கண்டும் அணு ஆயுதப் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.இன்று அந்நாடுகள் அறிவித்துள்ள புள்ளி விபரங்கள் படி அணு ஆயுத நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை பின்வருமாறு உள்ளது:


அமெரிக்கா-10,240.

ரஷ்யா-8,400

சீனா-390

பிரான்ஸ்-350

இங்கிலாந்து-200-300

இந்தியா- 60-90

பாகிஸ்தான்-30-52

வட கொரியா-0-18


அதே நேரம் இன்று உலகில் சுமார் 40 நாடுகளிடம் அணு ஆயுத மூலப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து நோக்கும் போது அணு ஆயுதங்களின் போட்டி குறையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கும் பராமரிக்கவும் செலவிடப்படுகின்ற நிதி பற்றிய மதிப்பீடுகள் அதிர்ச்சி தருகின்றன.


அமெரிக்கா 2008ம் ஆண்டு மட்டும் இதற்காக 5,240 கோடி டாலர்களை செலவிட்டிருக்கிறது. அணு ஆயுதங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் அமெரிக்கா வருடாந்தம் 2,900 கோடி டாலர்களை செலவிடுகிறது. இது இந்தியாவின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானதாகும்.


உலக வரலாற்றில், அணு ஆயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணு ஆயுதத்தை பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தபட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணு ஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் சீனா.

இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணு ஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின.

அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்ததில் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியகையாதலால், இந்த ஓப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஓப்பந்ததை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஓப்பந்ததில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணு ஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன.


1990களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்யாவும் தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.


2005ம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வள்ர்ந்த நாடுகள்டையே பெரும் அதிச்சியலையை உருவாக்கியது. அதே ஆண்டு அக்டோபரில் வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.


ஆக, அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோஷம் வெறும் ஒரு கோஷமாகவே மட்டும் இருக்கப் போவது மட்டும் உண்மை.

Read more...

Read more...

84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் மரணம். !!!

>> Thursday, August 27, 2009

கென்யாவின் அதி வயதான மாணவரான கிமானி நகங்கா மாருஜ், தனது 90 ஆவது வயதில் மரணமானார். அவர் தனது 84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் என “கின்னஸ்’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

கடந்த வருடம் தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளையடுத்து றிப்ட் பள்ளத்தாக்கிலுள்ள அவரது வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டதை தொடர்ந்து அவர், தலைநகர் நைரோபியிலுள்ள வயோதிபர் இல்ல முகாம் ஒன்றை தஞ்சமடைந்தார். சுதந்திர இயக்க படைவீரரான கிமானி, இள வயதாக இருக்கும்போது பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் 5 பிள்ளைகளின் தந்தையான அவர், வேதாகமத்தை சுயமாக வாசிக்க கற்றுக் கொள்ள விரும்பினார். அத்துடன் தனக்குரிய ஓய்வூதிய பணம் சரியாக வழங்கப்படவில்லை என சந்தேகம் கொண்டிருந்ததால், கணித அறிவும் தனக்குத் தேவை எனக் கருதினார். இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு எல்டோரெட் நகரிலுள்ள கப் கென்டுயவா ஆரம்ப பாடசாலையில் இணைந்து கொண்டார்.

கென்ய அரசாங்கம் இலவச ஆரம்பக் கல்வியை அறிமுகப்படுத்தி ஒரு ஆண்டிலேயே கிமானியின் இந்தப் பாடசாலைப் பிரவேசம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிமானியின் 30 பேரப்பிள்ளைகளில் இருவர் மேற்படி பாடசாலையில் கல்வி கற்று வந்தனர். இந் நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் கிமானிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் மனம் தளராது கல்வியை தொடர விரும்பிய கிமானி, தனது வீட்டுக்கு வந்து கற்பிக்கும்படி ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


2005 ஆம் ஆண்டில் வறிய நாடுகளினான கல்விக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி அமெரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொள்ளும் கௌரவத்தை கிமானி பெற்றார்.

Read more...

மோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண்

பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள லோவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள உலகப் பிரபல மோனாலிஸா ஓவியத்தின் மீது ரஷ்ய பெண் ஒருவர் சூடான தேநீரை வீசியதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தையடுத்து தேநீரை ஓவியத்தின் மீது வீசிய 30 வயது மதிக்கத்தக்க மேற்படி பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஓவியர் லியானார்டோ டாவின்ஸியால் வரையப்பட்ட விலை மதிப்பற்ற இந்த மோனாலிஸா ஓவியமானது, குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தமையால் அந்த ஓவியத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.கடந்த வருடம் மட்டும் இந்த ஓவியத்தைப் பார்வையிட 8.5 மில்லியன் பேர் வருகை தந்ததாக மேற்படி அருங்காட்சியக உத்தியோகத்தர் தெரிவித்தார்.

1911 ஆம் ஆண்டு இத்தாலிய அருங்காட்சியக ஊழியர் ஒருவரால் லோவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட இந்த ஓவியம், இரு வருடங்களின் பின் மீளக் கைப்பற்றப்பட்டது.தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நபரொருவர் இந்த ஓவியத்தின் மீது அமில திராவகத்தை வீசியமை குறிப்பிடத்தக்கது.


Read more...

கொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை !!!

கொட்டாவி விட்டமைக்காக நபரொருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விசித்திர சம்பவம் அமெரிக்க சிக்காகோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

போதைவஸ்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனது மைத்துனர் ஜேஸன் மேபீல்ட்டிற்கு என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவதற்காக, கிலிப்டன் வில்லியம் (33 வயது) சிக்காகோவில் வில் எனும் இடத்திலுள்ள மேற்படி நீதிமன்றத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் வில்லியத்தின் மைத்துனருக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி டானியல் ரொஸாக், அச்சமயம் கொட்டாவி விட்ட வில்லியத்துக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வில்லியம் நடந்ததாக நீதிபதி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை வில்லியமின் மன்னிப்புக் கோரலை நீதிபதி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் விடுதலை செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் !!!

>> Tuesday, August 25, 2009


1. நான் மகாத்மா அல்லவே!

காந்தியடிகள் பெங்களூரில் தங்கியிருந்தார். ஒரு நாள் ஒரு மங்களை ஒரு தட்டில் தேங்களாய், பழம், வெற்றிலைப்பாக்கு, பூ முதலியன எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் தட்டை அண்ணலின் அடிகளில் வைத்து அடிகளைத் தொட்டு வணங்கி எதிரே நின்று கொண்டிருந்தாள். அண்ணல் கைகூப்பி அதை ஏற்றக்கொண்டார். அவள் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தாள். அண்ணல் மீண்டும் கைகூப்பி விடை கொடுத்தார். மறுபடி மூன்றாவது தடவையும் காந்தியடிகள் நமஸ்காரம் செய்தார். ஆனால் அவளோ, நகருவதாக இல்லை. அச்சமயம் ராஜாஜியும் அண்ணலுடன் கூட இருந்தார். காந்திஜி, ராஜாஜியிடம், ”இந்தப்பெண் ஏதாவது சொல்ல விரும்புகிறாளா? கேளுங்கள்” என்றார்.
ராஜாஜி அந்தச் சகோதரியிடம் கன்னடத்தில் பேசி அறிந்துகொண்டு ” இவளுக்குக் குழந்தை வேண்டும். நீங்கள் மகாத்மா. ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறாள்” என்று தெரிவித்தார். காந்திஜி சொன்னார். ”நான் ஒன்றும் மகாத்மா அல்லவே! ஆசீர்வாதம் எப்படிச் செய்வேன்?”





ராஜாஜி: ”நீங்கள் எவ்வளவோ பேருக்கு ஆசீர்வாதம் செய்து பலித்தும் இருக்கிறதாம். எனக்கு மட்டும் ஏன் ஆசீர்வாதம் செய்யக்கூடாது என்கிறாள் இவள்!”




காந்திஜி: ”அப்படியா! எனக்கு ஒரு சக்தி இருக்கிறது! என்று இன்றுதன் தெரிந்துகொள்கிறேன்! ஆயினும் இவளிடம் சொல்லுங்கள் கிராமத்தில் இவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனவே! ஒன்றைத் த்த்து எடுத்துக் கொண்டு ஏன் வளர்த்து மகிழக் கூடாது?”








ராஜாஜியின் மூலம் அவள் பதில் சொன்னாள்:



”உறவினர்கள் குழந்தை, ஊரார் குழந்தைகள் எல்லாரிதமும் நான் பிரியமாகத்தான் இருக்கிறேன். ஆனால் என்ன இருந்தாலும் நம்முடையதுதானே நம்முடையதாகும்?”






இதைக்கேட்டு விட்டு அண்ணல் ”நான், எனது, பிறருடையது” என்ற மோகத்தைப்பற்றி சிறந்த உபதேசம் செய்தார். எதற்கும் அச்சகோதரி அசைந்து கொடுக்கிறவளாக்க் காணோம். இறுதியில் அண்ணல் ”ஆண்டவன் உனக்கு ஆண்குழந்தை அளித்தால் நான் தடுக்கவா போகிறேன்?” என்று சொன்னார்.



இதையே ஆசியாக்க் கொண்டு அச்சகோதரி போய்ச் சேர்ந்தாள்!








2. ஓய்வு நேர வேலைக்கு ஊதியம் எதிர்பார்க்கக்கூடாது




”யங் இந்தியா” பத்திரிகையை அடிகள் ஏற்றுக்கொள்வதற்கு முன் ஒரு நாள் அதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதன் அப்போதைய ஆசிரியர் ஆர்.கே. பிரபுவும் அருகே இருந்தார். அடிகள் அவரிடம், ”இதற்குச் செய்திகள் எங்கிருந்து சேகரிக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
பிரபு: ”யங் இந்தியா”, பாம்பேகிரானிக்கிள்” இவற்றிற்கு மாற்றாகப் பல பத்திரிகைகளை வருகின்றன. அவற்றிலிருந்து கத்தரித்து எடுக்கிறேன்.
காந்திஜி: இந்த வேலையில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?”





பிரபு: ‘இந்தப் பத்திரிகைக்கு வேண்டிய செய்திகள் தயாரிக்க அரைமணியைவிட அதிகமாவது அபூர்வம்தான்!” காந்திஜி வியப்புடன் சொன்னார்: ”நான் தென்னாப்பிக்காவில் இருந்த போது ”இந்தியன் ஒபினியன்” நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது மாற்றாக சுமார் 200 பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. நான் அவற்றை மிகவும் கவனமாய்ப படிப்பேன். அவற்றிலிருந்து ஏதாவது செய்தி எடுப்பதற்கு முன்பு இதனால் வாசகருக்கு உண்மையிலேயே பயன் உண்டு என்று தெரிந்துதான் எடுத்துக் கொள்வேன். பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்பவன் தன் பொறுப்பை மிகவும் கடமை உணர்வுடன் ஈடேற்ற வேண்டும். பத்திரிகைக் தொழில் என்ன? எல்லாத் தொழிலிலுமே இந்தக் கடமையுணர்வு தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சரியா, இல்லையா?






பிரபு சற்றே வெட்கத்துடன், ”ஆம் உண்மைதான். ஆனால் ”பாம்பே கிரானிக்கிள் ஆசிரியர் குழாத்தில் இருக்கும் என்குக அந்த வேலை செய்யவே வாரத்தின் நாள் எல்லாம் போய்விடுகின்றன. பிறகு இதை மிகவும் விரைவில் முடிக்க வேண்டி நேர்ந்து விடுகிறது.”
காந்திஜி சட்டென்று இதற்கெல்லாம் உங்களுக்கு சன்மானம் எவ்வளவு கொடுக்கப்படுகின்றது? என்று கேட்டார்.






பிரபு: ஒரு பத்திக்கு பத்து ரூபாய்க் கணக்கில் கிடைக்கிறது.
ஒரு பத்தி பத்து அங்குலம் தான் இருக்கும். அதுவும் பத்து பாயிண்டு எழுத்துக்கள் கொண்டது. ஆகவே கணக்குப் பார்த்தால் நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய் அவருக்குக் கிடைத்து வந்தது. காந்தி அடிகள் தனக்குள் கண்க்குப் போட்டுப் பார்த்துவிட்டு ”கிரானிக்கிளில் வேலை செய்வதற்கு எவ்வளவு கிடைகிறது?” என்று கேட்டார்.






பிரபு: மாதம் நானூறு ரூபாய். காந்தி அடிகள் ஒரு கணம் தயங்கினார்.மேலே சொன்னார்: ”யங் இந்தியா” வுக்காக நீங்கள் பணம் வாங்கிக் கொள்வது சரி என்று படுகிறதா உங்களுக்கு? இந்தப் பத்திரிகை பணம் ஈட்டும் இதழல்ல என்ற நீங்கள் அறிவீர்களை அல்லவா? இது தேசபக்தியின் தொண்டுவேலை. இதன் மூலம் அதன் செலவுக்குக் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும்போது இதை நடத்துகிறவர்கள் பளுவைக் கூட்டுவது உங்களுக்கே சரியாகத் தோன்றுகிறதா?






பிரபு: ”உரிமையாளர்கள் விரும்பிக் கொடுப்பதையே நான் வாங்கிக் கொள்கிறேன். நான் பிடிவாதமாக எதுவும் கேட்கவில்லையே!” காந்திஜி சொன்னார்:, ”சரிதான். இருந்தாலும் நானாக இருந்தால் ஒர் பைசா கூட வாங்கிக் கொள்ள மாட்டேன். உங்கள் முழு நேர வேலைக்குத் தகுதியாக ”பாம்பே கிரானிக்கிள்’ கார்ர்கள் ஊதியம் தந்து விடுகிறார்கள். ‘யங் இந்தியா’வுக்குச் செய்வது ஒழிந்த நேரத்தில் செய்கிற வேலை! முழு நேரத்துக்கும் ஒரு இடத்தில் சம்பளம் கிடைக்கும் போது இடையில் செய்யும் வேலைக்கும் ஊதியம் வாங்குவது சரியில்லை. அதை எதிர்பார்க்கவும் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படித்தானில்லையா?






காந்திஜி பிரபிவின் உள்ளத்தில் அறநெறியின் அருமைப் பாடம் ஒன்றைப் பதிய வைக்க முயன்றார். பிரபு அதன் புது ஒளியில் கொஞ்சம் திடுக்கிட்டார். அவர் மிகவும் பணிவுடம் தலையை மட்டும் அசைத்துவைத்தார், ஒத்துக்கொண்டதற்கு அறிகுறியாக.








3. என் படுக்கையை இதன் மேலேயே விரி




எரவாடா சிறையில் மழை வரும் போதெல்லாம் கட்டிலைத் தூக்கித் தாழ்வாரத்தில் போடுவது சிரம்மாயிருக்கும். எனவே காந்தியடிகள் மேஜரிடம் லேசான கட்டில் ஒன்று கேட்டார்.






அவர் ”(தேங்காய் நார்க்) கயிற்றுக் கட்டில் இருக்கிறது. போதுமா? அல்லது தில் நாடாப் பின்னித் தரட்டுமா? சொல்லுங்கள்” என்று கேட்டார்.






மாலையில் கட்டில் வந்தது. கயிற்றுக் கட்டில்தான். அடிகள், ‘நாடா வேண்டாம். இதன் மேலேயே என் படுக்கையை விரியுங்கள்’ என்று சொல்லி விட்டார்.






வல்லபாய் சொன்னார்: என்ன, நீங்கள் இதில் தூங்குவீர்களா? ஏற்கனவே மெத்தைக்குள்ளேயே தேங்காய் நார்! கட்டிலிலும் தென்னங்கயிறு. பிறகு என்ன மிச்சம், கட்டிலின் நான்கு மூலையிலும் தேங்காயைக் கட்டிவிட வேண்டியதுதான். இது அபசகுணம், நாளையே நான் நாட போட்டுப் பின்னச் செய்து விடுகிறேன்.






காந்திஜி: இல்லை வல்லபாய்! நாடா என்றால் அழுக்குச் சேரும். தண்ணீர்விட்டுச் சுத்தம் செய்ய முடியாது. நார்க் கயிறென்றால் சுலபமாக்க் கழுவிவிடலாம்.






வல்லபாய்: வண்ணானிடம் இன்று போட்டால் நாளை வெளுத்துக் கொண்டுவந்து விடுகிறான்!





காந்திஜி: ஆனால் அவிழ்த்தல்லவா போடவேண்டும். இது என்றால் கட்டிலில் வைத்தே அலம்பிவிடலாமே!”






மகாதேவ தேசாயும் மகாத்தமாவின் பக்கம் சேர்ந்து கொண்டார். ”இதை வெந்நீரிலும் கழுவலாம். மூட்டைப் பூச்சியும் அடையாது” என்று சொன்னார்.






வல்லபாய்: சரிதான், நீரும் சேர்ந்து விட்டீரல்லவா? இந்தக்கட்டிலில் இருக்கிற மூட்டைப்பூச்சி, தெள்ளுப்பூச்சிக்கு கணக்கே இல்லை.
காந்திஜி சொன்னார்: ஏன் வீண் வம்பு! நான் இதில் தான் தூங்கப் போகிறேன்.எனக்கு குழந்தையிலிருந்தே இதனுடன்தான் பழக்கம். எங்கள் அம்மா ஊறுகாய் போட இஞ்சியை இதன் கயிற்றில் தேய்த்துதான் தோல் நீக்குகிற வழக்கம்!






வல்லபாய்: தோல் நீங்கி விடுமல்லவா! இதோ நான்கைந்து எலும்புகளை மூடிக் கொண்டிருக்கிற உங்கள் தோலும் உரிந்து போகட்டும்! அதற்குத்தான் சொல்கிறேன் நாடா பின்னியே ஆகவேண்டும்.
காந்திஜி: ‘விளக்குமாற்றுக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சலம் கதையாகிவிடும். (குதிரை கிழமாம்! லகான் மட்டும் உயர்ந்ததாம்) இந்தக் கட்டிலுக்கு நாடா பொருந்தாது. இதற்குத் தென்னை நார்க்கயிறுதான் சரி. தண்ணீர் தெளித்தால் போதும், துவைத்து வேட்டி போல் அழுக்கு நீங்கிவிடும். இது மடிக்கவும் மடிக்காது. எவ்வளவ வசதி!”




வல்லபாய: சரி, நான் சொல்கிறதைக் கேட்காது போனால் உங்கள் இஷ்டம்.




காந்தி அடிகள் அதே கட்டிலைத்தான் பயன்படுத்தினார்கள்.







4. உனக்குத் திருமணம் பெருந்தேவை



எரவாடாச் சிறையில் அடிகள் இருக்கும்போது வெளி நாடுகளிலிருந்து அவருக்கு அநேக கடிதங்கள் வரும். மார்கரேட்டு என்ற பெயருள்ள ஒரு பெண்மணி அன்பு த்தும்பும் மடல்கள் எழுதி வந்தாள். ஒருநாள் அவள் அடிகளைச் சந்திக்க சிறைக்கு வந்தாள். மகாதேவ தேசாய்க்கு அவளைப்பார்த்ததும், ‘இது சரியான அசடு’ என்று தோன்றிற்று. அவர் காந்தியடிகளிடம் கேட்டார். இவளை இவ்விதம் வர அனுமதிக்கக்கூடாது. இவள் ஏன் இங்கு வந்தாள் என்று நமக்குத் தெரியாது. வேளை தேடி வந்தாளோ அல்லது வேறு என்ன காரணமோ! அவள் தேடி வந்தாளோ அல்லது வேறு என்ன காரணமோ! அவள் நாடு கடத்தப்பட்டு வந்திருப்பாள் போலவும் தோன்றுகிறது.






காந்திஜி உறுதியாகச் சொன்னார்: அவளைக்கண்டிப்பாய் வரச்சொல், அவளிடம் ஹரிஜன வேலை வாங்கவேண்டும். அவளைப் பார்க்காமல் அவள் எதற்கு வந்தாள், எப்படிப்பட்டவள், வேலை செய்வானா என்றெல்லாம் எப்படி முடிவு செய்ய முடியும்?






கடைசியில் அவள் வந்தாள். காந்தியடிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டு ”நான்பொய் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். காரணமும் தவறாகவே சொல்லியிருக்கிறேன். இங்கே இருக்க வேண்டிய காலக்கெடுவும் பொய். பாபுஜி! நான் விரதம் எடுத்துக் கொள்கிறேன். என்னை ஆசிரமத்துக்கு அனுப்பிவிடுங்கள். எனக்கு நீங்கள்தான் கடவுள். என்னை இந்தியப் பெண்ணாக்கி விடுங்கள் யாருக்காவது. தத்துப் பெண்ணாக்குங்கள். இல்லை என்றால் பிரம்சரிய விரதம் எடுத்துக்கொண்டிருக்கும் யாருக்காவது என்னை மணம் செய்து கொடுத்துவிடுங்கள்” என்று புலம்பினாள்.






கேட்ட காந்தியடிகள் சிரித்தார். மூன்றாவது நாளே அவள் மண்டுத்தனம் வெளியாகிவிட்டது. காந்திஜி பரிகாசம் பேசுகிறார். அவர் எப்படிக் கடவுளாக முடியும். அவளை அவர் ஆண்கள் உடை உடுத்தச் சொல்லி அறிவுரை சொன்னார். இது அநாகரிகம் என்று அவள் நினைத்தாள். வேறு ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் அங்கிருந்தாள். அவள் பெயர் நீலா நாகினி. அவள் கழந்தை மகாதேவ தேசாயின் தோளில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட மார்கரெட் எரிச்சலுடன் அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிட்டாள். காந்தியடிகள் சத்தம் போட்டார். ”உனக்கு வெட்காமியல்லை! குழந்தையை இப்படியா இழுத்துத் தள்ளுவது? இது குழந்தையா, கல்லா?
வெட்கமில்லாமல் அவள் சொன்னாள்: என் நாயைக்கூட நான் இப்படித்தான் தள்ளுவேன். ஒன்றும் ஆவதில்லையே!
காந்திஜி: குழந்தைக்கும் நாய்க்கும் வேறுபாடு இல்லையா?
மார்கரெட்டு: என் நாயையே நான் குழந்தையைப் போல் தான் பாவிக்கிறேன்.






இதைக்கேட்டு காந்திஜி சொன்னார்: சரிதான் உனக்குத் திருமணம் தேவைதான். அதுவும் பிரமசரிய விரதம் எடுத்துக்கொண்டவனுடன் கூடாது. பிள்ளை பெற விரும்புகிற ஒருவருடனும் ஒழுங்கா முறையாகத் திருமணம் செய்துகொள். பிறகு தெரியும் குழந்தை என்றால் என்ன தவறு.






அவள் மிகவும் நிஷ்டூரம் வாய்ந்தவள். அதற்காக அடிகள் அவளை ஒதுக்கவில்லை. அவளை அரசியலிலோ ஒத்துழையாமை இயக்கத்திலோ பங்கு எடுத்துக்கொள்ளவிடாமல் ஹரிஜனத் தொண்டு செய்யத் தேவையான பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.







5. சாவுடன் சண்டைப்போட முடியாது.




1933 - ஆம் ஆண்டில் எரவாடா சிறையிலிருந்த காந்தியடிகளுக்கு அவர் விருப்பப்படி ஹரிஜனத் தொண்டு செய்ய அரசு வசதிகள் தரவில்லை. அவர் உடனே உண்ணாநோன்பு தொடங்கிவிட்டார்., மே 29 இல் தான் 21 நாள் உண்ணாவிரதம் முடிந்திருந்தது, ஆகஸ்ட் 16 இல் இந்த விரதம் தொடங்கிவிட்டது. இடையிலே மூன்று மாதங்கள்தான் கழிந்திருந்தன. உடல்நிலை பூராவும் சரியாகியிருக்க முடியாது. எனவே இம்முறை உடல் மிகவும் நோவுக்குட்படுவது இயற்கையே. உணைமையிலேயே இரண்டு மூன்று நாட்கள் தான் முடியாமல்தான் இருந்தது. அடிகளே ஒரு கடித்த்தில் இதை விவரித்திருந்தார். ”நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆகஸ்ட் 23 தேதியன்று இரவு குமட்டி வாயில் எடுத்தபோது ‘சரி போகவேண்டியதுதான், இனித்தாங்கது’ என்று முடிவு செய்துவிட்டேன். சாவுடன் சண்டைப்போட முடியாது. 24 ஆம் தேதியன்று என்னிடம் இருந்த பொருள்களைத் தானம் செய்தும்விட்டேன்.”






இவ்வளவும் செய்து விட்டு ‘இனி என்னுடன் யாரும் பேச வேண்டாம். தண்ணீரும் கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
திருமதி கஸ்தூரிபாய் காந்தியும் அருகிலிருந்தார்கள். அவரையும் ‘போ’ என்று உத்தரவு கொடுத்து விட்டார். கண்களை மூடிக்கொண்டு ராமநாமம் ஜபிக்கத் தொடங்கிவிட்டார். பாவோ அயர்ந்துபோய் அங்கேயே நின்றுவிட்டார். இதே நேரத்தில்…






தீனபந்து ஆண்ட்ரூஸ் மூன்று நாட்களாக்க் கவர்னரிடம் ”காந்திஜியை விட்டுவிடுங்கள்” என்று முறையிட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் வெற்றியடைந்திருந்தார். விடுதலை உத்தரவு பெற்றுக்கொண்டு மருத்துவ மனைக்கு வந்தார். காந்தியடிகளையும் பாவையும் அழைத்துக் கொண்டு பர்ணகுடிக்குச் சென்றார்.






கொஞ்சம் கொஞ்சமாக காந்தியடிகள் உடல் தேறிவந்தார். அவர் ”அரசு விடுதலை செய்து விட்டாலும் ஓராண்டு காலக்கெடு முடியும் வரை ஒத்துழையாமை இயக்கத்தில் நேரடி பங்குகொள்ளமாட்டேன் முக்கியமாக ஹரிஜனத் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பேன்” என்று அறிவித்து விட்டார்.






இதற்குப் பிறகு அவர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹரிஜன யாத்திரையை மேற்கொண்டார்.








6.சத்தியாகிரகத்தில் மனிதன் தானே கஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்!




1918 தொடக்கத்தில் அகமதாபாத்தின் பிளேக் நின்று அமைதி ஏற்பட்டது. மில் முதலாளிகள் ‘பிளேக் - போனசை’ நிறுத்திவிட எண்ணினார்கள். இதைக் கேட்ட நெசவுப்பகுதி தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உலகச் சண்டையின் காரணமாக சாமான்கள் விலை ஏறியிருந்தன. ஆனால் சம்பளத்தைப் போல் 75 சதவிகிதம் பிளேக் போனஸ் கிடைத்து வந்ததனால் விலை ஏற்றம் அவர்கள் வாழ்க்கையை பாதிக்காதிருந்தது. அதை நிறுத்திவிட்டால் தொல்லை வந்து சேரும்.. எனவே அவர்கள் போனஸ் இல்லாமல் சம்பளத்தையே முறையாக்க் கட்டி கொடுக்கும்படி கேட்க முடிவு செய்தனர்.






அனுசூயா பென் முன்னமேயே ”ஊடு”ப் பிரிவுத் தொழிலாளர்கள் ஹர்த்தாலுக்குத் தலைமை வகித்து நடத்தியிருந்தார். எனவே நெசவுப் பிரிவுத் தொழிலாளர்கள் அவரிடம் சென்று வேண்டினார்கள். அவர் இந்தத் துறையில் காந்திஜியிடம் யோசனை கேட்பது மிகவும் தேவை என்று எண்ணினார். நல்லகாலமாக காந்தி அடிகள் பீஹாரிலிருந்து திரும்பி வந்திருந்தாரள். அவர் இதைக் கேட்டுப் பேசிச் சிந்தித்து 35 சதவீதம் சம்பளம் அதிகம் கேட்போம் என்று முடிவு செய்தார்.
மில் முதலாளிகள் இந்த நியாயமான் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டனர். மில் முதலாளிகளும் கதவடைப்புச் செய்துவிட்டனர. போராட்டம் வலுவடைந்தது. காந்தியடிகளின் தலையீடு இருந்தால் எல்லாம் அமைதியாகவே இருந்தது.






வேலை நிறுத்தம் தொடங்கி சில நாட்களுக்குள்ளேயே செய்திஅகமதாபாத் நகரத்துக்கு வெளியே எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது. போராட்டம் தொடர்ந்து நீண்ட காலம் நடந்தால் தொழிலாளர்களுக்குத் தொல்லை நேரிடுமே என்று எண்ணி, இந்தப் போராட்டத்தில் அக்கறைகொண்ட சிலர் அவர்கள் உதவிக்கு ஒரு நிதி ஏற்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள்.






பம்பாயிலுள்ள ஒரு அன்பர் இந்த உதவி நிதிக்குப்பெரும் தொகை ஒன்று அனுப்ப விருப்பம் தெரிவித்தார். ஆனால் காந்தியடிகள் இந்தப் பிரச்சனையை எடுத்தவுடனேயே, ”கூடாது இந்த வழியை நாம் ஒத்துக்கொள்ளவே கூடாது. அகமாதபாத்திலேயே உள்ள சிலர் இவ்விதம் உதவு முன்வந்துள்ளனர். தொழிலாளர்களுக்குப் பண உதவி தேவையாயிருக்கம் என்பதும் உண்மைதான்! ஆனால் தொழிலாளர் போராட்டம் பொதுமக்கள் காசை வைத்துக் கொண்டு நடத்தப்படும் கூடாது. தொழிலாளர்கள் ஏழைகள் தாம். ஆனால் அவர்களுக்கும் சுயமரியாதை உண்டு. அதற்கு ஊறு நேராமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் சுயமரியாதை இருந்தால் கஷ்டப்பட்டாலும் பொறுத்துக்கொண்டு போராடுவார்கள். சத்தியாக்கிரஹம் என்றால் மனிதன் தானே கஷ்டப்பட்டாக வேண்டும்.” என்று உறுதியுடன் சொல்லிவிட்டார்.






அவர் மேலும் சொன்னார்: ‘வெளி உதவி கிடைத்தால் மில் முதலாளிகள் பிறர் உதவியை எதிர்பாராமல் தங்கள் ஆற்றலிலேயே போராடட்டும். அப்பொழுதுதான் முதலாளிகள், ‘இவர்கள் ஊன்றி நிற்பார்கள்’ என்று புரிந்து கொள்வார்கள். உடன்பாடு காண விழைவார்கள்” என்று சொல்லி விட்டு, தொழிலாளர் உதவிக்கு வேறு வழி தேடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ”தேவை ஏற்படும்போது ஓரளவு உதவுவோம் ஆனால் வாழ்க்கைக்குச் சரியான ஏற்பாடு ஒன்று செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டடம் நீடித்து நடக்க முடியும். உடைகிற வாய்ப்பும் இருக்காது’ என்று முத்தாய்ப்பு வைத்து விட்டார்.
கடைசியில் அவ்விதமே செய்யப்பட்டது.








7. மாவு அரைப்பது மிக நல்லது.




காந்திஜிக்கு ஒரு சகோதரி இருந்தார். காந்திஜி தென்ஆப்பிரிக்காவிலிருந்தபோது தம்மிடம் இருந்த எலாப் பொருளையும் ஆசிரமத்துக்குக் கொடுத்துவிட்டார். இந்தியா திரும்பி வந்த பிறகும் தம் சொத்துரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு ”ஏழையாகி” விட்டார்.
ஆனால் இந்த சகோதரிக்கு என்ன செய்வது? அவர் கணவரை இழந்தவர். காந்திஜி தன் செலவுக்கு யாரிடமும் காசு வாங்கமாட்டார். ஆனால் சகோதரிக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாகவேண்டும். அதனால் அவர் தன் நண்பரான பிராணஜிவன் மேத்தாவிடம் மாதம் பத்து ரூபாய் வீதம் அவருக்க (கோகீ பஹனுக்கு ) அனுப்பி வந்தார். ஆனால் சில நாட்கள் சென்றவுடன் கோகி பஹனுடைய மகளும் விதவையாகித் தாயிடம் வந்து சேர்ந்துவிட்டாள். பத்துரூபாய் இரண்டுபேருக்கும் போதவில்லை. எனவே சகோதரியம்மையார் காந்திஜிக்கு, ”செலவு அதிகரித்துவிட்டதனால் அண்டை அயலில் மாவு அரைத்துக் கொடுத்துச் செலவைச் சரிகட்ட வேண்டியிருக்கிறது” என்று எழுதினார்.







காந்திஜி பின் வருமாறு பதில் எழுதினார்: மாவு அரைத்துக் கொடுப்பது நல்லது தான். உடல் நலமும் சிறக்கும். நாங்களும் ஆசிரமத்தில் மாவு அரைக்கிறோம். நீங்கள் எப்போதும் விரும்பினாலும் ஆசிரமத்துக்கு வரலாம். முடிந்த தொண்டைச் செய்து கொண்டு வாழ முழு உரிமை உண்டு. நாங்கள் எப்படி வாழுகிறோமோ அப்படியே நீங்களும் வாழ வேண்டும். நானும் வீட்டுக்குப் பணம் அனுப்பும் நிலையில் இல்லை. நண்பர்களிடமும் அனுப்பச் சொல்ல முடியாது.






வெளியில் மாவு அரைத்துக் கொடுத்து வாழ்ந்த சகோதரிக்கு ஆசிரமவேலை கடினம் இல்லை. ஆனால் ஆசிரமத்தில் ஹரிஜனங்கள் இருந்ததனால் அவர்களுடன் கூடி இருந்து வாழ, பழங்கொள்கைகள் கொண்டு அவருக்கு மனம் ஒப்பவில்லை. அவரும் வரவில்லை.
அடிகள் ஏற்பாடும் செய்யவில்லை.








8. எனக்குத்தான் காசாசை அதிகமே




காந்திஜி ஒருமுறை டில்லியிலிருந்துபோது அவருடைய பிறந்த நாள் விழா வந்தது. பட்டணத்திலுள்ள சில குஜராத்தியர்கள் அகதிகளுக்கென்று கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு காந்தியடிகளிடம் 3 மணிக்குத் தங்கள் கூட்டத்திற்கு வருமாறு வாக்கும் பெற்றுக் கொண்டுவிட்டனர். அந்த சமயம் காந்தியடிகளுக்கு அதிகம் இருமல் வந்துகொண்டிருந்தது. சர்தார் பட்டேலுக்கு இந்தச் சேதி தெரியவந்ததும் அவர் சொன்னார்: உங்களுக்கு இவ்வளவு மோசமான இருமல் இருக்கிறது எதற்காக குஜராத்தியர் கூட்டத்திற்குப் போக வேண்டும்? னால் நாங்கள்தான் காசுப்பித்தராயிற்றே! பணம் கிடைக்கும் என்றால் சாகும்போது கூட எழுந்து அங்கே போய்விடுவீர்களே! காசு இப்படியா வசூல் செய்ய வேண்டும்! ‘ளொக்கு’ ‘ளொக்கு’ என்று இருமிக்கொண்டு கூட்டத்திற்கு என்ன போக வேண்டியிருக்கிறது? ஆனால் நீங்கள் எங்கே நான் சொல்வதைக் கேட்கப் போகிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு பட்டேல் சிரித்துவிட்டார்.






காந்திஜியும் சிரித்துவிட்டு உண்மையிலேயே மூன்று மணிக்கு அங்கே போய்விட்டார். அங்கே பேசும்போது சொன்னார்: ”ந்ந்தலால் பாய், குஜராத்தியர் என்னைக் கூப்பிடுகிறார்கள், வந்தால் காசு கிடைக்கும்’ என்று சொன்னபோது காசாசையால் ஒத்துக்கொண்டேன். ஆனால் அப்பொழுது இங்கே பேசவும் வேண்டியிருக்கும் என்று தெரியாது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது என்க்கு என் பிறந்தநாளின் மதிப்புத் தெரியாமலே இருந்து வந்தது. இந்தியாவுக்கு வந்த பிறகுதான் வேஷம் எல்லாம் தொடங்கிற்று. இதனுடன் சர்க்காவும் இணைந்திருப்பதால் இதை சர்க்கா துவாதசி என்று சொல்கிறோம். சர்க்கா அஹிம்சையின் அடையாளம். ஆனால் இன்று அஹிம்சையின் தரிசனமே கிடைக்காத ஒன்றாக ஆகிவிட்டது. இப்பொழுது சர்க்கா துவாதசி எதற்காகக் கொண்டாட வேண்டும்? ஆனால் மனிதன் சுபாவம் கையைக் காலை ஆட்டிக்கொண்டு தானிருப்பான். பலன் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி!






குஜராத்தியர் எங்கிருந்தாலும் அங்கே அஹிம்சைப் பணி புரிவார்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறேன் ஆனால் அவர்கள் சர்க்கா நூற்பார்களா, மாட்டார்களா என்பதைப்பற்றி எனக்கு ஜப்பாடுதான். சர்க்காவின் பெருமையைப்பற்றி நான் என்ன சொல்லட்டும்! இன்று சமயத்தின் பேரில் கொலை செய்தல், தீ மூட்டுதல் எல்லாம் நடக்கிறது. நாம் நம் சுதந்திரத்த்ஐ எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கறோம்? குடிமக்கள் மனதில் எவ்வளவு கட்டுப்பாடற்ற நிலை பரவியிருக்கிறது? இதை எல்லாம் நான் காணும் போது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.”






இதற்குப் பிறகு அவர் ஹிந்தி ஹிந்துஸ்தானி பற்றியும் பேசினார். ”நீங்கள் ஹிந்துஸ்தானி மொழியையும் நாகரி, உருது - இரண்டு லிபிடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பணத்துக்காக நான் உங்களுக்கு வந்தனம் செலுத்துகிறேன். நன்றியுணர்வு கொள்கிறேன். இடம் பெயர்ந்த சோகதர சகோதரிகளுக்குக் குளிரில் கம்பளிகள் மிகவும் தேவையாயிருக்கின்றன. இதை எல்லாம் நாம் தான் செய்ய வேண்டும். அரசு செய்ய முடியாது. நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு விட்டோமானால் அரசுக்கு ஆட்சியை ஒழுங்கப்படுத்துவது எளிதாயிருக்கும்.”








9. மாறுபட்ட கருத்து கொண்டிருந்த போதிலும் நாம் பரஸ்பரம் பொறுத்துக் கொள்ளலாம்




ஹரிஜன யாத்திரையின்போது சுற்றிச் சுற்றி காந்தி அடிகள் ஆஜ்மீர் வந்து சேர்ந்தார். காசிலால்நாத் சுவாமி காந்திஜி எங்கு சென்றாலும் அவர் வருவதற்கு முன் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவார். சுவாமி காந்திஜியின் ஹரிஜன நலமுன்னேற்றத் தொண்டுக்குப் பெரிய எதிரி. அவரைப்பற்றி விதவிதமான வதந்திகள் உலவின. காந்தியடிகள் மேல் கல்லை வீச என்றே சிலரை அமர்த்திவைத்திருந்தார் என்று சொன்னார்கள். ஆஜ்மீர்க்காரர்களுக்குக் கவலையாகப் போயிற்று. ஆனால் சேதியைக்கேட்ட காந்தியடிகள், ”சுவாமி லால்நாத் இவ்விதச் செயல்களைச் செய்யமாட்டரா. அவர் எவ்வளவோ தடவை என்னைச் சந்தித்திருக்கிறார். நான் இந்தச் சேதியை நம்பமாட்டேன்,” என்று மிகவும் சாதாரணமாகச்சொல்லி விட்டார்.






அப்போதே சுவாமி காந்தியடிகளைக் காண வந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவந்தது. அவரை அடிகளிடம் அழைத்துவரும் பொறுப்பு உபாத்தியாயருக்கு வந்து சேர்ந்தது. அவர் சுவாமியைப் பார்த்தவுடனேயே முகத்திலிருந்து அவர் பெரிய சண்டைக்குத் தயாராக்க் கச்சை கட்டிக்கொண்டு வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டார். ஆனால் அவர் காந்தியடிகள் இருக்கும் அறைக்கு வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது. அவர்மிகவும் மரியாதையுடனும் இயற்கையாகவும் நடந்துகொண்டார். அர்களைப் பார்த்தவர்கள் இரண்டு படு எதிரிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றே நம்பமுடியாது. லால்நாத் சுவாமி காந்தியடிகளிடம் காசி வரும் போது எங்களுடனேயே தங்குங்கள்! எங்கள் தொண்டர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்வார்கள். உங்களைக் காத்துக்கொள்வார்கள் என்று அழைப்பு விடுத்தார்.






அடிகள் உடனே, ”இது நல்ல யோசனை. எனக்குப் பிடிக்கிறது. மாறுபட்ட எண்ணம் கொண்டிருந்தாலும் நாம் பரஸ்பரம் சகித்துக்கொள்கிறோம் என்பதை உலகம் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும்,” என்று சகஜமாகச் சொன்னார்.








10. வதந்திகளை நான் நம்பத் தயாரில்லை




1925 ஆம் ஆண்டு தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் காலமான பிறகு காந்திஜி பல நாடகள் வங்காளத்திலிருந்தார். அங்கே அரசியலில் ஏற்படும் புதுச்சிக்கல்களை எல்லாம் தீர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு நாள் அவர் சாதாரணமாக ஸ்ரீமான் நளினி ரஞ்சன் சர்க்காரிடம், ”நீங்கள் எப்போதும் காலையில் எப்பொழுது விழித்துக் கொள்கிற வழக்கம்?” என்று கேட்டார்.






சர்க்கார் அவர்களுக்கு இந்தக் கேள்வி பிடிக்கவில்லை. காந்திஜியும் ஏதோ கேட்டுவிட்டார். அவர் பதில் சொன்னார். ‘சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் உண்டு.’






காந்திஜி சொன்னார்: ”அப்படியானால் நாளை முடிந்த அளவு சீக்கிரமே எழுந்து வாருங்கள். உங்களிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும்.”
சர்க்காருக்கு ஒன்றும் புரியவில்லை. சிந்தித்தார். இந்தப் பேச்சு நடந்ததே காலை வேளையில்தான். அன்று மாலை காந்தியடிகள் சர்க்கார் அவர்களிடம்,”நான் காலையில் சொல்ல இருந்த வேலை முடிந்துவிட்டது. ஆகவே நீங்கள் வரவேண்டாம்!” என்று சொல்லி விட்டார். பிறகு உண்மையையும் விவரித்தார்.






”வங்காளத்தில் பெயர் பெற்ற ஒரு கனவான் இருந்தார். அவரை வைஸ்ராய் கவுன்ஸிலில் அங்கத்தினராக நியமனம் செய்திருதார்கள். அவர் தங்கள் நண்பர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு சிரக்கார் அவர்களைப் பற்றி அவதூறாகச் சில குற்றச்சாட்டுகள் தெரிவித்தார். காந்தியடிகள் ‘நான் வெற்று வதந்திகளை நம்ப முடியாது. சாட்சி வேண்டும்,’ என்று சொன்னார். சாட்சி கிடைத்ததும் சர்க்கார் அவர்களைக் கேட்கவே காந்திஜி அவரை அதிகலையில் வரச்சொல்லியிருந்தார். அதற்கு முன்னமேயே அந்தக் கனவான் காந்திஜியைச் சந்தித்து ‘நண்பர் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. தான் சர்க்காரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்!’ என்று சொல்லிவிட்டார். அடிகளும் ‘நானே அவரையும் அழைத்துக் கொண்டு உங்களிடம் வருகிறேன்’ என்று சொன்னார்.






இதைக்கேட்ட சர்க்காரின் மனது தழதழத்தது. ”இப்படி எவ்வளவோ அவதூறுகள் கேட்டாய் விட்டது. விடுங்கள். தவிர, நான் அவ்வளவு பெரிய மனிதனுமல்ல. அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்க!” என்று சொன்னார். காந்திஜியா விடுகிறவர்? பிடிவாதம் செய்யவே சர்க்கார் அவர்கள்’நீங்கள் சங்கடப்பட வேண்டாம். நான் மட்டும் போய் வருகிறேன்’ என்றார். பிறகு அவர் போய்ச் சந்திக்கவும் செய்தார்.








11. சரி, அழைத்துச் செல், உன் மகன் தான்




ஒரு பெண்ணை அவள் தந்தை அவள் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினார். அவள் அடிக்கடி ஆசிரமத்துக்கு வந்உத போய்க்கொண்டிருந்தவள். தந்தையிடம் வாதிட்டுத் தோற்ற அவள்காந்திஜியிடம் ”என்ன செய்யட்டும்?” என்று கேட்டாள்.
காந்திஜி சொன்னார்: ‘இங்கே என்னிடம் வந்து விடு’ பெண் வந்து விட்டாள். தாய் தந்தையர் பெண் ஓடிவந்த சேதி அறிந்ததும் மிகவும் சினம் கொண்டனர். உடனே வார்தாவுக்கு வந்தனர். காந்தியடிகள் அவர்களை நன்கு கவனித்து ஒரு கஷ்டமுமில்லாமி பார்த்துகொ கொள்ளச் சொல்லி உத்தரவிட்டார்.






அவர்கள் காந்திஜியுடன் பேச வந்தனர். அந்தச் சமயம் பெண்ணும் அங்கே வந்தாள். தாய் தந்தை உள்ளே வந்ததும் காந்தி அடிகளின் அடிபணிந்தனர். காந்திஜி முறுவலித்துக் கொண்டார். நலன் பற்றி விசாரித்தார். பிறகு பெண்ணைப் பார்த்துக்கொண்டே சொன்னார்: ”இவள் என்னிடம் ஓடி வந்திருக்கிறாள். இவளை அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா? நல்லது அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பெண்”
இந்தச் சொல்லில் என்ன மாயமிருந்ததோ? தந்தை உடனே, ‘பாபூ! பெண் உங்கள் பெண்தான். உங்களிடமே இருக்கட்டும்! என்று சொல்லிவிட்டார்.
காந்திஜியும் ‘சரி, இவள் விருப்பமும் அது தான். இருக்கட்டும் இங்கேயே’ என்று விடை இறுத்தார்.










12. எண்ணத்தில் உறுதி இருந்தால் நிறைவேற வழியும் உண்டாகும்.




ஒரு அன்பர் வீட்டுக்குச் செல்வதற்கு முன் காந்திஜியுடன் சில வார்த்தைகள் பேச விரும்பினார். ஆனால் அடிகள் எதிரே வந்தவுடன் தைரியம் ஏற்படுவதில்லை. சும்மா இருந்து விடுவார். காந்திஜி ”பேசப்பா, பேசு, நீ ஏதோ பல ஆண்டுகள் முன் விரதம் எடுத்துகொ கொண்டயாம். அதைப்பற்றிப் பேச விரும்புகிறாய் என்று மாகதேவ் சொல்கிறார். எனக்கு நீ விரதம் எடுத்துகொண்டதே மறந்து விட்டது. நல்லது, சொல்!” என்று தூண்டினார்.






அவருக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. திக்கித் தயங்கிச் சொன்னார்: ”ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் சில பிரதிக்ஞைகள் ஏற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது - ”‘இப்போது? அதைக் காப்பாற முடியவில்லை அது தானே!’






மகாதேவ தேசாய்: இல்லை. செய்தி நேர்மாறானது!’
காந்திஜி: அப்படி என்றால் இந்தக் கண்ணீர் மகிழ்ச்சிக் கண்ணீரா?
அந்த அன்பர் வாய்மூடியே இருந்தார். கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. காந்திஜி சொன்னார்: முதன் முதல் நான் என் தந்தையிடத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டபோது நா எழவேயில்லை. அதனால் நான் எழுதிக் கொடுத்துவிட்டேன். அதைப்போல நீயும் எழுதிக் கொடுத்துவிடேன்.






அன்பர் மேலும் கண்ணீர் பெருக்கிணச் சும்மா இருந்தார். சற்றுநேரம் சென்று கொஞ்சம் தைரியம் வரவே அவர் சொன்னார்: ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என் நோன்பைப் பற்றி எழுதியிருந்தேன். அதில் தாங்கள் ஒரு வார்த்தையைத் திருத்தியிருந்தீர்கள்.”
காந்திஜி ”அப்படியா” நான் மறந்தே விட்டேன்!

அந்த அன்பர் கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவுறுத்திச் சொன்னார்: பாபூ, எனக்கு உள்ளே ஒரு கோரமான சண்டை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் கடவுள் கருணையால் பிரதிக்ஞையை வார்த்தையளவிலும் சரி, பொருள்ளவிலும் சரி, காத்துக் கொண்டு வருகிறேன்.”காந்தியடிகள் சொன்னார்: ‘

Read more...

தரம்

"டைடானிக்" கப்பல் !!!


"டைடானிக்" - தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம்.
முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. டைடானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகளை 2012 ம் ஆண்டு கடக்கவுள்ளது.

டைடானிக் விபத்தின் பதிவுகள் இன்றுவரை பசுமையுடன் நினைவு கொள்ளப்படுகின்றது , இதனால் இது தொடர்பாக வெளியான புத்தகங்கள் , திரைப்படங்கள் எண்ணிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. இந்தவகையில் டைடானிக் கப்பல் விபத்தினை வெகு நேர்த்தியுடன் நிஜமாக மக்கள் கண்முன் 1997ம் வருடத்தில் வெளிவந்த "டைடானிக்" திரைப்படம் கொண்டுவந்தது.

திரைப்படம் சொல்லிய காதல் கதை தவிர அனைத்து காட்சிகளும் சம்பவ தின நிகழ்வின் சாட்சியங்களின் அடிப்படையில் படமாக்கப்பட்டதாகும். பல நூறு பக்கங்களில் சொல்லமுடியாத சோக சம்பவத்தினை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து 11 ஆஸ்கார் விருதுகளை 1997 இல் மிகப்பெரிய சாதனை திரைப்படம் டைடானிக் பெற்றது .

200 மில்லியன் டாலர் செலவில் தயாரான டைடானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற சாதனை மட்டுமல்ல வசூலிலும் 1.85 பில்லியன் (1850 மில்லியன்) டாலர் மேலாக இதுவரை குவித்துள்ளது . மேலும் டைடானிக் கப்பல் விபத்து பற்றியதான 14 திரைப்படங்களும் , சின்ன திரைகளும் இதுவரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் சோகம் நிறைந்த டைடானிக் கப்பல் விபத்து தொடர்பான முக்கிய தகவல்கள் கீழ்வருமாறு.

டைடானிக்கின் முழு பெயர் RMS Titanic (Royal Mail Steamer Titanic).
அயர்லாந்து (Ireland) நாட்டின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் கட்டப்பட்டது.

டைடானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31 ம் திகதி தொடங்கி 1911 மே 31ம் திகதி முடிவுற்றது.

3,000 வேலையாட்கள் 3 மில்லியன் தறையாணி (கடாவி) களை பாவித்து கப்பலை கட்டிமுடித்தனர்.


அன்றய காலத்தில் டைடானிக்கை கட்டிமுடிக்க 7.5 மில்லியன் டொலர் பணம் செலவிட்டனர், அதன் இன்றய பெறுமதி 4,000 மில்லியன் டொலர் என கணக்கிடப்படுகின்றது.


முதலாவது பயணம் (கன்னி) 1912 ஏப்பிரல் 10 ம் திகதி தொடங்கப்பட்டது.

கப்பலின் நீளம் 882 அடி (269.1 மீற்றர்) , உயரம் 175 அடி (53.3 மீற்றர்) , மொத்த எடை 46,328 தொன் , வேகம் 21 நொட் (39 கிலோமீற்றர்/மணி) இதன் அதிகவேகம் 23 நொட் (43 கிலோமீற்றர்/மணி).
டைடானிக் கப்பல் அதிகபட்சம் 3,547 பயணியளையும் சிப்பந்திகளையும் கொள்ளக்கூடியது.


டைடானிக் கப்பல் கட்டுமானத்தில் அன்று இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்பமும் அதிகபட்சம் பாவித்து கட்டப்பட்டது.
ஒருநாளைக்கு 825 தொன் நிலக்கரியை டைடானிக் இயந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.


டைடானிகில் மொத்தம் 9 தட்டுக்கள் (மாடிகள்) , அத்துடன் ஆழம் 59.5 அடி எனவும் உயரம் 60.5 அடி எனவும் சொல்லப்படுகின்றது.
மொத்தமாக 4 புகை போக்கிகள் , இவற்றின் மொத்த உயரம் 175 அடி , இதில் 3 புகை போக்கவும் 1 காற்று போக்கியாகவும் பயன்பட்டது.
ஒருநாளைக்கு கப்பலுக்கு தேவைப்படும் சுத்தமான தண்ணீர் 14,000 கலன் கொள் அளவு.


டைடானிக்11 மாடி உயரமான கட்டிடதிற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது , இந்த கப்பலை வர்ணமூட்ட பெருமளவில் கறுப்பு மையுடன் வெண் வர்ணமும் பாவிக்கப்பட்டது.


முதலாவது நீச்சல் தடாகம் உள்ள கப்பலாக டைடானிக் வடிவமைக்கப்பட்டது.

விபத்து நடந்த தினம் .....1912 ஏப்ரல் 10 ம் திகதி அயர்லாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக 2,228 பேருடன் (1,343 பயணிகள் , 885 மாலுமிகள்) மறுநாள் (1912 ஏப்பிரல் 13 ம் நாள்) நியூயோர்க் நோக்கி டைடானிக் புறப்பட்டது.


அமைதியான கடலில் கரும் இருட்டில் (அமாவாசை) 5 நொட்டுக்கள் வேகத்தில் டைடானிக் பயணித்துக் கொண்டிருந்தது.


அன்றய தினம் (1912 ஏப்பிரல் 14 ம் நாள்) பயணிகள் தகவல் பரிமாறும் வானொலி தொடர்பில் பனிப்பாறை பற்றிய முன் எச்சரிக்கை இரு முறை ஒலிக்கப்படுகின்றது.


220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறையுடன் இரவு 11.40 மணிக்கு டைடானிக் மோதல் நடைபெற்றது.


டைடானிக் கப்பலின் கீழ் பகுதியில் உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது.


அன்றிரவு 12 மணி இலிருந்து மூழ்க ஆரம்பித்த கப்பல் காலை 2.20 மணி (15ம் ஏப்பிரல்) முழுமையாக மூழ்கியது.


அன்றய பனிப்பாறை விபத்தில் மாட்டிய டைடானிக் கப்பலில் இருந்த 20 உயிர்காப்பு படகுகளில் 705 சிறுவர்கள் , பெண்கள் மட்டும் உயிர் தப்பியதுடன் மிகுதி 1,523 பேர் கடலில் மாண்டனர்.


டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால் அவதானிக்கப்பட்டது.


அன்று கடல் விபத்தில் பலியான 1,523 பேரில் (பயணிகள், மாலுமிகள்) 300 பேரின் உடல்கள் மட்டும் பின்னர் மீட்கப்பட்டது.74 வருடங்களின் பின்................


அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடியில் (12,600 அடி அல்லது 3,925 மீற்றர் அல்லது இரண்டரை மைல் ஆழத்தில் ) இயந்திர நீர்மூழ்கி (Alvin,robot) உதவியுடன் டைடானிக் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.


டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பகுதிகளாக உடைந்த பாகங்கள் சமுத்திர அடியில் 1,970 அடி தூரத்தில் இருக்க காணப்பட்டது.சில தகவல்...


அன்றய பயணத்தில் முதல் வகுப்பில் மட்டும் 870 பயணிகள் பயணம் செய்தனர். முதல் வகுப்பிற்கு ஒவ்வொருவரும் 4,350 டொலர்களை அன்று செலுத்தினர் எனவும் இது இன்றய பெறுமதியில் 80,000 டொலருக்கு சமமானது எனவும் சொல்லப்படுகின்றது.

டைடானிக் தொடர்பாக காலத்திற்கு காலம் வெளியான 14 திரைப்படங்களும் , சின்ன திரைகளும் வருமாறு.

Saved from the Titanic (1912) , Titanic (1915), Atlantik (1929) , Titanic (1943) , Titanic (1953) , Night to Remember, A (1958) , S.O.S. Titanic (1979) , Raise the Titanic (1980) , Titanic (1984) , Titanic (1993) , Titanic (1996) , No Greater Love (1996) , Titanic (1997) , Titanic: Birth of a Legend (2005).


இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் !!!

எங்கிருந்து வருகிறது என்பது எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த எதிரி நாட்டில் உள்ள இலக்குகளைத் தாக்கி நிர்மூலம் செய்யக்கூடிய சக்திமிக்க ஆயுதம் இருக்க முடியுமா? அதுதான் உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுஆயுத ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இதை பிரும்மாஸ்திரம் என்றும் வர்ணிக்கலாம். இந்தியா இப்போது இவ்விதமான நீர்மூழ்கிக் கப்பலை (சப்மரீன்) உருவாக்கியுள்ளது. அது அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.


உலகில் இப்போது அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் இவ்வகை சப்மரீனைத் தயாரித்துள்ளது. இதை உருவாக்க இந்தியா பெரும்பாடுபட்டது என்று சொல்லலாம்.


டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் சாதாரண சப்மரீன்களைக் கட்டுவது என்பது எளிது. ஆனால் அணுசக்தியால் இயங்கும் சப்மரீனைக் கட்டுவது என்பது எளிதல்ல. இந்தியா டீசலினால் இயங்கும் சப்மரீன்களை ஏற்கெனவே தயாரித்து வருகிறது. டீசல் சப்மரீன்களை வெளிநாடுகளிடமிருந்து விலைக்கு வாங்க இயலும். ஆனால், அணுசக்தி சப்மரீன்களை எந்த நாடும் விற்பது கிடையாது. அதைத் தயாரிப்பதற்கு உதவி அளிப்பதும் கிடையாது. ஆகவே இந்தியா சொந்தமாக அணுசக்தி சப்மரீனை வடிவமைத்துத் தயாரிக்க வேண்டியதாயிற்று.


டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சப்மரீன்களால் தொடர்ந்து பல நாள்கள் நீருக்குள் மூழ்கியபடி செல்ல இயலாது. ஏனெனில் அடிக்கடி டீசலை நிரப்பியாக வேண்டும். நீருக்குள் இருக்கும்போது டீசல் எஞ்சின் இயக்கப்படுவதில்லை. அது சத்தம் எழுப்பும். அதன் காரணமாக அது இருக்கின்ற இடத்தை எதிரி சப்மரீனால் கண்டுபிடித்து எளிதில் தாக்க இயலும்.


இரண்டாவதாக டீசல் எஞ்சின் இயங்குவதற்கு காற்று அதாவது ஆக்சிஜன் தேவை. ஆகவே, மேலே வந்து நீரில் மிதந்த நிலையில் டீசல் எஞ்சின்கள் இயக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் நீருக்குள் மூழ்கிய நிலையில் பாட்டரி மூலம் - மின்சாரம் மூலம் சப்மரீன் செயல்படும். இக் காரணத்தால் இந்த வகை சப்மரீன்கள் டீசல் - எலக்ட்ரிக் சப்மரீன் என்று அழைக்கப்படுகின்றன. எதிரியால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அதனால் இயங்க இயலாது.


அணுசக்தி சப்மரீன் இந்த வகையில் மேலானது. இந்த சப்மரீனில் அணுசக்திப் பொருள் அடங்கிய அணு உலை ஒன்றைப் பொருத்திவிட்டால் போதும். மறுபடி 10 அல்லது 30 ஆண்டுகளுக்கு எரிபொருள் பிரச்னையே இராது. அணுசக்தி சப்மரீன் ஒன்றினுள் போதுமான உணவுப் பொருள் இருக்குமானால் அது தாய்த் துறைமுகத்துக்கு வராமல் நீருக்குள் இருந்தபடி உலகைப் பலமுறை சுற்றி வரலாம். அணுசக்தி சப்மரீன் நீருக்குள் இயங்கும்போது ஒலி எழுப்பாது.


அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலை இயங்குவதற்கு காற்று தேவையில்லை. எனவே நீருக்கு அடியிலிருந்து வெளியே தலைதூக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீருக்குள் கடலுக்குள் எங்கிருக்கிறது என்பதை அனேகமாகக் கண்டுபிடிக்க இயலாது.


அணுசக்தி சப்மரீனில் 12 நீண்ட தூர ஏவுகணைகள் இடம்பெறும். இவை ஒவ்வொன்றின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்த முடியும். இந்த சப்மரீன் அட்லாண்டிக் கடல், பசிபிக் கடல், இந்துமாக் கடல் என உலகின் எந்த ஓர் இடமாக இருந்தாலும் அங்கே இருந்தபடி எதிரி நாட்டை நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.
அமெரிக்கா, ரஷியா முதலான நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்கள் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவுகணைகளைப் பெற்றுள்ளன.



இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீனில் இப்போதைக்கு 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளே இடம் பெறும். எதிர்காலத்தில் மேலும் அதிக தொலைவு செல்லும் ஏவுகணைகள் இடம்பெறலாம்.



இந்தியா அணுசக்தி சப்மரீனை உருவாக்க சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகின. பல பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததே இதற்குக் காரணம். மின்சார உற்பத்திக்கான அணுஉலைகளை உருவாக்குவதில் இந்தியாவுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால் மின்சார நிலையங்களுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. சப்மரீனுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. மின்சார நிலையங்களுக்கான அணு உலைகள் வடிவில் பெரியவை. பொதுவில் அணு உலைகள் கடும் கதிர்வீச்சை வெளிப்படுத்துபவை.


இக் கதிர்வீச்சு ஆபத்தானவை. பெரிய அணுமின் நிலையங்களில் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படாதபடி தடுக்க கனத்த சுவர்கள் இருக்கும்.



இவற்றுடன் ஒப்பிட்டால் அணுசக்தி சப்மரீனில் இடம்பெறுகின்ற அணு உலையானது வடிவில் சிறியதாகவும் சக்திமிக்கதாகவும் உள்ளது. சப்மரீனில் பணியாற்றுகின்ற ஊழியர்களை கதிர்வீச்சு தாக்காதபடி சிறப்பான பாதுகாப்பு உள்ளது.



சப்மரீனில் இடம்பெறும் அணு உலையில் பயன்படுத்தப்படுகிற அணுசக்திப் பொருள் வேறானது. பொதுவில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் சப்மரீனின் அணு உலையில் இடம்பெறும். இந்தியா இதையும் தயாரிக்க வேண்டி வந்தது.
அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலையில் செறிவேற்றப்பட்ட யுரேனியப் பொருள் கடும் வெப்பத்தை வெளியிடும்.



இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீராவி ஒரு டர்பைனை இயக்கும். இதன் பலனாக சப்மரீனில் சுழலி இயங்க சப்மரீன் நீருக்குள் இயங்கும். அத்துடன் இந்த டர்பைன் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் கடல் நீரைக் குடிநீராக்க முடியும். சப்மரீனுக்குள் இருக்கும் காற்றைச் சுத்திகரிக்க இயலும்.



சப்மரீனுக்கான அணு உலை எடை மிக்கது. ஆகவே சப்மரீனில் ஸ்திர நிலை பாதிக்கப்படாத வகையில் அணு உலை சப்மரீனில் நடுப்பகுதியில் இடம்பெறும். அந்தவகையில் சப்மரீன் வடிவமைக்கப்படுகிறது. இந்தியா இது தொடர்பான பிரச்னையை வெற்றிகரமாகச் சமாளித்தது. இப்போது இந்திய அணுசக்தி சப்மரீனில் இடம்பெறும் அணு உலை கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சப்மரீனைக் கட்டுவதற்கான விசேஷ வகை உருக்கைப் பெறுவதிலும் இந்தியாவுக்குப் பிரச்னை ஏற்பட்டது.



எல்லா வகை சப்மரீன்களிலும் ஒருவகை சோனார் கருவிகள் உண்டு. இவை ஒலி அலைகளை வெளிப்படுத்தும். இந்த ஒலி அலைகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள சப்மரீன்கள் மீது பட்டு எதிரொலித்துத் திரும்புவதை வைத்து அந்த சப்மரீன்களைக் கண்டுபிடித்து விட முடியும்.


எதிரி சப்மரீனின் சோனார் கருவிகளை ஏமாற்றும் வகையில் இந்திய சப்மரீனின் வெளிப்புறத்தில் நுண்ணிய துளைகள் கொண்ட ரப்பர் பொருள் ஒரு பூச்சாக அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே இந்திய அணுசக்தி சப்மரீனை எதிரி சப்மரீன்களால் எளிதில் அடையாளம் காண முடியாது.



இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரிக்கும் திட்டம் நீண்ட காலம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் இந்த சப்மரீன் பற்றிய தகவல்கள் வெளியே தெரிய வந்துள்ளன.



இந்தியாவின் டீசல் - எலக்ட்ரிக் சப்மரீன்களால் அதிக தொலைவு செல்ல இயலாது என்ற காரணத்தால் அவை இந்தியக் கடலோரப் பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. இப்போது இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீன் உலகின் எந்த மூலைக்கும் செல்லக்கூடியது.


இதுபோன்று மேலும் பல அணுசக்தி சப்மரீன்களைக் கட்டுவதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது. இவையும் கடலில் இயங்க ஆரம்பித்ததும் எந்த நாடும் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயங்கும்.



எந்த ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் சரி, எந்தவிதத் தொழில் நுட்பமாக இருந்தாலும் சரி, அது அணுசக்தி தொடர்பான பணிக்குப் பயன்படுத்தப்படலாம் என்றால் அதை யாரும் இந்தியாவுக்கு வழங்கக்கூடாது என அமெரிக்கா விதித்த தடை (இந்தியா - அமெரிக்கா அணுசக்தி உடன்பாடு கடந்த ஆண்டில் கையெழுத்தானது வரையில்) அமலில் இருந்த காரணத்தால் அணுசக்தி சப்மரீன் தொடர்பாக வெளிநாடுகளிலிருந்து பல பொருள்களை காசு கொடுத்தாலும் வாங்க முடியாது என்ற நிலை இருந்தது.


இப்படியான பல பிரச்னைகளைச் சமாளித்துத்தான் இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரித்துள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.



உங்களுக்கு தெரியுமா ?

(வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)



நீங்கள் சீனாவில் ஒரு மில்லியனில் ஒருவராக இருந்தால் உங்கள் மாதிரி 1,300 மக்கள் இருப்பார்கள்.



இந்தியாவின் மொத்த சனத் தொகையின் 25% மக்கள் மிக்க அறிவுத்தகமை (IQ) உடையவராவர். இந்த தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையிலும் அதிகமாகும்.



அமெரிக்க சிறுவர்களை விடவும் இந்திய சிறுவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.



2010இல் அதிக முதலிடத்தில் (demand) என பேசப்பட இருக்கும் 10 தொழில்கள் 2004 ம் வருடத்தின் முன்னய கலங்களில் மனிதனால் செய்து பாத்திருக்காத அல்லது என்றுமே கேள்வி பட்டிருக்காத வேலைகளாக இருக்கும்.



மேலும் , வேலை செய்பவர்கள் தமது வேலையில் உபயோகிக்க இருக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. எதிகால வேலைகளில் அமுல்படுத்தவுள்ள தீர்வுகளுக்கான பிச்சினைகள் இன்னும் தோன்றவும் இல்லை.





அமெரிக்க தொழிலாளர் திணைக்களத்தின் கருத்துப்படி எதிர்காலத்தில் ஒருவர் 38 வயதை அடையும் முன்பதாக 10 தொடக்கம் 14 வேலைகளை செய்தவராக இருப்பர்.



இதே திணைக்களத்தின் தகவல் படி நிறுவனங்களில் வேலை செய்வோரில் 4 இல் ஒருவர் 1 வருடத்திலும் குறைவான கலத்திலேயே வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பர். மேலும் இதே தரவில் 2 க்கு ஒருவர் 5 வருடத்திலும் குறைவான கலத்தில் நிறுவனங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டும் இருப்பார்களாம்.





கடந்த வருடம் அமெரிக்காவில் திருமணம் செய்யும் தம்பதிகளில் 8 இல் ஒருவர் இணையம் மூலமாக இணைந்தவராவர்.

மைஸ்பேஸ் (
My Space) இணையத்தில் பதிவுசெய்த அங்கத்தவர்கள் எண்ணிக்கை 200 மில்லியன்.

மைஸ்பேஸ (My Space) ஒரு நாடாக கருதுமிடத்தில் இது உலகின் 5வது அதிகம் சனத்தொகை கொண்ட இடத்தை தக்கவைக்கும். ( இது பட்டியலில் இந்தோனேசியா, பிரேசில் நாடுகளின் இடையில் இடம்பிடிக்கும்.)



இணைய தொடர்பில் அதிவேக (broadband) இணைப்புக்களை கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் ............

பெஃர்முடா (
Bermuda) முதலாம் இடத்திலும்

அமெரிக்கா 19 வது இடத்தை வகிக்கின்றது.

யப்பான் 22 வது இடம்.

( (நாங்கள் அதீத வேகமுள்ள விஞ்ஞான உலகில் வழ்கின்றோம்))



ஒவ்வொரு மாதமும் கூகிள் (Google) மூலமாக 31 பில்லியன் மேற்ப்பட்ட தேடுதல்கள் நடாத்தப்படுகின்றது. அத்துடன் கூகிளில் 2006ம் ஆண்டில் 2.7 பில்லியனாக மாதாந்த தேடுதல் இருந்தது.



குறும் எழுத்து தகவல் (
text messages) 1992 ம் டிசம்பர் மாதத்தில் இருந்து வர்த்தக நோக்குடன் அறிமுகமானது. தினமும் குறும் எழுத்து தகவல் (text messages) பரிமாற்றங்களின் மொத்த எண்ணிக்கை உலக சனத் தொகையை விட அதிகமாகும்.



உலகின் பல பாகங்களிலுமுள்ள 50 மில்லியன் மக்களை சென்று அடைவதற்கு பின்வரும் சாதனங்கள் எடுத்துக்கொண்ட காலங்கள்.



வானொலி (Radio) 38 வருடங்கள்.



தொலைக்காட்சி (TV) 13 வருடங்கள்.

இணையம் (internet) 4 வருடங்கள்.



பேஸ்புக் (
facebook) 3 வருடங்கள்.

ஐபொட் (iPod) 2 வருடங்கள்.



ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.

இணையதளம் 1984 இல் இருந்து மக்கள் பாவனைக்கு வந்ததன் பின்பான காலத்தில் அதன் பாவனையாளர் எண்ணிகை கீழ்வருமாறு.



1984 இல் 1,000 இணைய பாவனையாளர்



1992 இல் 1,000,000 இணைய பாவனையாளர்



2008 இல் 1,000,000,000 இணைய பாவனையாளர்



ஒருவாரத்தில் நியூயொர்க் டைம்ஸ் வெளியிடும் தகவல்கள் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் வாழ்நாளில் அறிந்திருக்கக் கூடிய தகவல்களுக்கு சமம்.



உலகம் முழுவதும் இந்த வருடம் மட்டும் உருவாக்கப் படக்கூடிய புதிய தகவல்களின் தொகை 4 எக்ஸாபைற் (4
exabyte=4 உடன் பெருக்கமாக 10 இன் 18ம் அடுக்குகள் ) என கணகிடப்படுகின்றது.

இது கடந்த 5,000 வருடகாலத்தில் உருவாக்கப்பட்ட மொத்த தகவல்களையும் விட அதிகமாகும்.



தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு 2 வருடம் ஒருமுறை புதியவடிவம் பெற்று இரட்டித்து செல்கின்றது. இவ்வாறு புதிய வடிவம் பெற்றுவருவதால் 4 வருடம் முன்பதாக கற்ற ஒருவிடையம் இன்று பலனற்று விடுகின்றது.



3வது தலைமுறை (
3rd generation) கண்ணாடி இழைகள் (fiber optics) பரீட்சிக்கப் பட்டுவிட்ட 3வது தலைமுறை கண்ணாடி இழை (fiber obtics) யப்பானின் NTTஇனால் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டு விட்டது.ன.

இதில் தகவல் ஒரு செக்கனுக்கு 10 ரில்லியன்(10,000 பில்லியன்) பிற் எனும் வேகத்தில் பயணிக்கும். இது 1,900 குறும் தட்டு(CDs) அல்லது 150 மில்லியன் தொலை பேசி தொடர்புகளை ஒரேநேரத்தில் தொடுப்பதற்கு சமானமாகும். மேலும் இந்த வேகமானது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு மூன்று மடங்காகி வருவதாகவும் இது அடுத்த 20 வருடங்களுக்கு தொடருமென சொல்லப்படுகின்றது.



2013 ம் ஆண்டில் மனித மூளையை மிஞ்சிய செய்திறனுள்ள அதிசக்திவாய்ந்த (
Supercomputer) தயாராகிவிடும்.



2049 ம் ஆண்டில் 1000 டொலருக்கு கொள்முதல் செய்யக்கூடிய அதிசக்திவாய்ந்த (Super Computer) கணனிகள் முழு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த செய்திறனுக்கு சமமாக இருக்கும்.குறித்த வீடியோ பார்க்கும் கால அளவுக்குள்................



அமெரிக்காவில் 67 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.



சீனாவில் 274 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.



இந்தியாவில் 395 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.



அத்துடன் இணையத்தில் 694,000 பாடல்கள் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப் பட்டுவிடும்.ஆகவே இவை எல்லாம் தரும் அர்த்தம் என்ன ?




எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!!

ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின்புலத்தில் உருவாகியிருந்த பி.எல்.ஓ. பாலஸ்தீனில் மட்டுமல்லாமல் ஏனைய அரபு தேசங்கள் அனைத்திலும் பயிற்சிப் பாசறைகளை உருவாக்கி, தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.


அதுவரை பி.எல்.ஓ.வில் சேராத யாசர் அராஃபத்தின் அல் ஃபத்தா மட்டும் குவைத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தது.எல்லோருமே பெரியதொரு யுத்தத்தைத்தான் எதிர்நோக்கியிருந்தார்கள். எப்போது அது வெடிக்கும், யார் காரணமாக இருப்பார்கள் என்பதுதான் தெரியாமல் இருந்தது.ஜோர்டன் காரணமாயிருக்குமோ? எல்லைப் பிரச்னையில் இப்படி முட்டிக்கொள்கிறார்களே என்று பார்த்தால், வடக்கே சிரியாவின் எல்லையிலும் சிண்டுபிடிச் சண்டைதான் நடந்துகொண்டிருந்தது.


தெற்கே எகிப்துடன் எத்தனை முறை அமைதிப்பேச்சு நடத்த இஸ்ரேல் முயற்சி செய்துகொண்டிருந்தாலும் இஸ்ரேலை ஒரு பொருட்டாக மதித்துப் பேச அங்கும் யாரும் தயாராக இல்லை.இஸ்ரேலுக்கும் மிக நன்றாகத் தெரிந்துதான் இருந்தது. ஆயிரம் இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்கள். லட்சமே இருந்தாலும் தாங்கள் யூதர்கள். இது ஒட்டாது.


ஒருபோதும் ஒட்டவே ஒட்டாது.ஆகவே, இரு தரப்பிலுமே அமைதியை உதட்டில் தேக்கி வைத்துக்கொண்டு, உள்ளுக்குள் ஆயுதப்பயிர்தான் செய்துகொண்டிருந்தார்கள்.1952-ம் ஆண்டு எகிப்தில் ஒரு சம்பவம் நடந்தது. பின்னால் நடக்கப்போகிற மாபெரும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் போன்றதொரு சம்பவம் அது.பிரிட்டன் அரசின் கைக்கூலிபோலச் செயல்பட்டு, அதுவரை எகிப்தில் உப்புப் பெறாத ஆட்சி நடத்திக்கொண்டிருந்த மன்னர் ஃபாரூக் என்பவரை, ராணுவம் தூக்கியடித்தது.


பலகாலமாக உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த பிரச்னைதான். அந்த வருஷம் வெடிக்க வேண்டுமென்றிருந்திருக்கிறது. அவ்வளவுதான்.அந்த வருடம் ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற அந்த ராணுவப் புரட்சியின் சூத்திரதாரி, எகிப்து ராணுவத்தின் முக்கியத் தளபதிகளுள் ஒருவராக அப்போதிருந்த கமால் அப்துல் நாசர் (Gamal Abdel Nasser). கவனிக்கவும்.நாசர் அப்போது தலைமைத் தளபதி கூட இல்லை. அவர் ஒரு லெப்டினண்ட் ஜெனரல். அவ்வளவுதான். எகிப்து ராணுவத்தின் மூத்த தளபதியாக இருந்தவர் பெயர் முகம்மது நஜிப் (Muhammad Naguib). அவருக்குக் கீழேதான் நாசர் பதவி வகித்து வந்தார்.மூத்த தளபதிகள் அனைவரும் கலந்து பேசி, மன்னரை ஒழித்துவிடலாம் என்று முடிவு செய்து பொறுப்பை நாசரிடம் விட்டார்கள்.


நாசரும் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைச் சரியாகச் செய்து முடித்து, எந்த வஞ்சகமும் செய்யாமல் முகம்மது நஜிப்பை நாட்டின் சர்வாதிகாரியாக அமர வைத்தார்.இந்தச் சம்பவம் பல மேலை நாடுகளை, குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை மிகவும் கவலையுறச் செய்தது.மன்னர் ஃபாரூக் இருந்தவரை, இங்கிலாந்தின் அறிவிக்கப்படாததொரு காலனி போலவேதான் இருந்தது எகிப்து. என்ன செய்வதென்றாலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தைக் கேட்காமல் அவர் செய்யமாட்டார்.




முக்கியமாக, கடல் வாணிபத்தில் இங்கிலாந்து கொள்ளை லாபம் சம்பாதிக்க ஃபாரூக் ஏகப்பட்ட உதவிகள் செய்து வந்திருக்கிறார்.ஆனால், திடீரென்று ஏற்பட்ட புரட்சியும் ஆட்சி மாற்றமும் எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாராலும் உடனே கணித்துக் கூற முடியவில்லை.ஏனெனில், புரட்சி செய்தது நாசர் என்றாலும், பதவி ஏற்றது நஜிப். ஒரு கட்சி என்றால் அதன் சரித்திரத்தை, சமகாலத்தைப் பார்த்து எப்படி இருக்கும், என்ன செய்யும் என்று கணிக்கலாம்.


ஒரு தனிநபரை என்ன செய்து கணிக்க முடியும்? அவரது பின்னணியும் சரித்திரமும் தெரிந்தால் தானே சாத்தியம்?உலக நாடுகளுக்கு அப்போது நாசரையும் தெரியாது, நஜிப்பையும் தெரியாது. நஜிப் பிரசிடெண்ட் ஆனார் என்றால், நாசர் அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உட்கார்ந்தார்.இங்கேதான் பிரச்னை ஆரம்பித்தது.


நாசர், நிறையப் படித்தவர். அரசியலில் பெரிய ஞானி. சுய சிந்தனையாளரும் கூட. பதவி ஏற்ற உடனே எகிப்தின் நலனுக்கு என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்தால் யார் யார் அதனால் பாதிக்கப்படக்கூடும், யார் சண்டைக்கு வரக்கூடும், என்ன செய்து சமாளிக்கலாம் என்று ஒரு பட்டியல் தயார் செய்தார் நாசர்.


இதனுடன்கூட ஒட்டுமொத்த மத்தியக்கிழக்குப் பிரச்னைகளையும் சேர்த்து வைத்து ஆராய்ந்து, அவற்றில் எகிப்தின் பங்களிப்பு மற்றும் ஈடுபாடு என்னவாக இருக்கலாம் என்றும் யோசித்து ஒரு பட்டியல் தயாரித்தார்.நாசரின் மூன்றாவது பட்டியல், ஐரோப்பிய தேசங்களால் தமக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள் பற்றியது.ஒரு சக்திமிக்க தலைவனாக, தான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால், எகிப்தை ஒரு சர்வவல்லமை பொருந்திய தேசமாக மாற்றுவதோடு, மத்தியக்கிழக்கின் ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாக நிறுவிவிடமுடியும் என்பதே அவரது எண்ணம்.பகிர்ந்துகொள்ளவில்லை.


மாறாக, சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து, முகூர்த்தம் கூடி வந்த ஒரு வேளையில், தானே பதவியில் அமர்த்திய அதிபர் முகம்மது நஜிப்பை வீட்டுக்கு அனுப்பினார்.ஒருவரைப் பதவி நீக்க, ராணுவத்தினர் முடிவு செய்தால் அதற்காகப் பெரிய காரணங்களையெல்லாம் தேடவேண்டியதில்லை. ஊழல் ஒரு எளிய காரணம். அதைக்காட்டிலும் உத்தமமான எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.நஜிப்பைப் பதவியிலிருந்து தூக்க நாசர் சொன்ன காரணம், அவர் எகிப்தின் நலனுக்காகச் சிந்திப்பதை விடுத்து முஸ்லிம் சகோதரத்துவத்தைத் தூக்கிப்பிடித்து ஆதரித்து பொழுதை வீணடித்துக்கொண்டிருக்கிறார் என்பது.


1954-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நஜிப் தூக்கியடிக்கப்பட்டார். நாசர், எகிப்தின் பிரசிடெண்டாகத் தன்னை அறிவித்துக்கொண்டு பதவியில் அமர்ந்தார். கொஞ்சம் கலவரம், அடிதடி, தீவைத்தல், கைகலப்பு, மோதல் எல்லாம் இருந்தது. ஆனாலும் நாசர் வெற்றியடைவதில் பெரிய பிரச்னை இருக்கவில்லை.


பதவிக்கு வந்ததுமே நாசர், தான் முன்னர் தீட்டிவைத்திருந்த திட்டங்களை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துக்கொண்டு முழு வேகத்தில் வேலையைத் தொடங்கினார். மூன்று விஷயங்களில் அவர் தம் முதல் கவனத்தைச் செலுத்தினார்.முதலாவது, தொழில்துறையைத் தேசியமயமாக்குவது. இரண்டாவது நிலச்சீர்திருத்தம்.


மூன்றாவது, நீர்த்தேக்கங்கள் கட்டி விவசாயத்தைப் பெருக்குவது மற்றும் கடல் வர்த்தகத்தில் தீவிர கவனம் செலுத்துவது.இதன் அடிப்படையில்தான் அவர் தமது தேசத்தின் எல்லைக்குட்பட்ட அகபா வளைகுடா (Gulf of Aquaba) மற்றும் சூயஸ் கால்வாய் பகுதிகளை இழுத்து மூடினார்.வளைகுடாப் பிராந்தியத்தையும் கால்வாயையும் இழுத்து மூடுவதென்றால்?பிற நாட்டுக் கப்பல்கள் அந்த வழியே போவதைத் தடைசெய்வது என்று அர்த்தம்.நாசர் சூயஸ் கால்வாய்க்கு சீல் வைத்த சம்பவம் உலக சரித்திரத்தில் இடம்பெற்ற மிகப் பரபரப்பானதொரு சம்பவம்.


இத்தனை தைரியம், இத்தனை நெஞ்சுரம், இத்தனை துணிச்சல் கொண்ட எந்த ஒரு அரபுத் தலைவரையும் அதற்கு முன் உலகம் சந்தித்ததில்லை.அமெரிக்கா அரண்டு போனது. பிரிட்டன் பதறிக்கொண்டு எழுந்தது. பிரான்ஸ் மூக்குமேல் விரல் வைத்தது. உலகமே நாசரை வியந்து பார்த்தது.ஆனால், இதனால் உடனடிப் பாதிப்பு யாருக்கென்றால் இஸ்ரேலுக்குத்தான்.


இஸ்ரேலின் கப்பல்கள்தான் சூயஸ் கால்வாயை அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்தன. வர்த்தகக் கப்பல்கள். எண்ணெய்க் கப்பல்கள். அவ்வப்போது போர்க்கப்பல்கள்.நாசர் என்ன சொன்னார்?'சூயஸ் கால்வாய் நமது தேசிய சொத்து. இதை நான் நாட்டுடைமை ஆக்குகிறேன். இதனைப் பயன்படுத்தி வேறு பல நாடுகள் கடல் வர்த்தகத்தில் கொழித்துக்கொண்டிருக்கின்றன. அதை அனுமதிக்க முடியாது.இதை நாட்டுடைமை ஆக்கி நமது வர்த்தகத்தைப் பெருக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயில், 'நான் நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை (கிsஷ்ணீஸீ பிவீரீலீ ஞிணீனீ) கட்டுவேன்.


விவசாயத்தைப் பெருக்குவேன்.' ''இந்த அறிக்கைதான் இஸ்ரேலைச் சீண்டியது. பிரிட்டனுக்குக் கோபம் வரவழைத்தது. ஒட்டுமொத்த உலகையும் வியப்படையச் செய்தது.நாசரின் அஸ்வான் அணைத்திட்டம் மிகப்பெரியதொரு திட்டம். சொல்லப்போனால் அமெரிக்காவும் பிரிட்டனும் ஆளுக்குச் சரிபாதி நிதி உதவி செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் ஒட்டுமொத்த எகிப்துக்கும் மாபெரும் பலன் கிடைக்கும் என்று பேசி ஒப்பந்தமெல்லாம் செய்திருந்தார்கள்.


ஆனால் நாசர் திடீரென்று சூயஸ் கால்வாய் விஷயத்தில் தடாலடி அறிக்கை விடுத்து, கப்பல் போக்குவரத்தைத் தடை செய்ததோடல்லாமல், கம்யூனிஸ்ட் செக்கோஸ்லாவாக்கியாவிடமிருந்து ஆயுதங்களை வேறு வாங்கிச் சேர்த்தபடியால், அமெரிக்காவும் பிரிட்டனும் அந்தக் கணமே தமது ஒத்துழைப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டன.இதோடாவது நாசர் நிறுத்திக்கொண்டாரா என்றால், அதுதான் இல்லை!


முதலாளித்துவ தேசங்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இப்பட்டியலில் இஸ்ரேலையும் சேர்த்தார்.அந்த தேசங்களுக்கு எதெல்லாம் பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து, அதை மட்டும் செய்ய ஆரம்பித்தார்.உதாரணமாக கம்யூனிஸ்ட் தேசமான சீனாவுடன் நல்லுறவுக்கு வேலை செய்தார், சோவியத் யூனியனை நட்பாக்கிக்கொண்டார்.இதையெல்லாம் பார்த்து அப்போதைய பிரிட்டன் பிரதம மந்திரி சர் ஆண்டனி ஈடனுக்கு (Sir Anthony Eden) ரத்தக்கொதிப்பே வந்துவிட்டது.



'ஒரு யுத்தம் நெருங்கிக்கொண்டிருக்கிறது' என்று பகிரங்கமாகவே அவர் தம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியொன்றில் குறிப்பிட்டார்.'நாசரின் தேசியவாதம் நல்லதுக்கே இல்லை. இது இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் பேசிய தேசியவாதம் போன்றதுதான். அவர்களுக்கு நேர்ந்த கதிதான் நாசருக்கும் நேரும்' என்றே குறிப்பிட்டார் அவர்.எல்லாவற்றுக்கும் மூலகாரணம் சூயஸ்!



இவற்றுக்கு மட்டுமல்ல; இதற்கெல்லாம் பின்னால் சில வருடங்கள் கழித்து, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நடைபெற உள்ள ஆறு நாள் யுத்தம் என்று அழைக்கப்பட்டதொரு பெரிய போருக்குமேகூட அந்தக் கால்வாய்தான் மூலகாரணம் என்பதால் மிகவும் கொஞ்சமாகவாவது சூயஸ் கால்வாய் பிரச்னையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது இங்கே இன்றியமையாததாகிறது.இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னையின் இரண்டாம் பாகமும் இந்த சூயஸ் கால்வாயில்தான் பிறக்கிறது.



மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் பிரிக்கும் எகிப்தின் வடக்குப் பகுதியில் இந்தக் கால்வாயை வெட்டியதனால்தான் ஐரோப்பாவும் ஆசியாவும் கடல் வழியே மிக நெருக்கமாக இணைய முடிந்தது.விமானப் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்தெல்லாம் சரிப்படாத காரியங்களுக்கு முன்பெல்லாம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டுதான் கடல் மார்க்கமாக ஆசியாவை அடைய முடியும்.இந்த ஒரு கால்வாய் ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தையே திசைமாற்றி வழி நடத்தச் செய்திருக்கிறது என்றால் நம்புவது சற்று சிரமமாகத்தான் இருக்கும்.


ஆனால் அதுதான் உண்மை.நீர் ததும்பும் இந்தப் பிராந்தியத்தில் தீப்பிழம்புகளும் அந்தச் சமயத்தில் எழவே செய்தன.காரணம், நாசர். சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி, சர்வதேசக் கப்பல் வர்த்தகத்துக்குக் குண்டுவைத்த அவரது அந்த அறிவிப்பு.


கால்வாய்க்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிட முடியும்?ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சூயஸின் பெயர்தான் கால்வாயே தவிர, உண்மையில் அது ஒரு சிறிய கடல் என்றுதான் சொல்லவேண்டும்.அத்தனை நீளம். அத்தனை ஆழம். பிரும்மாண்டமான கப்பல்களெல்லாம் மிக அநாயாசமாக வரும். யுத்த தளவாடங்களை, போர் விமானங்களை ஏற்றிக்கொண்டு ராணுவக் கப்பல்கள் அங்கே அணிவகுக்கும். வெள்ளம் வரும். எல்லாம் வரும்.


மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட கால்வாய் இது.இன்று நேற்றல்ல. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இப்படியொரு கால்வாய்க்கான சாத்தியத்தையும் அவசியத்தையும் அந்நாளைய எகிப்து மன்னர்கள் யோசித்திருக்கிறார்கள்.


முதலில் நேரடியாக இரு கடல்களை ஒரு கால்வாய் வெட்டி இணைக்கலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை. மாறாக, ஒரு கால்வாயை வெட்டி எகிப்தின் அங்கவஸ்திரம் மாதிரி தேசமெங்கும் ஓடும் நைல் நதியில் எங்காவது இணைத்துவிட்டால், நைல் நதி கடலுக்குப் போகும் பாதை வழியே கப்பல்கள் செல்லலாம் என்றுதான் யோசித்தார்கள்.


இந்த யோசனை, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர்கள் துத்மோசிஸ் 3 (Thuthmosis III), பராநெகோ (Pharaoh Necho) ஆகியோருக்கு இருந்திருக்கிறது. சில சில்லறை முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.


அதற்குச் சில காலம் கழித்து (எத்தனை காலம் என்று துல்லியமாகத் தெரியவில்லை) ஈரானியர்கள் (அப்போது பெர்சியர்கள்) எகிப்தின் மீது ஒரு சமயம் படையெடுத்து வென்றிருக்கிறார்கள். அப்போது எகிப்தின் ஆட்சிப்பீடத்தில் ஏறிய மன்னர் டேரியஸ் 1 (Darius I) இந்தக் கால்வாய்த்திட்டத்தை உடனே செய்துமுடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.



அப்போது ஒரே கால்வாயாக அல்லாமல் இரண்டு தனித்தனி கால்வாய்களை வெட்டி, இரு எல்லைகளில் இணைத்து, நடுவே ஒரு பொதுச் சரடாக நைல் நதியை இணைத்திருக்கிறார்கள். சிலகாலம் இந்தக் கால்வாய் ஒழுங்காக இருந்திருக்கிறது.இடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்களால் நாசமாகி, மீண்டும் கால்வாய் சரி செய்யப்பட்டு, மீண்டும் நாசமாகி, ஒரு கட்டத்தில் கால்வாய்த் திட்டத்தையே கைவிட்டுவிட்டார்கள்.


சூயஸ் கால்வாய் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்கிற முடிவுக்கு அப்போதைய எகிப்து மன்னர்கள் வந்துவிட்டார்கள்.சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு மறுபிறப்பு அளித்தவர் நெப்போலியன். அவர் பிரான்சின் சக்கரவர்த்தியாக இருந்தபோதுதான் (கி.பி. 1800 காலகட்டம்) ஐரோப்பாவையும் இந்தியாவையும் கடல் மூலமாக இணைப்பதற்கு இந்தக் கால்வாய்த்திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் முடியும் என்று சொன்னார்.


சொன்னதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பொறியாளர்களையும் அங்கே அனுப்பி வேலையை உடனே ஆரம்பிக்கச் செய்தார். (நெப்போலியன் அப்போது எகிப்து மீது படையெடுத்து வெற்றி கண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சு பொறியாளர்கள், எகிப்துக்கு வந்து பார்த்து முதலில் சர்வே எடுத்தார்கள்.


நிலப்பரப்பின் மீதான ஆய்வைத் தொடர்ந்து நடத்தி முடித்தவர்களுக்கு, அப்படியொரு கால்வாய் கட்ட சாத்தியமே இல்லை என்றுதான் முதலில் தோன்றியது.ஏனெனில், அவர்கள் கணக்குப்படி மத்திய தரைக்கடலுக்கும் செங்கடலுக்கும் பத்து மீட்டர் உயர இடைவெளி இருந்தது.அதை மீறி கால்வாய் வெட்டுவதென்றால் ஏகப்பட்ட நிலப்பரப்பு நீரில் மூழ்கி நாசமாகிவிடும். பரவாயில்லை என்றால் கால்வாய் வெட்டலாம் என்று சொன்னார்கள்.


நெப்போலியன் யோசித்தார். இறுதியில் அவரும் பின்வாங்கிவிட்டார்.ஆனால், அந்தப் பொறியாளர்களின் கணக்கு தவறு என்று சிறிதுகாலம் கழித்து வேறொரு பிரெஞ்சு பொறியியல் வல்லுநர் நிரூபித்தார். அவர் பெயர் ஃபெர்டினாண்ட் (Ferdinond de Lesseps). இவர் வெறும் பொறியாளர் மட்டுமல்ல. கெய்ரோவுக்கான பிரெஞ்சு தூதரும் கூட.ஃபெர்டினாண்ட் வகுத்தளித்த வரைபடம் மிகவும் சுத்தமாக இருந்தது. கால்வாய் கட்டுவதில் பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்றே ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.


ஆகவே 1859-ம் ஆண்டு எகிப்து அரசு கால்வாய் வெட்டத் தொடங்கிவிட்டது.ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் தருவிக்கப்பட்டார்கள். இரவு பகலாக வேலை பார்க்க உத்தரவிடப்பட்டது. உண்மையிலேயே ஒரு வேள்வி போலத்தான் அந்த வேலையை எடுத்துக்கொண்டார்கள்.இறுதியில் 1867-ல் சூயஸ் கால்வாய் கட்டிமுடிக்கப்பட்டது.


எட்டு வருடங்கள்! மிகப்பெரிய விழாவெல்லாம் எடுத்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய மன்னர்களையெல்லாம் அழைத்து, ஊரைக்கூட்டிக் கொண்டாடினார்கள்.அன்றுமுதல் சர்வதேசக் கடல் வாணிபம் சூடுபிடிக்கத் தொடங்கியது.ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கெல்லாம் மாநகரப் பேருந்துகள் மாதிரி கப்பல்கள் அடிக்கடி வந்துபோகத் தொடங்கின. ஆப்பிரிக்காவை அணுகுவது சுலபமானது.


மத்தியக்கிழக்கின் வர்த்தகமே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது.இருபதாம் நூற்றாண்டில் இந்த வர்த்தகப் பாதைக்கு இன்னும் கணிசமான மவுசு உண்டானது. சூயஸ் கால்வாய் இல்லாத ஒரு சூழலை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்கிற நிலை ஏற்பட்டது. குறிப்பாக இஸ்ரேலுக்கு.புதிதாகத் தோன்றிய தேசமான இஸ்ரேல், தன்னுடைய உள்கட்டுமானத்தை வலுப்படுத்திக்கொள்ள வர்த்தக வருமானத்தையே பெரிதும் நம்பியிருந்த காலம் அது.இயந்திரங்கள், பேரீச்சம்பழங்கள், ஆயுத உதிரிபாகங்கள் ஆகியவைதான் அப்போது இஸ்ரேலின் பிரதானமான ஏற்றுமதிச் சரக்குகள். சூயஸ் கால்வாய் பக்கத்திலேயே இருந்தபடியால் இஸ்ரேலின் இவ்வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சூடுபிடித்தன. நல்ல வருமானமும் இருந்தது.


ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் வலுவான வர்த்தகத் தளங்களை நிறுவும் முயற்சியில் அவர்களுக்குக் கணிசமான பலன் கிடைக்கத் தொடங்கியிருந்தது.வர்த்தக ரீதியில் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் இந்தக் கால்வாய், மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது.


முதல் உலகப்போரின் போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் சூயஸ் கால்வாயை மூடி, எதிரிக்கப்பல்கள் நகர முடியாதபடி செய்து திக்குமுக்காட வைத்தது சரித்திரத்தில் மிகப்பெரியதொரு சம்பவம். இரண்டாம் உலகப்போரிலும் சூயஸ் கால்வாயின் பங்கு இதே போல குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகவே விளங்கியிருக்கிறது. முசோலினியின் படைகள் (ஹிட்லரின் கூட்டணி நாடான இத்தாலியினுடைய படைகள்) ஆப்பிரிக்காவுக்குப் போவதைத் தடுக்கிற விஷயத்தில் இந்தக் கால்வாய்தான் ஒரு கதாநாயகன் போலச் செயல்பட்டிருக்கிறது!


இந்தப் பின்னணியில்தான் நாம் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்க முடிவு செய்ததை அணுக வேண்டும்.புவியியல் படி நாசர் முடிவெடுத்தது சரிதான். சூயஸ் கால்வாய் என்பது முழுக்க முழுக்க எகிப்து நாட்டுக்குள் ஓடும் ஒரு கால்வாய்.இரண்டு கடல்களை இணைக்கிற படியால் அது பொதுச்சொத்தாக இருந்ததே தவிர, எகிப்து அதைத் தன் தனிச்சொத்து என்று சொன்னால் சட்டப்படி யாரும் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் உண்மையும் கூட.


ஆனால், இந்தக் கால்வாயை எகிப்து மட்டுமே தன் கைக்காசைப் போட்டு வெட்டவில்லை அல்லது கட்டவில்லை. நிறைய வெளியார் உதவிகள் அதில் இருக்கிறது.குறிப்பாக சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு பிரான்ஸ் அளித்த உதவிகள் சாதாரணமானதல்ல. பின்னால் பிரிட்டனும் ஏகப்பட்ட நிதியுதவிகள் செய்திருக்கிறது.வேறு பல நாடுகளும் தம்மாலான உதவிகளைச் செய்திருக்கின்றன. கால்வாய்க் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தபோது எழுந்த பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள், அரசியல் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்தான் முன்வந்து தீர்த்து வைத்திருக்கின்றன.


இப்படி சூயஸ் கால்வாய்த் திட்டத்தில் பல தேசங்கள் சம்பந்தப்பட்டதால், பங்குபெற்ற ஒவ்வொரு தேசத்துக்கும் அந்தக் கால்வாயைப் பயன்படுத்துவதில் பங்கு உண்டு என்று ஒப்பந்தம் ஆனது.'பங்கு' என்றால் நிஜமாகவே பங்கு. Share என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அந்தப் பங்கு. பத்திர வடிவில் எழுதிக் கொடுக்கப்பட்ட பங்கு. சூயஸ் கால்வாயில் எப்படிப் பிற தேசங்களுக்குப் பங்கு உண்டோ, அதே போல எகிப்துக்கும் ஒரு பங்கு மட்டும்தான் முதலில் இருந்தது. தனது தேசத்தின் வழியே அந்தக் கால்வாய் செல்ல அனுமதியும் இடமும் அளித்ததற்கான பங்கு.


என்ன பிரச்னை ஆனது என்றால், 1875-ம் ஆண்டில் எகிப்தை ஆண்டுகொண்டிருந்த மன்னர் இஸ்மாயில் பாஷா என்பவர் தாங்கமுடியாத பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, தனது தேசத்துக்கான பங்குகளை பிரிட்டனிடம் விற்றுவிட்டார்.சூயஸ் கால்வாயில் தனக்கிருந்த பங்கை விற்று அவர்கள் கடனை அடைத்தார்களா, அல்லது புதிய நிதி உதவிகள் ஏதும் அப்போது பெறப்பட்டதா என்பது பற்றிய தெளிவான விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. (கிடைக்கும் தகவல்கள் எதுவும் முழுவதுமாக நம்பக்கூடியவையாகவும் இல்லை.)ஆகவே, எகிப்திலேயே ஓடும் சூயஸ் கால்வாயைச் சொந்தம் கொண்டாட எகிப்துக்கு உரிமை கிடையாது என்று ஆகிவிட்டது.


இதெல்லாம் பத்திர அளவில் நிகழ்ந்த விஷயங்கள். அதற்காக எகிப்து கப்பல்கள் எதுவும் சூயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமலெல்லாம் இல்லை!ஆனால், கால்வாயின் கட்டுப்பாடு முழுவதுமாக அப்போது பிரிட்டன் வசம் போய்விட்டது. எப்படி ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரு நபரிடம் அதிகமாக இருந்தால், அந்நிறுவனம் அவரது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் வருமோ அப்படி!உடனே பிரிட்டன் சூயஸ் கால்வாயைப் பாதுகாக்கவென்று ஒரு தனி படைப்பிரிவு ஏற்படுத்தி, எகிப்துக்கு அனுப்பிவிட்டது.


இதெல்லாம் மன்னர்கள் காலத்தில் நடந்தது! அவர்கள் காலமெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து, நாசரின் சர்வாதிகார ஆட்சி வந்தபோது இந்தப் பழைய ஏற்பாடுகளையெல்லாம் முதலில் தூக்கி அதே சூயஸ் கால்வாயில் விட்டெறிந்துவிட்டார்.சூயஸை நாட்டுடைமை ஆக்குவதாகவும் அறிவித்தார்.அதனால்தான் உடனே அனைத்து நாடுகளும் வெகுண்டெழுந்து எகிப்துக்கு எதிராகப் போர் முரசு கொட்டின.இஸ்ரேல் ஏற்கெனவே கடும் கோபத்தில் இருந்தது.என்னதான் உதட்டளவில் அமைதி, அமைதி என்று பேசினாலும் எகிப்து எல்லையில் இஸ்ரேலுக்கு எப்போதும் பிரச்னைதான். இவர்கள் அந்தப் பக்கம் ஊடுருவுவது, அவர்கள் இந்தப் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்று ஒரு நாள் தவறாமல் ஏதாவது சம்பவம் நடந்தபடிதான் இருந்தது.


தவிரவும் 1948 யுத்தத்தின் இறுதியில் காஸா பகுதி எகிப்து வசம் போனதிலும் இஸ்ரேலுக்கு மிகவும் வருத்தம்.வாகான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எகிப்தின் மீது போர் தொடுத்து, இழந்த பகுதியை மீட்டுவிடமாட்டோமா என்றுதான் அவர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில்தான் நாசர் சூயஸ் கால்வாயை நாட்டுடைமை ஆக்கி, யுத்தத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கத் தயாரானார்.ஒரு பக்கம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டுப் படைகள் இஸ்ரேலுடன் கைகோத்துப் போரிடத் தயாராக இருந்தன. எதிர்ப்பக்கம் எகிப்து.


இதில் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் சூயஸ் கால்வாய்ப் பிரச்னை மட்டும்தான் போரிடக் காரணம்.இஸ்ரேலுக்கு நில ஆக்கிரமிப்பு ஆசையும் உடன் சேர்ந்து இருந்தது.இரண்டு பெரிய தேசங்களின் துணை இருப்பதால் எப்படியும் எகிப்தை யுத்தத்தில் வீழ்த்தி, ஓரளவுக்காவது நிலங்களைப் பிடிக்கலாம் என்பது இஸ்ரேலின் கனவு.பிரிட்டனுக்கு இஸ்ரேலின் இந்த எண்ணம் தெரியாமல் இல்லை. ஆனால் அரபு மண்ணில் பிரிட்டன் போன்ற முதலாளித்துவ தேசம் கூட்டணி வைக்க இஸ்ரேலை விட்டால் வேறு நாதி கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.


1956-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அது நடந்தது. இஸ்ரேல் ராணுவம் எகிப்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியான சினாய்க்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த எகிப்து ராணுவத்தினரை சூயஸ் கால்வாய் வரை ஓடஓட விரட்டிக்கொண்டே போகத் தொடங்கியது.



உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் !!!

உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி 2009 ஆகஸ்ட் 6ம் தேதியுடன் 64 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் நாள் காலை வழக்கம்போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது.

எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே (Enola Gay) என்ற B-29 ரக விமானத்தில் அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை நெருங்கிக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியைத் தாண்டிவிட்டிருந்தது.


சரியாக காலை 8.15ற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரை நோக்கி முதலாவது அணுகுண்டு (பெயர் லிட்டில் பாய்) மனித குலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது.அணு குண்டு அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெறும் வெடிப்பாயுதமாகும். ஏனைய வெடிமருந்துளை ஒப்பிடும்போது அணுகுண்டின் ஆற்றல் பல ஆயிரம் மடங்கு பெரிது. அணுக்கரு பிளவு (Nuclear fission) எனப்படுவது அணு ஒன்றின் கருவானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட லேசான அணுக்கருக்களாக பிளவுறும் நிகழ்வு ஆகும்.


இவ்வணுக்கருப் பிளவின் போது நியூத்திரன்களும் 'காமா' வடிவத்தில் கதிரியக்க ஆற்றலும் வெளிப்படுகின்றன. பாரமான தனிமங்களின் பிளவின் போது பிகப் பெரிய அளவில் ஆற்றல் மின்காந்த அலைகள் ஆகவும் இயக்க ஆற்றலாகவும் வெளிப்படுகின்றன.

1939ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹான் மெயிட்னர் மற்றும் ஸ்ட்ராஸ்மன் ஆகியோர் அணுக்கரு வினைகளை ஆராயும்போது யுரேனியம் நியூட்ரான்களால் தாக்கப்படும்போது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுக்கருக்களாகப் பிளவுறுவதை உணர்ந்தனர்.


200 MeV அளவு ஆற்றல் வெளிவிடப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.முதன்முறையாக அணு ஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியளாலர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டு முயற்சியாலும், இரண்டாம் உலகபோரின்போது "Manhattan Project" என்ற பெயரில் நடந்த ரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது.


முதல் அணு ஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் எற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது பயன்படுத்தபட்டது. சின்னப்பையன் (Little Boy) தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற செய்தியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார்.


ஹிரோஷிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் வீரியத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது. ஒற்றைக் குண்டு, சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீற்றர் உயரத்தில் அக்குண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான் வெளியில் பரவியது. காற்றின் வெப்பநிலை 4,000 சதம் உயர்ந்தது. மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 விநாடிகளில் 12 ஆயிரம் மீற்றர் உயரத்துக்கு ராட்சதக் கதிர்வீச்சுப் புகை மண்டலம் எழுந்து நின்றது.


மரங்கள் தீப்பந்தங்களாகின. இரும்புத் தூண்கள் உருகி ஓடின. குண்டு வெடித்த ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. ரோஷிமாவில் இருந்த சுமார் 75 ஆயிரம் கட்டிடங்களில் 70 சதவீதமானவை சாம்பலாகின.மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9 முற்பகல் 11.02 மணிக்கு "குண்டு மனிதன்' (Fat Man) என்று பெயரிடப்பட்ட மற்றொரு அணுகுண்டை நாகசாகி நகரின் மீது அமெரிக்கப் போர் விமானம் வீசியது. நகரின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் வெடித்த அக்குண்டினால் அந்நகரில் வாழ்ந்த 280,000 மக்களில் 40 ஆயிரம் பேர் உடனடியாகவே இறந்தனர்.


இரு அணுகுண்டுத் தாக்குதல்களின் விளைவான காயங்களினாலும் கதிர்வீச்சுத் தாக்கங்களினாலும் அடுத்த ஒரு வருடத்திற்குள் இரு நகரங்களிலும் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாகினர்.ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவும் நாகசாகியில் 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின. உயிர் தப்பியவர்கள் பல ஆண்டுகள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்று நோயினாலும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணமேயிருக்கிறார்கள்.


இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே உலகைத் தரிசிக்கிறார்கள்.எப்படியோ இரண்டாவது உலக மகாயுத்தத்துக்கு பின்னரான காலகட்டத்திலே கெடுபிடியுத்தம் தீவிரமடைந்த போது 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி போன்ற சில சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்தின் விளிம்புக்கு உலகம் சென்றபோதிலும் கூட கடந்த 64 வருடங்களாக அணு ஆயுத உபயோகம் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் சோதனைகளுககாக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கபட்டுள்ளது.


1949ம் ஆண்டு சோவியத் யூனியனும் தனது முதல் அணு ஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஹைட்ரஜன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது.


1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்ய நாடுகள் முறையே (காலமுறைபடி) அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை.


உதாரணமாக, இஸ்ரேல் அணு ஆயுத வான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக் கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணு ஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாற்றுகிறது.ஜப்பானில் நேற்று 64 ஆவது ஹிரோஷிமா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஹிரோஷிமா மேயர், அடுத்த பத்தாண்டுகளில் உலகம் எங்கும் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க அழைப்பு விடுத்தார்.


இந்நிகழ்ச்சியில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். ஜப்பான் பிரதமர் டாரோ அசோவும் இந்நிகழ்வில் பங்கேற்றார். அணு ஆயுதமற்ற உலகம் வேண்டும் என்று குறிப்பிட்ட ஹிரோஷிமா மேயர், வரும் 2020ம் ஆண்டிற்குள் இது கைகூட உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதனை ஒரு நினைவு நாள் சொற் பொழிவு என சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.


அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோஷம் உலக நாடுகளில் சமாதனத்திற்கு விடுக்கப்படும் அழைப்பாகும். ஆனால் ஹிரோஷுமா, நாகசாகியின் கொடுமைகளைக் கண்டும் அணு ஆயுதப் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.இன்று அந்நாடுகள் அறிவித்துள்ள புள்ளி விபரங்கள் படி அணு ஆயுத நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை பின்வருமாறு உள்ளது:


அமெரிக்கா-10,240.

ரஷ்யா-8,400

சீனா-390

பிரான்ஸ்-350

இங்கிலாந்து-200-300

இந்தியா- 60-90

பாகிஸ்தான்-30-52

வட கொரியா-0-18


அதே நேரம் இன்று உலகில் சுமார் 40 நாடுகளிடம் அணு ஆயுத மூலப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து நோக்கும் போது அணு ஆயுதங்களின் போட்டி குறையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கும் பராமரிக்கவும் செலவிடப்படுகின்ற நிதி பற்றிய மதிப்பீடுகள் அதிர்ச்சி தருகின்றன.


அமெரிக்கா 2008ம் ஆண்டு மட்டும் இதற்காக 5,240 கோடி டாலர்களை செலவிட்டிருக்கிறது. அணு ஆயுதங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் அமெரிக்கா வருடாந்தம் 2,900 கோடி டாலர்களை செலவிடுகிறது. இது இந்தியாவின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானதாகும்.


உலக வரலாற்றில், அணு ஆயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணு ஆயுதத்தை பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தபட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணு ஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் சீனா.

இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணு ஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின.

அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்ததில் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியகையாதலால், இந்த ஓப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஓப்பந்ததை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஓப்பந்ததில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணு ஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன.


1990களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்யாவும் தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.


2005ம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வள்ர்ந்த நாடுகள்டையே பெரும் அதிச்சியலையை உருவாக்கியது. அதே ஆண்டு அக்டோபரில் வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.


ஆக, அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோஷம் வெறும் ஒரு கோஷமாகவே மட்டும் இருக்கப் போவது மட்டும் உண்மை.

84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் மரணம். !!!

கென்யாவின் அதி வயதான மாணவரான கிமானி நகங்கா மாருஜ், தனது 90 ஆவது வயதில் மரணமானார். அவர் தனது 84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் என “கின்னஸ்’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

கடந்த வருடம் தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளையடுத்து றிப்ட் பள்ளத்தாக்கிலுள்ள அவரது வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டதை தொடர்ந்து அவர், தலைநகர் நைரோபியிலுள்ள வயோதிபர் இல்ல முகாம் ஒன்றை தஞ்சமடைந்தார். சுதந்திர இயக்க படைவீரரான கிமானி, இள வயதாக இருக்கும்போது பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் 5 பிள்ளைகளின் தந்தையான அவர், வேதாகமத்தை சுயமாக வாசிக்க கற்றுக் கொள்ள விரும்பினார். அத்துடன் தனக்குரிய ஓய்வூதிய பணம் சரியாக வழங்கப்படவில்லை என சந்தேகம் கொண்டிருந்ததால், கணித அறிவும் தனக்குத் தேவை எனக் கருதினார். இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு எல்டோரெட் நகரிலுள்ள கப் கென்டுயவா ஆரம்ப பாடசாலையில் இணைந்து கொண்டார்.

கென்ய அரசாங்கம் இலவச ஆரம்பக் கல்வியை அறிமுகப்படுத்தி ஒரு ஆண்டிலேயே கிமானியின் இந்தப் பாடசாலைப் பிரவேசம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிமானியின் 30 பேரப்பிள்ளைகளில் இருவர் மேற்படி பாடசாலையில் கல்வி கற்று வந்தனர். இந் நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் கிமானிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் மனம் தளராது கல்வியை தொடர விரும்பிய கிமானி, தனது வீட்டுக்கு வந்து கற்பிக்கும்படி ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


2005 ஆம் ஆண்டில் வறிய நாடுகளினான கல்விக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி அமெரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொள்ளும் கௌரவத்தை கிமானி பெற்றார்.

மோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண்

பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள லோவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள உலகப் பிரபல மோனாலிஸா ஓவியத்தின் மீது ரஷ்ய பெண் ஒருவர் சூடான தேநீரை வீசியதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தையடுத்து தேநீரை ஓவியத்தின் மீது வீசிய 30 வயது மதிக்கத்தக்க மேற்படி பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஓவியர் லியானார்டோ டாவின்ஸியால் வரையப்பட்ட விலை மதிப்பற்ற இந்த மோனாலிஸா ஓவியமானது, குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தமையால் அந்த ஓவியத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.கடந்த வருடம் மட்டும் இந்த ஓவியத்தைப் பார்வையிட 8.5 மில்லியன் பேர் வருகை தந்ததாக மேற்படி அருங்காட்சியக உத்தியோகத்தர் தெரிவித்தார்.

1911 ஆம் ஆண்டு இத்தாலிய அருங்காட்சியக ஊழியர் ஒருவரால் லோவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட இந்த ஓவியம், இரு வருடங்களின் பின் மீளக் கைப்பற்றப்பட்டது.தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நபரொருவர் இந்த ஓவியத்தின் மீது அமில திராவகத்தை வீசியமை குறிப்பிடத்தக்கது.



கொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை !!!

கொட்டாவி விட்டமைக்காக நபரொருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விசித்திர சம்பவம் அமெரிக்க சிக்காகோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

போதைவஸ்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனது மைத்துனர் ஜேஸன் மேபீல்ட்டிற்கு என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவதற்காக, கிலிப்டன் வில்லியம் (33 வயது) சிக்காகோவில் வில் எனும் இடத்திலுள்ள மேற்படி நீதிமன்றத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் வில்லியத்தின் மைத்துனருக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி டானியல் ரொஸாக், அச்சமயம் கொட்டாவி விட்ட வில்லியத்துக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வில்லியம் நடந்ததாக நீதிபதி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை வில்லியமின் மன்னிப்புக் கோரலை நீதிபதி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் விடுதலை செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் !!!


1. நான் மகாத்மா அல்லவே!

காந்தியடிகள் பெங்களூரில் தங்கியிருந்தார். ஒரு நாள் ஒரு மங்களை ஒரு தட்டில் தேங்களாய், பழம், வெற்றிலைப்பாக்கு, பூ முதலியன எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் தட்டை அண்ணலின் அடிகளில் வைத்து அடிகளைத் தொட்டு வணங்கி எதிரே நின்று கொண்டிருந்தாள். அண்ணல் கைகூப்பி அதை ஏற்றக்கொண்டார். அவள் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தாள். அண்ணல் மீண்டும் கைகூப்பி விடை கொடுத்தார். மறுபடி மூன்றாவது தடவையும் காந்தியடிகள் நமஸ்காரம் செய்தார். ஆனால் அவளோ, நகருவதாக இல்லை. அச்சமயம் ராஜாஜியும் அண்ணலுடன் கூட இருந்தார். காந்திஜி, ராஜாஜியிடம், ”இந்தப்பெண் ஏதாவது சொல்ல விரும்புகிறாளா? கேளுங்கள்” என்றார்.
ராஜாஜி அந்தச் சகோதரியிடம் கன்னடத்தில் பேசி அறிந்துகொண்டு ” இவளுக்குக் குழந்தை வேண்டும். நீங்கள் மகாத்மா. ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறாள்” என்று தெரிவித்தார். காந்திஜி சொன்னார். ”நான் ஒன்றும் மகாத்மா அல்லவே! ஆசீர்வாதம் எப்படிச் செய்வேன்?”





ராஜாஜி: ”நீங்கள் எவ்வளவோ பேருக்கு ஆசீர்வாதம் செய்து பலித்தும் இருக்கிறதாம். எனக்கு மட்டும் ஏன் ஆசீர்வாதம் செய்யக்கூடாது என்கிறாள் இவள்!”




காந்திஜி: ”அப்படியா! எனக்கு ஒரு சக்தி இருக்கிறது! என்று இன்றுதன் தெரிந்துகொள்கிறேன்! ஆயினும் இவளிடம் சொல்லுங்கள் கிராமத்தில் இவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனவே! ஒன்றைத் த்த்து எடுத்துக் கொண்டு ஏன் வளர்த்து மகிழக் கூடாது?”








ராஜாஜியின் மூலம் அவள் பதில் சொன்னாள்:



”உறவினர்கள் குழந்தை, ஊரார் குழந்தைகள் எல்லாரிதமும் நான் பிரியமாகத்தான் இருக்கிறேன். ஆனால் என்ன இருந்தாலும் நம்முடையதுதானே நம்முடையதாகும்?”






இதைக்கேட்டு விட்டு அண்ணல் ”நான், எனது, பிறருடையது” என்ற மோகத்தைப்பற்றி சிறந்த உபதேசம் செய்தார். எதற்கும் அச்சகோதரி அசைந்து கொடுக்கிறவளாக்க் காணோம். இறுதியில் அண்ணல் ”ஆண்டவன் உனக்கு ஆண்குழந்தை அளித்தால் நான் தடுக்கவா போகிறேன்?” என்று சொன்னார்.



இதையே ஆசியாக்க் கொண்டு அச்சகோதரி போய்ச் சேர்ந்தாள்!








2. ஓய்வு நேர வேலைக்கு ஊதியம் எதிர்பார்க்கக்கூடாது




”யங் இந்தியா” பத்திரிகையை அடிகள் ஏற்றுக்கொள்வதற்கு முன் ஒரு நாள் அதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதன் அப்போதைய ஆசிரியர் ஆர்.கே. பிரபுவும் அருகே இருந்தார். அடிகள் அவரிடம், ”இதற்குச் செய்திகள் எங்கிருந்து சேகரிக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
பிரபு: ”யங் இந்தியா”, பாம்பேகிரானிக்கிள்” இவற்றிற்கு மாற்றாகப் பல பத்திரிகைகளை வருகின்றன. அவற்றிலிருந்து கத்தரித்து எடுக்கிறேன்.
காந்திஜி: இந்த வேலையில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?”





பிரபு: ‘இந்தப் பத்திரிகைக்கு வேண்டிய செய்திகள் தயாரிக்க அரைமணியைவிட அதிகமாவது அபூர்வம்தான்!” காந்திஜி வியப்புடன் சொன்னார்: ”நான் தென்னாப்பிக்காவில் இருந்த போது ”இந்தியன் ஒபினியன்” நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது மாற்றாக சுமார் 200 பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. நான் அவற்றை மிகவும் கவனமாய்ப படிப்பேன். அவற்றிலிருந்து ஏதாவது செய்தி எடுப்பதற்கு முன்பு இதனால் வாசகருக்கு உண்மையிலேயே பயன் உண்டு என்று தெரிந்துதான் எடுத்துக் கொள்வேன். பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்பவன் தன் பொறுப்பை மிகவும் கடமை உணர்வுடன் ஈடேற்ற வேண்டும். பத்திரிகைக் தொழில் என்ன? எல்லாத் தொழிலிலுமே இந்தக் கடமையுணர்வு தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சரியா, இல்லையா?






பிரபு சற்றே வெட்கத்துடன், ”ஆம் உண்மைதான். ஆனால் ”பாம்பே கிரானிக்கிள் ஆசிரியர் குழாத்தில் இருக்கும் என்குக அந்த வேலை செய்யவே வாரத்தின் நாள் எல்லாம் போய்விடுகின்றன. பிறகு இதை மிகவும் விரைவில் முடிக்க வேண்டி நேர்ந்து விடுகிறது.”
காந்திஜி சட்டென்று இதற்கெல்லாம் உங்களுக்கு சன்மானம் எவ்வளவு கொடுக்கப்படுகின்றது? என்று கேட்டார்.






பிரபு: ஒரு பத்திக்கு பத்து ரூபாய்க் கணக்கில் கிடைக்கிறது.
ஒரு பத்தி பத்து அங்குலம் தான் இருக்கும். அதுவும் பத்து பாயிண்டு எழுத்துக்கள் கொண்டது. ஆகவே கணக்குப் பார்த்தால் நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய் அவருக்குக் கிடைத்து வந்தது. காந்தி அடிகள் தனக்குள் கண்க்குப் போட்டுப் பார்த்துவிட்டு ”கிரானிக்கிளில் வேலை செய்வதற்கு எவ்வளவு கிடைகிறது?” என்று கேட்டார்.






பிரபு: மாதம் நானூறு ரூபாய். காந்தி அடிகள் ஒரு கணம் தயங்கினார்.மேலே சொன்னார்: ”யங் இந்தியா” வுக்காக நீங்கள் பணம் வாங்கிக் கொள்வது சரி என்று படுகிறதா உங்களுக்கு? இந்தப் பத்திரிகை பணம் ஈட்டும் இதழல்ல என்ற நீங்கள் அறிவீர்களை அல்லவா? இது தேசபக்தியின் தொண்டுவேலை. இதன் மூலம் அதன் செலவுக்குக் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும்போது இதை நடத்துகிறவர்கள் பளுவைக் கூட்டுவது உங்களுக்கே சரியாகத் தோன்றுகிறதா?






பிரபு: ”உரிமையாளர்கள் விரும்பிக் கொடுப்பதையே நான் வாங்கிக் கொள்கிறேன். நான் பிடிவாதமாக எதுவும் கேட்கவில்லையே!” காந்திஜி சொன்னார்:, ”சரிதான். இருந்தாலும் நானாக இருந்தால் ஒர் பைசா கூட வாங்கிக் கொள்ள மாட்டேன். உங்கள் முழு நேர வேலைக்குத் தகுதியாக ”பாம்பே கிரானிக்கிள்’ கார்ர்கள் ஊதியம் தந்து விடுகிறார்கள். ‘யங் இந்தியா’வுக்குச் செய்வது ஒழிந்த நேரத்தில் செய்கிற வேலை! முழு நேரத்துக்கும் ஒரு இடத்தில் சம்பளம் கிடைக்கும் போது இடையில் செய்யும் வேலைக்கும் ஊதியம் வாங்குவது சரியில்லை. அதை எதிர்பார்க்கவும் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படித்தானில்லையா?






காந்திஜி பிரபிவின் உள்ளத்தில் அறநெறியின் அருமைப் பாடம் ஒன்றைப் பதிய வைக்க முயன்றார். பிரபு அதன் புது ஒளியில் கொஞ்சம் திடுக்கிட்டார். அவர் மிகவும் பணிவுடம் தலையை மட்டும் அசைத்துவைத்தார், ஒத்துக்கொண்டதற்கு அறிகுறியாக.








3. என் படுக்கையை இதன் மேலேயே விரி




எரவாடா சிறையில் மழை வரும் போதெல்லாம் கட்டிலைத் தூக்கித் தாழ்வாரத்தில் போடுவது சிரம்மாயிருக்கும். எனவே காந்தியடிகள் மேஜரிடம் லேசான கட்டில் ஒன்று கேட்டார்.






அவர் ”(தேங்காய் நார்க்) கயிற்றுக் கட்டில் இருக்கிறது. போதுமா? அல்லது தில் நாடாப் பின்னித் தரட்டுமா? சொல்லுங்கள்” என்று கேட்டார்.






மாலையில் கட்டில் வந்தது. கயிற்றுக் கட்டில்தான். அடிகள், ‘நாடா வேண்டாம். இதன் மேலேயே என் படுக்கையை விரியுங்கள்’ என்று சொல்லி விட்டார்.






வல்லபாய் சொன்னார்: என்ன, நீங்கள் இதில் தூங்குவீர்களா? ஏற்கனவே மெத்தைக்குள்ளேயே தேங்காய் நார்! கட்டிலிலும் தென்னங்கயிறு. பிறகு என்ன மிச்சம், கட்டிலின் நான்கு மூலையிலும் தேங்காயைக் கட்டிவிட வேண்டியதுதான். இது அபசகுணம், நாளையே நான் நாட போட்டுப் பின்னச் செய்து விடுகிறேன்.






காந்திஜி: இல்லை வல்லபாய்! நாடா என்றால் அழுக்குச் சேரும். தண்ணீர்விட்டுச் சுத்தம் செய்ய முடியாது. நார்க் கயிறென்றால் சுலபமாக்க் கழுவிவிடலாம்.






வல்லபாய்: வண்ணானிடம் இன்று போட்டால் நாளை வெளுத்துக் கொண்டுவந்து விடுகிறான்!





காந்திஜி: ஆனால் அவிழ்த்தல்லவா போடவேண்டும். இது என்றால் கட்டிலில் வைத்தே அலம்பிவிடலாமே!”






மகாதேவ தேசாயும் மகாத்தமாவின் பக்கம் சேர்ந்து கொண்டார். ”இதை வெந்நீரிலும் கழுவலாம். மூட்டைப் பூச்சியும் அடையாது” என்று சொன்னார்.






வல்லபாய்: சரிதான், நீரும் சேர்ந்து விட்டீரல்லவா? இந்தக்கட்டிலில் இருக்கிற மூட்டைப்பூச்சி, தெள்ளுப்பூச்சிக்கு கணக்கே இல்லை.
காந்திஜி சொன்னார்: ஏன் வீண் வம்பு! நான் இதில் தான் தூங்கப் போகிறேன்.எனக்கு குழந்தையிலிருந்தே இதனுடன்தான் பழக்கம். எங்கள் அம்மா ஊறுகாய் போட இஞ்சியை இதன் கயிற்றில் தேய்த்துதான் தோல் நீக்குகிற வழக்கம்!






வல்லபாய்: தோல் நீங்கி விடுமல்லவா! இதோ நான்கைந்து எலும்புகளை மூடிக் கொண்டிருக்கிற உங்கள் தோலும் உரிந்து போகட்டும்! அதற்குத்தான் சொல்கிறேன் நாடா பின்னியே ஆகவேண்டும்.
காந்திஜி: ‘விளக்குமாற்றுக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சலம் கதையாகிவிடும். (குதிரை கிழமாம்! லகான் மட்டும் உயர்ந்ததாம்) இந்தக் கட்டிலுக்கு நாடா பொருந்தாது. இதற்குத் தென்னை நார்க்கயிறுதான் சரி. தண்ணீர் தெளித்தால் போதும், துவைத்து வேட்டி போல் அழுக்கு நீங்கிவிடும். இது மடிக்கவும் மடிக்காது. எவ்வளவ வசதி!”




வல்லபாய: சரி, நான் சொல்கிறதைக் கேட்காது போனால் உங்கள் இஷ்டம்.




காந்தி அடிகள் அதே கட்டிலைத்தான் பயன்படுத்தினார்கள்.







4. உனக்குத் திருமணம் பெருந்தேவை



எரவாடாச் சிறையில் அடிகள் இருக்கும்போது வெளி நாடுகளிலிருந்து அவருக்கு அநேக கடிதங்கள் வரும். மார்கரேட்டு என்ற பெயருள்ள ஒரு பெண்மணி அன்பு த்தும்பும் மடல்கள் எழுதி வந்தாள். ஒருநாள் அவள் அடிகளைச் சந்திக்க சிறைக்கு வந்தாள். மகாதேவ தேசாய்க்கு அவளைப்பார்த்ததும், ‘இது சரியான அசடு’ என்று தோன்றிற்று. அவர் காந்தியடிகளிடம் கேட்டார். இவளை இவ்விதம் வர அனுமதிக்கக்கூடாது. இவள் ஏன் இங்கு வந்தாள் என்று நமக்குத் தெரியாது. வேளை தேடி வந்தாளோ அல்லது வேறு என்ன காரணமோ! அவள் தேடி வந்தாளோ அல்லது வேறு என்ன காரணமோ! அவள் நாடு கடத்தப்பட்டு வந்திருப்பாள் போலவும் தோன்றுகிறது.






காந்திஜி உறுதியாகச் சொன்னார்: அவளைக்கண்டிப்பாய் வரச்சொல், அவளிடம் ஹரிஜன வேலை வாங்கவேண்டும். அவளைப் பார்க்காமல் அவள் எதற்கு வந்தாள், எப்படிப்பட்டவள், வேலை செய்வானா என்றெல்லாம் எப்படி முடிவு செய்ய முடியும்?






கடைசியில் அவள் வந்தாள். காந்தியடிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டு ”நான்பொய் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். காரணமும் தவறாகவே சொல்லியிருக்கிறேன். இங்கே இருக்க வேண்டிய காலக்கெடுவும் பொய். பாபுஜி! நான் விரதம் எடுத்துக் கொள்கிறேன். என்னை ஆசிரமத்துக்கு அனுப்பிவிடுங்கள். எனக்கு நீங்கள்தான் கடவுள். என்னை இந்தியப் பெண்ணாக்கி விடுங்கள் யாருக்காவது. தத்துப் பெண்ணாக்குங்கள். இல்லை என்றால் பிரம்சரிய விரதம் எடுத்துக்கொண்டிருக்கும் யாருக்காவது என்னை மணம் செய்து கொடுத்துவிடுங்கள்” என்று புலம்பினாள்.






கேட்ட காந்தியடிகள் சிரித்தார். மூன்றாவது நாளே அவள் மண்டுத்தனம் வெளியாகிவிட்டது. காந்திஜி பரிகாசம் பேசுகிறார். அவர் எப்படிக் கடவுளாக முடியும். அவளை அவர் ஆண்கள் உடை உடுத்தச் சொல்லி அறிவுரை சொன்னார். இது அநாகரிகம் என்று அவள் நினைத்தாள். வேறு ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் அங்கிருந்தாள். அவள் பெயர் நீலா நாகினி. அவள் கழந்தை மகாதேவ தேசாயின் தோளில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட மார்கரெட் எரிச்சலுடன் அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிட்டாள். காந்தியடிகள் சத்தம் போட்டார். ”உனக்கு வெட்காமியல்லை! குழந்தையை இப்படியா இழுத்துத் தள்ளுவது? இது குழந்தையா, கல்லா?
வெட்கமில்லாமல் அவள் சொன்னாள்: என் நாயைக்கூட நான் இப்படித்தான் தள்ளுவேன். ஒன்றும் ஆவதில்லையே!
காந்திஜி: குழந்தைக்கும் நாய்க்கும் வேறுபாடு இல்லையா?
மார்கரெட்டு: என் நாயையே நான் குழந்தையைப் போல் தான் பாவிக்கிறேன்.






இதைக்கேட்டு காந்திஜி சொன்னார்: சரிதான் உனக்குத் திருமணம் தேவைதான். அதுவும் பிரமசரிய விரதம் எடுத்துக்கொண்டவனுடன் கூடாது. பிள்ளை பெற விரும்புகிற ஒருவருடனும் ஒழுங்கா முறையாகத் திருமணம் செய்துகொள். பிறகு தெரியும் குழந்தை என்றால் என்ன தவறு.






அவள் மிகவும் நிஷ்டூரம் வாய்ந்தவள். அதற்காக அடிகள் அவளை ஒதுக்கவில்லை. அவளை அரசியலிலோ ஒத்துழையாமை இயக்கத்திலோ பங்கு எடுத்துக்கொள்ளவிடாமல் ஹரிஜனத் தொண்டு செய்யத் தேவையான பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.







5. சாவுடன் சண்டைப்போட முடியாது.




1933 - ஆம் ஆண்டில் எரவாடா சிறையிலிருந்த காந்தியடிகளுக்கு அவர் விருப்பப்படி ஹரிஜனத் தொண்டு செய்ய அரசு வசதிகள் தரவில்லை. அவர் உடனே உண்ணாநோன்பு தொடங்கிவிட்டார்., மே 29 இல் தான் 21 நாள் உண்ணாவிரதம் முடிந்திருந்தது, ஆகஸ்ட் 16 இல் இந்த விரதம் தொடங்கிவிட்டது. இடையிலே மூன்று மாதங்கள்தான் கழிந்திருந்தன. உடல்நிலை பூராவும் சரியாகியிருக்க முடியாது. எனவே இம்முறை உடல் மிகவும் நோவுக்குட்படுவது இயற்கையே. உணைமையிலேயே இரண்டு மூன்று நாட்கள் தான் முடியாமல்தான் இருந்தது. அடிகளே ஒரு கடித்த்தில் இதை விவரித்திருந்தார். ”நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆகஸ்ட் 23 தேதியன்று இரவு குமட்டி வாயில் எடுத்தபோது ‘சரி போகவேண்டியதுதான், இனித்தாங்கது’ என்று முடிவு செய்துவிட்டேன். சாவுடன் சண்டைப்போட முடியாது. 24 ஆம் தேதியன்று என்னிடம் இருந்த பொருள்களைத் தானம் செய்தும்விட்டேன்.”






இவ்வளவும் செய்து விட்டு ‘இனி என்னுடன் யாரும் பேச வேண்டாம். தண்ணீரும் கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
திருமதி கஸ்தூரிபாய் காந்தியும் அருகிலிருந்தார்கள். அவரையும் ‘போ’ என்று உத்தரவு கொடுத்து விட்டார். கண்களை மூடிக்கொண்டு ராமநாமம் ஜபிக்கத் தொடங்கிவிட்டார். பாவோ அயர்ந்துபோய் அங்கேயே நின்றுவிட்டார். இதே நேரத்தில்…






தீனபந்து ஆண்ட்ரூஸ் மூன்று நாட்களாக்க் கவர்னரிடம் ”காந்திஜியை விட்டுவிடுங்கள்” என்று முறையிட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் வெற்றியடைந்திருந்தார். விடுதலை உத்தரவு பெற்றுக்கொண்டு மருத்துவ மனைக்கு வந்தார். காந்தியடிகளையும் பாவையும் அழைத்துக் கொண்டு பர்ணகுடிக்குச் சென்றார்.






கொஞ்சம் கொஞ்சமாக காந்தியடிகள் உடல் தேறிவந்தார். அவர் ”அரசு விடுதலை செய்து விட்டாலும் ஓராண்டு காலக்கெடு முடியும் வரை ஒத்துழையாமை இயக்கத்தில் நேரடி பங்குகொள்ளமாட்டேன் முக்கியமாக ஹரிஜனத் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பேன்” என்று அறிவித்து விட்டார்.






இதற்குப் பிறகு அவர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹரிஜன யாத்திரையை மேற்கொண்டார்.








6.சத்தியாகிரகத்தில் மனிதன் தானே கஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்!




1918 தொடக்கத்தில் அகமதாபாத்தின் பிளேக் நின்று அமைதி ஏற்பட்டது. மில் முதலாளிகள் ‘பிளேக் - போனசை’ நிறுத்திவிட எண்ணினார்கள். இதைக் கேட்ட நெசவுப்பகுதி தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உலகச் சண்டையின் காரணமாக சாமான்கள் விலை ஏறியிருந்தன. ஆனால் சம்பளத்தைப் போல் 75 சதவிகிதம் பிளேக் போனஸ் கிடைத்து வந்ததனால் விலை ஏற்றம் அவர்கள் வாழ்க்கையை பாதிக்காதிருந்தது. அதை நிறுத்திவிட்டால் தொல்லை வந்து சேரும்.. எனவே அவர்கள் போனஸ் இல்லாமல் சம்பளத்தையே முறையாக்க் கட்டி கொடுக்கும்படி கேட்க முடிவு செய்தனர்.






அனுசூயா பென் முன்னமேயே ”ஊடு”ப் பிரிவுத் தொழிலாளர்கள் ஹர்த்தாலுக்குத் தலைமை வகித்து நடத்தியிருந்தார். எனவே நெசவுப் பிரிவுத் தொழிலாளர்கள் அவரிடம் சென்று வேண்டினார்கள். அவர் இந்தத் துறையில் காந்திஜியிடம் யோசனை கேட்பது மிகவும் தேவை என்று எண்ணினார். நல்லகாலமாக காந்தி அடிகள் பீஹாரிலிருந்து திரும்பி வந்திருந்தாரள். அவர் இதைக் கேட்டுப் பேசிச் சிந்தித்து 35 சதவீதம் சம்பளம் அதிகம் கேட்போம் என்று முடிவு செய்தார்.
மில் முதலாளிகள் இந்த நியாயமான் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டனர். மில் முதலாளிகளும் கதவடைப்புச் செய்துவிட்டனர. போராட்டம் வலுவடைந்தது. காந்தியடிகளின் தலையீடு இருந்தால் எல்லாம் அமைதியாகவே இருந்தது.






வேலை நிறுத்தம் தொடங்கி சில நாட்களுக்குள்ளேயே செய்திஅகமதாபாத் நகரத்துக்கு வெளியே எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது. போராட்டம் தொடர்ந்து நீண்ட காலம் நடந்தால் தொழிலாளர்களுக்குத் தொல்லை நேரிடுமே என்று எண்ணி, இந்தப் போராட்டத்தில் அக்கறைகொண்ட சிலர் அவர்கள் உதவிக்கு ஒரு நிதி ஏற்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள்.






பம்பாயிலுள்ள ஒரு அன்பர் இந்த உதவி நிதிக்குப்பெரும் தொகை ஒன்று அனுப்ப விருப்பம் தெரிவித்தார். ஆனால் காந்தியடிகள் இந்தப் பிரச்சனையை எடுத்தவுடனேயே, ”கூடாது இந்த வழியை நாம் ஒத்துக்கொள்ளவே கூடாது. அகமாதபாத்திலேயே உள்ள சிலர் இவ்விதம் உதவு முன்வந்துள்ளனர். தொழிலாளர்களுக்குப் பண உதவி தேவையாயிருக்கம் என்பதும் உண்மைதான்! ஆனால் தொழிலாளர் போராட்டம் பொதுமக்கள் காசை வைத்துக் கொண்டு நடத்தப்படும் கூடாது. தொழிலாளர்கள் ஏழைகள் தாம். ஆனால் அவர்களுக்கும் சுயமரியாதை உண்டு. அதற்கு ஊறு நேராமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் சுயமரியாதை இருந்தால் கஷ்டப்பட்டாலும் பொறுத்துக்கொண்டு போராடுவார்கள். சத்தியாக்கிரஹம் என்றால் மனிதன் தானே கஷ்டப்பட்டாக வேண்டும்.” என்று உறுதியுடன் சொல்லிவிட்டார்.






அவர் மேலும் சொன்னார்: ‘வெளி உதவி கிடைத்தால் மில் முதலாளிகள் பிறர் உதவியை எதிர்பாராமல் தங்கள் ஆற்றலிலேயே போராடட்டும். அப்பொழுதுதான் முதலாளிகள், ‘இவர்கள் ஊன்றி நிற்பார்கள்’ என்று புரிந்து கொள்வார்கள். உடன்பாடு காண விழைவார்கள்” என்று சொல்லி விட்டு, தொழிலாளர் உதவிக்கு வேறு வழி தேடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ”தேவை ஏற்படும்போது ஓரளவு உதவுவோம் ஆனால் வாழ்க்கைக்குச் சரியான ஏற்பாடு ஒன்று செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டடம் நீடித்து நடக்க முடியும். உடைகிற வாய்ப்பும் இருக்காது’ என்று முத்தாய்ப்பு வைத்து விட்டார்.
கடைசியில் அவ்விதமே செய்யப்பட்டது.








7. மாவு அரைப்பது மிக நல்லது.




காந்திஜிக்கு ஒரு சகோதரி இருந்தார். காந்திஜி தென்ஆப்பிரிக்காவிலிருந்தபோது தம்மிடம் இருந்த எலாப் பொருளையும் ஆசிரமத்துக்குக் கொடுத்துவிட்டார். இந்தியா திரும்பி வந்த பிறகும் தம் சொத்துரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு ”ஏழையாகி” விட்டார்.
ஆனால் இந்த சகோதரிக்கு என்ன செய்வது? அவர் கணவரை இழந்தவர். காந்திஜி தன் செலவுக்கு யாரிடமும் காசு வாங்கமாட்டார். ஆனால் சகோதரிக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாகவேண்டும். அதனால் அவர் தன் நண்பரான பிராணஜிவன் மேத்தாவிடம் மாதம் பத்து ரூபாய் வீதம் அவருக்க (கோகீ பஹனுக்கு ) அனுப்பி வந்தார். ஆனால் சில நாட்கள் சென்றவுடன் கோகி பஹனுடைய மகளும் விதவையாகித் தாயிடம் வந்து சேர்ந்துவிட்டாள். பத்துரூபாய் இரண்டுபேருக்கும் போதவில்லை. எனவே சகோதரியம்மையார் காந்திஜிக்கு, ”செலவு அதிகரித்துவிட்டதனால் அண்டை அயலில் மாவு அரைத்துக் கொடுத்துச் செலவைச் சரிகட்ட வேண்டியிருக்கிறது” என்று எழுதினார்.







காந்திஜி பின் வருமாறு பதில் எழுதினார்: மாவு அரைத்துக் கொடுப்பது நல்லது தான். உடல் நலமும் சிறக்கும். நாங்களும் ஆசிரமத்தில் மாவு அரைக்கிறோம். நீங்கள் எப்போதும் விரும்பினாலும் ஆசிரமத்துக்கு வரலாம். முடிந்த தொண்டைச் செய்து கொண்டு வாழ முழு உரிமை உண்டு. நாங்கள் எப்படி வாழுகிறோமோ அப்படியே நீங்களும் வாழ வேண்டும். நானும் வீட்டுக்குப் பணம் அனுப்பும் நிலையில் இல்லை. நண்பர்களிடமும் அனுப்பச் சொல்ல முடியாது.






வெளியில் மாவு அரைத்துக் கொடுத்து வாழ்ந்த சகோதரிக்கு ஆசிரமவேலை கடினம் இல்லை. ஆனால் ஆசிரமத்தில் ஹரிஜனங்கள் இருந்ததனால் அவர்களுடன் கூடி இருந்து வாழ, பழங்கொள்கைகள் கொண்டு அவருக்கு மனம் ஒப்பவில்லை. அவரும் வரவில்லை.
அடிகள் ஏற்பாடும் செய்யவில்லை.








8. எனக்குத்தான் காசாசை அதிகமே




காந்திஜி ஒருமுறை டில்லியிலிருந்துபோது அவருடைய பிறந்த நாள் விழா வந்தது. பட்டணத்திலுள்ள சில குஜராத்தியர்கள் அகதிகளுக்கென்று கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு காந்தியடிகளிடம் 3 மணிக்குத் தங்கள் கூட்டத்திற்கு வருமாறு வாக்கும் பெற்றுக் கொண்டுவிட்டனர். அந்த சமயம் காந்தியடிகளுக்கு அதிகம் இருமல் வந்துகொண்டிருந்தது. சர்தார் பட்டேலுக்கு இந்தச் சேதி தெரியவந்ததும் அவர் சொன்னார்: உங்களுக்கு இவ்வளவு மோசமான இருமல் இருக்கிறது எதற்காக குஜராத்தியர் கூட்டத்திற்குப் போக வேண்டும்? னால் நாங்கள்தான் காசுப்பித்தராயிற்றே! பணம் கிடைக்கும் என்றால் சாகும்போது கூட எழுந்து அங்கே போய்விடுவீர்களே! காசு இப்படியா வசூல் செய்ய வேண்டும்! ‘ளொக்கு’ ‘ளொக்கு’ என்று இருமிக்கொண்டு கூட்டத்திற்கு என்ன போக வேண்டியிருக்கிறது? ஆனால் நீங்கள் எங்கே நான் சொல்வதைக் கேட்கப் போகிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு பட்டேல் சிரித்துவிட்டார்.






காந்திஜியும் சிரித்துவிட்டு உண்மையிலேயே மூன்று மணிக்கு அங்கே போய்விட்டார். அங்கே பேசும்போது சொன்னார்: ”ந்ந்தலால் பாய், குஜராத்தியர் என்னைக் கூப்பிடுகிறார்கள், வந்தால் காசு கிடைக்கும்’ என்று சொன்னபோது காசாசையால் ஒத்துக்கொண்டேன். ஆனால் அப்பொழுது இங்கே பேசவும் வேண்டியிருக்கும் என்று தெரியாது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது என்க்கு என் பிறந்தநாளின் மதிப்புத் தெரியாமலே இருந்து வந்தது. இந்தியாவுக்கு வந்த பிறகுதான் வேஷம் எல்லாம் தொடங்கிற்று. இதனுடன் சர்க்காவும் இணைந்திருப்பதால் இதை சர்க்கா துவாதசி என்று சொல்கிறோம். சர்க்கா அஹிம்சையின் அடையாளம். ஆனால் இன்று அஹிம்சையின் தரிசனமே கிடைக்காத ஒன்றாக ஆகிவிட்டது. இப்பொழுது சர்க்கா துவாதசி எதற்காகக் கொண்டாட வேண்டும்? ஆனால் மனிதன் சுபாவம் கையைக் காலை ஆட்டிக்கொண்டு தானிருப்பான். பலன் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி!






குஜராத்தியர் எங்கிருந்தாலும் அங்கே அஹிம்சைப் பணி புரிவார்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறேன் ஆனால் அவர்கள் சர்க்கா நூற்பார்களா, மாட்டார்களா என்பதைப்பற்றி எனக்கு ஜப்பாடுதான். சர்க்காவின் பெருமையைப்பற்றி நான் என்ன சொல்லட்டும்! இன்று சமயத்தின் பேரில் கொலை செய்தல், தீ மூட்டுதல் எல்லாம் நடக்கிறது. நாம் நம் சுதந்திரத்த்ஐ எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கறோம்? குடிமக்கள் மனதில் எவ்வளவு கட்டுப்பாடற்ற நிலை பரவியிருக்கிறது? இதை எல்லாம் நான் காணும் போது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.”






இதற்குப் பிறகு அவர் ஹிந்தி ஹிந்துஸ்தானி பற்றியும் பேசினார். ”நீங்கள் ஹிந்துஸ்தானி மொழியையும் நாகரி, உருது - இரண்டு லிபிடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பணத்துக்காக நான் உங்களுக்கு வந்தனம் செலுத்துகிறேன். நன்றியுணர்வு கொள்கிறேன். இடம் பெயர்ந்த சோகதர சகோதரிகளுக்குக் குளிரில் கம்பளிகள் மிகவும் தேவையாயிருக்கின்றன. இதை எல்லாம் நாம் தான் செய்ய வேண்டும். அரசு செய்ய முடியாது. நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு விட்டோமானால் அரசுக்கு ஆட்சியை ஒழுங்கப்படுத்துவது எளிதாயிருக்கும்.”








9. மாறுபட்ட கருத்து கொண்டிருந்த போதிலும் நாம் பரஸ்பரம் பொறுத்துக் கொள்ளலாம்




ஹரிஜன யாத்திரையின்போது சுற்றிச் சுற்றி காந்தி அடிகள் ஆஜ்மீர் வந்து சேர்ந்தார். காசிலால்நாத் சுவாமி காந்திஜி எங்கு சென்றாலும் அவர் வருவதற்கு முன் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவார். சுவாமி காந்திஜியின் ஹரிஜன நலமுன்னேற்றத் தொண்டுக்குப் பெரிய எதிரி. அவரைப்பற்றி விதவிதமான வதந்திகள் உலவின. காந்தியடிகள் மேல் கல்லை வீச என்றே சிலரை அமர்த்திவைத்திருந்தார் என்று சொன்னார்கள். ஆஜ்மீர்க்காரர்களுக்குக் கவலையாகப் போயிற்று. ஆனால் சேதியைக்கேட்ட காந்தியடிகள், ”சுவாமி லால்நாத் இவ்விதச் செயல்களைச் செய்யமாட்டரா. அவர் எவ்வளவோ தடவை என்னைச் சந்தித்திருக்கிறார். நான் இந்தச் சேதியை நம்பமாட்டேன்,” என்று மிகவும் சாதாரணமாகச்சொல்லி விட்டார்.






அப்போதே சுவாமி காந்தியடிகளைக் காண வந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவந்தது. அவரை அடிகளிடம் அழைத்துவரும் பொறுப்பு உபாத்தியாயருக்கு வந்து சேர்ந்தது. அவர் சுவாமியைப் பார்த்தவுடனேயே முகத்திலிருந்து அவர் பெரிய சண்டைக்குத் தயாராக்க் கச்சை கட்டிக்கொண்டு வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டார். ஆனால் அவர் காந்தியடிகள் இருக்கும் அறைக்கு வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது. அவர்மிகவும் மரியாதையுடனும் இயற்கையாகவும் நடந்துகொண்டார். அர்களைப் பார்த்தவர்கள் இரண்டு படு எதிரிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றே நம்பமுடியாது. லால்நாத் சுவாமி காந்தியடிகளிடம் காசி வரும் போது எங்களுடனேயே தங்குங்கள்! எங்கள் தொண்டர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்வார்கள். உங்களைக் காத்துக்கொள்வார்கள் என்று அழைப்பு விடுத்தார்.






அடிகள் உடனே, ”இது நல்ல யோசனை. எனக்குப் பிடிக்கிறது. மாறுபட்ட எண்ணம் கொண்டிருந்தாலும் நாம் பரஸ்பரம் சகித்துக்கொள்கிறோம் என்பதை உலகம் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும்,” என்று சகஜமாகச் சொன்னார்.








10. வதந்திகளை நான் நம்பத் தயாரில்லை




1925 ஆம் ஆண்டு தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் காலமான பிறகு காந்திஜி பல நாடகள் வங்காளத்திலிருந்தார். அங்கே அரசியலில் ஏற்படும் புதுச்சிக்கல்களை எல்லாம் தீர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு நாள் அவர் சாதாரணமாக ஸ்ரீமான் நளினி ரஞ்சன் சர்க்காரிடம், ”நீங்கள் எப்போதும் காலையில் எப்பொழுது விழித்துக் கொள்கிற வழக்கம்?” என்று கேட்டார்.






சர்க்கார் அவர்களுக்கு இந்தக் கேள்வி பிடிக்கவில்லை. காந்திஜியும் ஏதோ கேட்டுவிட்டார். அவர் பதில் சொன்னார். ‘சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் உண்டு.’






காந்திஜி சொன்னார்: ”அப்படியானால் நாளை முடிந்த அளவு சீக்கிரமே எழுந்து வாருங்கள். உங்களிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும்.”
சர்க்காருக்கு ஒன்றும் புரியவில்லை. சிந்தித்தார். இந்தப் பேச்சு நடந்ததே காலை வேளையில்தான். அன்று மாலை காந்தியடிகள் சர்க்கார் அவர்களிடம்,”நான் காலையில் சொல்ல இருந்த வேலை முடிந்துவிட்டது. ஆகவே நீங்கள் வரவேண்டாம்!” என்று சொல்லி விட்டார். பிறகு உண்மையையும் விவரித்தார்.






”வங்காளத்தில் பெயர் பெற்ற ஒரு கனவான் இருந்தார். அவரை வைஸ்ராய் கவுன்ஸிலில் அங்கத்தினராக நியமனம் செய்திருதார்கள். அவர் தங்கள் நண்பர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு சிரக்கார் அவர்களைப் பற்றி அவதூறாகச் சில குற்றச்சாட்டுகள் தெரிவித்தார். காந்தியடிகள் ‘நான் வெற்று வதந்திகளை நம்ப முடியாது. சாட்சி வேண்டும்,’ என்று சொன்னார். சாட்சி கிடைத்ததும் சர்க்கார் அவர்களைக் கேட்கவே காந்திஜி அவரை அதிகலையில் வரச்சொல்லியிருந்தார். அதற்கு முன்னமேயே அந்தக் கனவான் காந்திஜியைச் சந்தித்து ‘நண்பர் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. தான் சர்க்காரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்!’ என்று சொல்லிவிட்டார். அடிகளும் ‘நானே அவரையும் அழைத்துக் கொண்டு உங்களிடம் வருகிறேன்’ என்று சொன்னார்.






இதைக்கேட்ட சர்க்காரின் மனது தழதழத்தது. ”இப்படி எவ்வளவோ அவதூறுகள் கேட்டாய் விட்டது. விடுங்கள். தவிர, நான் அவ்வளவு பெரிய மனிதனுமல்ல. அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்க!” என்று சொன்னார். காந்திஜியா விடுகிறவர்? பிடிவாதம் செய்யவே சர்க்கார் அவர்கள்’நீங்கள் சங்கடப்பட வேண்டாம். நான் மட்டும் போய் வருகிறேன்’ என்றார். பிறகு அவர் போய்ச் சந்திக்கவும் செய்தார்.








11. சரி, அழைத்துச் செல், உன் மகன் தான்




ஒரு பெண்ணை அவள் தந்தை அவள் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினார். அவள் அடிக்கடி ஆசிரமத்துக்கு வந்உத போய்க்கொண்டிருந்தவள். தந்தையிடம் வாதிட்டுத் தோற்ற அவள்காந்திஜியிடம் ”என்ன செய்யட்டும்?” என்று கேட்டாள்.
காந்திஜி சொன்னார்: ‘இங்கே என்னிடம் வந்து விடு’ பெண் வந்து விட்டாள். தாய் தந்தையர் பெண் ஓடிவந்த சேதி அறிந்ததும் மிகவும் சினம் கொண்டனர். உடனே வார்தாவுக்கு வந்தனர். காந்தியடிகள் அவர்களை நன்கு கவனித்து ஒரு கஷ்டமுமில்லாமி பார்த்துகொ கொள்ளச் சொல்லி உத்தரவிட்டார்.






அவர்கள் காந்திஜியுடன் பேச வந்தனர். அந்தச் சமயம் பெண்ணும் அங்கே வந்தாள். தாய் தந்தை உள்ளே வந்ததும் காந்தி அடிகளின் அடிபணிந்தனர். காந்திஜி முறுவலித்துக் கொண்டார். நலன் பற்றி விசாரித்தார். பிறகு பெண்ணைப் பார்த்துக்கொண்டே சொன்னார்: ”இவள் என்னிடம் ஓடி வந்திருக்கிறாள். இவளை அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா? நல்லது அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பெண்”
இந்தச் சொல்லில் என்ன மாயமிருந்ததோ? தந்தை உடனே, ‘பாபூ! பெண் உங்கள் பெண்தான். உங்களிடமே இருக்கட்டும்! என்று சொல்லிவிட்டார்.
காந்திஜியும் ‘சரி, இவள் விருப்பமும் அது தான். இருக்கட்டும் இங்கேயே’ என்று விடை இறுத்தார்.










12. எண்ணத்தில் உறுதி இருந்தால் நிறைவேற வழியும் உண்டாகும்.




ஒரு அன்பர் வீட்டுக்குச் செல்வதற்கு முன் காந்திஜியுடன் சில வார்த்தைகள் பேச விரும்பினார். ஆனால் அடிகள் எதிரே வந்தவுடன் தைரியம் ஏற்படுவதில்லை. சும்மா இருந்து விடுவார். காந்திஜி ”பேசப்பா, பேசு, நீ ஏதோ பல ஆண்டுகள் முன் விரதம் எடுத்துகொ கொண்டயாம். அதைப்பற்றிப் பேச விரும்புகிறாய் என்று மாகதேவ் சொல்கிறார். எனக்கு நீ விரதம் எடுத்துகொண்டதே மறந்து விட்டது. நல்லது, சொல்!” என்று தூண்டினார்.






அவருக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. திக்கித் தயங்கிச் சொன்னார்: ”ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் சில பிரதிக்ஞைகள் ஏற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது - ”‘இப்போது? அதைக் காப்பாற முடியவில்லை அது தானே!’






மகாதேவ தேசாய்: இல்லை. செய்தி நேர்மாறானது!’
காந்திஜி: அப்படி என்றால் இந்தக் கண்ணீர் மகிழ்ச்சிக் கண்ணீரா?
அந்த அன்பர் வாய்மூடியே இருந்தார். கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. காந்திஜி சொன்னார்: முதன் முதல் நான் என் தந்தையிடத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டபோது நா எழவேயில்லை. அதனால் நான் எழுதிக் கொடுத்துவிட்டேன். அதைப்போல நீயும் எழுதிக் கொடுத்துவிடேன்.






அன்பர் மேலும் கண்ணீர் பெருக்கிணச் சும்மா இருந்தார். சற்றுநேரம் சென்று கொஞ்சம் தைரியம் வரவே அவர் சொன்னார்: ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என் நோன்பைப் பற்றி எழுதியிருந்தேன். அதில் தாங்கள் ஒரு வார்த்தையைத் திருத்தியிருந்தீர்கள்.”
காந்திஜி ”அப்படியா” நான் மறந்தே விட்டேன்!

அந்த அன்பர் கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவுறுத்திச் சொன்னார்: பாபூ, எனக்கு உள்ளே ஒரு கோரமான சண்டை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் கடவுள் கருணையால் பிரதிக்ஞையை வார்த்தையளவிலும் சரி, பொருள்ளவிலும் சரி, காத்துக் கொண்டு வருகிறேன்.”காந்தியடிகள் சொன்னார்: ‘


*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP